Saturday 25 February 2017

இருண்ட வீடு

   
அவளுக்கு இரண்டு புதல்வர்கள். அவர்கள் படிப்பில்தான் அவளுக்கு எவ்வளவு அக்கறை? பெரியவன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். சின்னவன் எல்.கே.ஜி.யில் இருந்தான். இருவரையும் நன்றாகப் படிக்கவைத்துப் பெரியஆளாக ஆக்கவேண்டும் என்று அவள் எண்ணியதில் என்ன தவறு இருக்கமுடியும்?
அவர்கள் இருவரும் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கவேண்டுமென்றால் கல்வியின் அடித்தளம் சிறப்பாக அமையவேண்டாமா?
செய்தித்தாளில் புத்தகக் கண்காட்சி விளம்பரம் வந்திருந்தது.
ஏன்னா, நாம பொஸ்தகக் கண்காட்சிக்குப் போலாமா?’
ஜானு, நேக்கு அதுக்கெல்லாம் நேரம் ஏதுடி? நீ வேணும்னா உஷாவ அழைச்சிண்டு போ!
நல்ல வசதியான குடும்பம்தான். அறுபதுக்கு நாற்பது பிளாட்டில் ஆயிரத்து எண்ணூறு சதுரஅடியில் பெரிய வீடுதான். ஜகனுக்கும் நல்ல உத்தியோகம். கைநிறையச் சம்பளம். போதாததற்கு ஜானகியின் பேரில் எல்.ஐ.ஸி. ஏஜெண்ட் எடுத்து இரவு பகலாகப் பாலிசி சேர்க்கிறான். அதிலும் மாதாமாதம் கணிசமான தொகை வந்து கொண்டிருக்கிறது. வசதிக்குக் கேட்கவா வேண்டும்?
பானை பிடித்தவள் பாக்கியசாலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டாமோ? ஜானுவின் கை ஓட்டைக் கை. அதில் குடம் குடமாகத் தங்கத்தைக் கொட்டினாலும் தங்காது.
சம்பாதிக்கத் தெரிந்த ஜகனுக்கு அதனைக் கட்டும் செட்டுமாகச் செலவுசெய்து சேமிப்பதில் அக்கறை இல்லை. எல்லாம் ஜானுவின் பொறுப்பில்தான்!
ஆவடியிலிருந்து அவள் ஆட்டோ எடுத்தாள். அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து ஓடத்தான் செய்தது. பேருந்தில் போனால் பத்துப் பதினைந்து ரூபாயில் முடியும் செலவு. ஆமாம்! காச சேத்துச் சேத்து வெச்சுதான் என்ன செய்யப்போறோம்? போவட்டும் போ! அலுங்காம குலுங்காம ஆட்டோல போலாம்என்று உஷாவுடன் கண்காட்சிக்குப் புறப்பட்டாள் ஜானகி.
இந்தாப்பா, மவுண்ட் ரோடு போயிட்டுத் திரும்ப வரணும். எவ்வளவு கேக்கற?’
உங்களுக்குத் தெரியாதாம்மா? பாத்துப் போட்டுக் குடுங்கம்மா’.
நீ சொன்னாத்தானே தெரியும்பா!
நூத்தி அம்பது ரூபா ஆவும்மா’.
கொஞ்சம்  கொறச்சிக்கக் கூடாதா?’
நானே கம்மியாத்தான் கேட்டிருக்கேம்மா!
சரி சரி . . .  வண்டிய எடுப்பா!
புத்தகக் கண்காட்சியில் நூல் விற்பனை நிலையங்களின் பேனர்கள் வரவேற்றன.
அங்குதான் எத்தனை கடைகள். புத்தகங்கள்! புத்தகங்கள்! எங்கு நோக்கினும் புத்தகங்கள்!! வண்ண வண்ண அட்டைகள்! வழு வழுவென்ற தாள்! பிசினின் வாசம் மறையாத ஈரம் இன்னமும் காயாத புதிய புத்தகங்கள். ஒரு ரூபாயிலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் கண்ணைக் கவர்ந்தன.
புடவைக் கடைகளில் மனத்தைப் பறிகொடுக்கும் மங்கையரை நாம் பார்த்ததுண்டு. ஜானகி இந்த விஷயத்தில் சற்றே வித்யாசமானவளோ? தன் புதல்வர்களுக்காகப் புத்தகங்களை வாங்கிக் குவிக்க ஆசைப்பட்டாள்.
