Thursday 29 August 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 19


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 19
            ஒருநாள் எதேச்சையாகச் சமையலறைக்குச் சென்றாள் தாட்சாயணி. அங்கே வாசலுக்கு முதுகைக் கொடுத்துக்கொண்டு நின்றிருந்தாள் சுந்தரி. அதனால் தாட்சாயணியின் வருகையை அவள் அறியவில்லை. சுந்தரி ஒரு முழுமாங்காயை ஆர்வத்துடன் காலிசெய்து கொண்டிருந்தாள்.
            ஒரு துண்டைக்கூட தின்னமுடியாமல் பல் கூசச்செய்யும் அந்த மாங்காயைச் சுவைத்துச் சுவைத்துச் சுந்தரி முழுதுமாகத் தின்றதைப் பார்த்துத் திகைத்தாள் தாட்சாயணி. மனத்தில் சந்தேகத் தேள் கொட்டியது.
            நேரே கணவனிடம் சென்றாள். சுந்தரியிடம் தான் கண்ட மாற்றத்தை உரைத்தாள்.
                'அவளப்பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்னு சொன்னீங்களே! இப்ப என்னாயிடிச்சி பாத்தீங்களா? நம்ம கிட்டயே மறைச்சிருக்கா',  பொரிந்தாள்.
            சந்திரன் நிதானித்தான். 'தாட்சும்மா. . . அவ நம்ம வீட்டுக்கு வந்தப்ப எனக்கும் இதப்பத்தி எதுவும் தெரியாது. ஆனா போனவாரம் ஒருநாள் நான் முன்னாடி வந்துட்டேன் இல்ல. அப்ப அவ அழுதுகிட்டே இருந்தா. அவள ஒருத்தன் காதலிச்சு ஏமாத்திட்டானாம். பாவம்! தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொன்னா. நான்தான் ஆறுதல் சொல்லி வெச்சேன்.'
                'அத ஏன் அன்னிக்கே என்கிட்ட  சொல்லல?'
                'சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனா அவளப்பத்தி நீ என்ன நெனப்பியோன்னு அவ ரொம்ப பயந்தா. நான் எங்க கரெஸ்பாண்டென்ட் கிட்ட சொல்லி இதுக்கு ஏதாச்சும் ஒரு நல்ல முடிவு எடுக்கனுமுன்னு நெனச்சிட்டிருந்தேன். ஆனா அவரு இப்ப சிங்கப்பூர்ல மக வீட்டுக்குப் போயிருக்காராம். அவரு வந்ததும் இவளை அனுப்பிடலாம்னு நெனச்சிருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடிச்சி' - குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றிப் பொய்களை அடுக்கினான் சந்திரன். வேறு வழியில்லை. இப்பொழுது இதைச் சமாளித்தாக வேண்டும்.
                'எப்படி? இதெல்லாம் மூடி மறைக்கற விஷயமா? ஐயாவுக்குத் தெரியுமாம்! என்கிட்ட மறைச்சுட்டாராம்! ஒன்னு கெடக்க ஒன்னு ஆனா என்னாவறது? என்கிட்ட முதலியேலே சொல்லி இருக்கணும்' - தன் கணவனின் அப்பாவித்தனத்தை நினைத்து நொந்துகொண்டாள் தாட்சாயணி.
                'இன்னும் ரெண்டு வாரம் பொறுத்துக்கோம்மா. கரஸ்பாண்டென்ட் திரும்பி வந்ததும் எல்லாம் சரியாயிடும். நடுவுல நீ ஏதாச்சும் சொல்லப்போக அவ ஒன்னு கெடக்க ஒன்னு பண்ணிக்கிட்டா நமக்குத்தான் இடைஞ்சலாப் போயிடும். இந்த விஷயத்த நிதானமாத்தான் செய்யணும்' - அவன் சொற்களில் லேசான அச்சுறுத்தலும் தொனித்தது.
            அதென்ன இரண்டு வாரக் கணக்கு? அதற்குள் என்ன சாதிக்கலாம் என்று சந்திரன் நினைக்கிறான்? இதென்ன, வேண்டுமென்றால் சுமப்பதற்கும் வேண்டா மென்றால் இறக்கிவைத்து விடுவதற்கும் கையில் உள்ள சுமையா?
            ஏதோ ஒரு பேச்சுக்கு வாயில் வந்ததைச் சொன்னான். அம்மட்டில் இரண்டு வாரம் தாக்குப் பிடிக்கலாம்.
                'இதோ பார். அவளக் கண்டுக்காம விட்டுடு. இந்த விஷயம் தெரியும்னு நீ காட்டிக்க வேண்டாம்! எல்லாம் நான் பாத்துக்கறேன்.'
                'ஒரு புள்ளத்தாச்சிய எப்படிங்க வேல வாங்கறது?'
                'எத்தனயோ புள்ளத்தாச்சிப் பொம்பளைங்க சித்தாளா வேலை செய்யில? ஆபிஸ்ல எத்தன கர்ப்பிணிங்க வேல செய்யறாங்க! அவங்கல்லாம் வேலைய விட்டுட்டு வீட்லயா இருக்காங்க? அப்படித்தான் இதுவும்! நீ பேசாம இரு. அவ மெதுமெதுவா வேலைய செய்யட்டும். நீ ஏன் மனசப் போட்டு அலட்டிக்கற?'
            சுந்தரியை உடனடியாக அவள் கர்ப்பத்தைக் காரணம் காட்டித் தாட்சாயணி விரட்டிவிட்டுவிடக் கூடாதே என்று அஞ்சி மனத்துள் உறைந்தான் சந்திரன்.
                'நான் அதுக்குச் சொல்லலைங்க, எப்படிக் கண்ணுக்குத் தெரிஞ்சே ஒரு புள்ளத்தாச்சிய அதச் செய், இதச் செய்யினு வேல செய்யச் சொல்லறது? அது பாவம் இல்லையா?'
                'நாம இப்ப திடீர்னு வெரட்டிவிட்டா அவ எங்க போய் நிப்பா? ஆதரவு இல்லாத ஒரு பொண்ண நிர்க்கதியா விரட்டி விடறதுமட்டும் பாவமில்லையா? அதனால கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். எல்லாம் நல்லபடியா நடக்கும்!' 
சந்திரனின் கருணைக்கு அளவே இல்லையா? - நெகிழ்ந்தாள் தாட்சாயணி.

(தொடரும்)

No comments:

Post a Comment