ஒரு கடையில் வண்ண வண்ணப் படங்களோடு வழுவழு தாளில் சிறுவர்களுக்காகவே எழுதப்பெற்ற வெளி நாட்டுப் புத்தகங்கள் அவள் கவனத்தை ஈர்த்தன. சிறுவர்களுக்காகப் பெரிய பெரிய எழுத்தில் அச்சிடப் பட்டிருந்தன. கருத்தைக் கவரும் படங்கள்! கனம் கனமான புத்தகங்கள்! தாவரங்களைப் பற்றி ஒரு புத்தகம், விலங்குகளைப் பற்றி ஒரு புத்தகம், அறிவியல் அறிஞர்களைப் பற்றி ஒரு புத்தகம், நாடுகளைப் பற்றி ஒரு புத்தகம், அரசர்களைப் பற்றி ஒரு புத்தகம், இப்படி ஒவ்வொரு பொருள் பற்றியும் ஒரு புத்தகம்.
பெரியவனும் சின்னவனும் சண்டை போட்டுக் கொண்டு இழுத்தாலும் சீக்கிரத்தில் கிழிந்துவிடாது. கனமான அட்டை! ஒவ்வொரு புத்தகத்தைப் பாதுகாக்கவென்று தனித்தனியாக ஓர் அட்டைப் பெட்டி கச்சிதமாக! என்ன ஒன்று . . . குழந்தைகளால் தூக்கத்தான் முடியாது. தானே மடியில் புத்தகத்தை வைத்துக்கொண்டு சொல்லித் தரலாம் - யோசித்தாள் ஜானு.
மொத்தம் பத்து புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகத்தின் பின்பகுதி அட்டையிலும் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ரூபாய் என்று விலை ஒட்டப்பட்டிருந்தது.
கடைக்காரனிடம் அந்தப் புத்தகங்களின் தள்ளுபடி போகத் தரவேண்டிய விலையை விசாரித்தாள் ஜானகி.
இவள் என்ன கிண்டல் செய்கிறாளா?’ -கடைக்காரன் ஜானகியை ஏற இறங்கப் பார்த்தான்.
ஒரு சிலருக்கு இதே பிழைப்பாகிவிட்டது. கடையில் ஒவ்வொரு பொருளாகப் பார்த்து விலை விசாரிப்பார்கள். கடைசியில் எதையும் வாங்கமாட்டார்கள். தெருவில் ஏதேனும் பொருள் விற்றுக்கொண்டு போனால் வேலை மெனக்கெட்டு அதனைக் கூப்பிடுவார்கள். என்ன? ஏது? என்று விசாரிப்பார்கள். எவ்வளவு விலை என்பார்கள்? குறைத்துத் தருவானா? என்று கேட்பார்கள். அவனும் உங்களுக்கு எவ்வளவுக்குதான் வேணும்? கேளுங்க’, என்று பரிதாபமாகக் கேட்பான். வெயிலில் அலைந்துகொண்டு இருப்பதைவிட 'ஏதோ இரண்டு இடத்தில் வியாபாரத்தை முடிச்சோமா? மதிய சாப்பாட்டைத் திருப்தியாகச் சாப்பிட்டோமா? ஏதாவது மரத்தடி நிழலில் சற்றுநேரம் கண் அசந்தோமா?’ என்று எதிர்பார்த்திருப்பான்.
விலைகேட்டவர்கள் கடைசியில், 'இத வாங்கி நான் என்னா செய்யறது?’ என்பார்கள்.
அப்பறம் எதுக்குக் கூப்ட்டு வெல வெசாரிச்சிங்க?’
சும்மாத்தான். என்ன வெல விக்குதுன்னு தெரிஞ்சிக்கலாமேன்னுட்டுதான்என்று கூறிவிட்டுச் சட்டென்று வீட்டிற்கு உள்ளே சென்று மறைந்து விடுவார்கள்.
வெல கேக்கற மூஞ்சியப் பாருஎன்று திட்டிக்கொண்டு பொருளை மூட்டை கட்டிக்கொண்டு நகர்வான் வியாபாரி.
ஜானகியை ஏறிட்டுப் பார்த்த புத்தகக் கடைக்காரர் முகத்திலும் இத்தகைய ஏளனமும் எகத்தாளமும் தெரிந்தன. அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் இத்தகைய விலையுயர்ந்த புத்தகங்களைப் பெரும்பாலும் சாதாரண மக்கள் சொந்த உபயோகத்திற்கு வாங்கிவிட முடியாது. பெரிய பெரிய நூலகங்களில் மட்டுமே வாங்கி வைக்கலாம். இல்லையென்றால் எப்படிச் செலவுசெய்துப் பணத்தைக் கரைப்பது என்று தெரியாமல் செலவுசெய்யும் பெரும்பணக்காரர்கள் வாங்கக்கூடும்.
இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியான புக்குங்க!
அவன் சொல் ஜானகியை அவமானப்படுத்தியது. அவனை ஒருவழி செய்யவேண்டும் என்று மனத்தில் நினைத்துக்கொண்டாள்.
எல்லாம் எங்களுக்குத் தெரியாதா? தள்ளுபடி போனா எவ்வளவு வரும்னு சொல்லுங்க போதும்’.
அவளுடைய இருமாப்பு அவனைத் திகைக்க வைத்தது. கடந்த மூன்று நாட்களாக எத்தனையோ பேர் அந்த நூல்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் கை பட்டுப்பட்டுச் சற்றே அங்கங்கு அழுக்காகிவிட்டதே என்று கடை உரிமையாளர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். விலை அதிகமாக இருப்பதால் இரண்டே இரண்டு செட்டுதான் ஆர்டர் செய்துப் பார்வைக்கு வைத்திருந்தார். அதைப்போய் வாங்குவதென்றால் நிச்சயமாக அவள் பணக்காரியாய் இருக்கவேண்டும். ஆனால் ஆளைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே!
மொத்த வெல இருபத்தஞ்சாயிரம் ரூபாய்ங்க. தள்ளுபடி போனா இருபத்ரெண்டாயிரத்து இருநூத்தம்பது ரூபா வருங்க’.
அப்டியா, சரி பில் போடுங்க!
விலையைச் சொன்னபிறகும் பின்வாங்காமல் நிற்கிறாளே? ஒருவேளை மென்ட்டலாக இருக்குமோ?’
புக் வேணும்னா யோசிச்சிச் சொல்லுங்க. பில் போட்டப்பறம் ரிட்டர்ன் எடுத்துக்க மாட்டோம்’.
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?’ -ஜானகியின் குரலில் கோபம் தெறித்தது.
அவள் செயல் கடைக்காரனுக்கே அதிகமாகப் பட்டது; ஆச்சரியமாகவும் இருந்தது. அவனாகவே பதினைந்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி செய்து பில் போட்டான்.
புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு அருகில் இருக்கும் எல்.ஐ.சி. அலுவலகத்தில் கட்டிவிட்டுவரும்படி அந்த மாதம் முழுக்கச் சேர்த்த எல்.ஐ.சி. பாலிசித் தொகையான முப்பதாயிரம் ரூபாயை ஜானகியிடம்  கொடுத்திருந்தான் ஜகந்நாதன்.
உஷாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. என்ன இருந்தாலும் அண்ணியின் தயவில் வாழ்ந்து வருபவள்!
கடைக்காரனின் மூக்கை உடைத்ததில் ஜானகிக்குப் பரம திருப்தி.
தான் ஆர்டர் செய்திருந்த இரண்டு செட் புத்தகத்தில் ஒரு செட் விற்றுவிட்டுக் காசு பார்த்ததில் கடை உரிமையாளருக்கும் திருப்திதான்!
புத்தகங்கள் அனைத்தையும் வைக்க அழகான அட்டைப்பெட்டியும் இருந்தது. கடைக்காரர் 'பேக்'செய்து புத்தக அட்டைப் பெட்டியை ஆட்டோவில் கொண்டுபோய் வைத்தார்.
என்னம்மா, எல்.ஐ.ஸி. போவணுமா?’ ஏற்கெனவே போட்டிருந்த நிகழ்ச்சிநிரலை ஆட்டோக்காரர் நினைவு படுத்தினார்.
வேண்டாம்பா, நேரா வீட்டுக்குப் போ!
மாலையில் வீடு திரும்பிய ஜகந்நாதன், தன் மனைவி ஜானகி வாங்கிய புத்தகங்களைப் பார்த்துத் தன் இதயத்தை நின்றுவிடாமல் காப்பாற்றிக்கொண்டான். எத்தனைப் பேருடைய பாலிசித் தொகை? இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரே நாளில் செலவு செய்துவிட்டாளே! அதனைத் திரட்டுவதற்கு அவன் எப்படி இரவும் பகலும் அலைந்து திரிந்தான்?
இது என்ன அழுகிப்போற பண்டமா? நான் என்ன எனக்காவா வாங்கினேன்? எல்லாம் நம்ம பசங்களோட எதிர்காலம் நல்லா இருக்கணுமேன்னுதானே வாங்கி வந்தேன்’.
கடைக்காரன் ரிடர்ன்லாம் எடுத்துக்கமாட்டேன்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டான்ணேஎன்று உஷா போட்டுக் குடுத்தாள்.
ஜானகியின் முகம் சுருங்கிவிட்டது.
அவள் முகம் சுருங்குவதை ஜகனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. போவட்டும் விட்டுத் தள்ளு! ஆபிஸில் ஓவர்டைம் போட்டுச் சமாளிக்கறேன்’.
இப்படி ஜானகி புத்தகங்கள் வாங்கிய விருத்தாந்தத்தை உஷா என்னிடம் சொல்லிச்சொல்லி மாய்ந்து போனாள்.
கேட்ட என்னாலேயே அதை ஜீரணிக்க முடியவில்லை. கல்யாணமாகாத உஷாவிற்கு அந்தப் பணத்தில் அப்போதைய விலையில் சுமார் எட்டு பவுன் நகை வாங்கிப்போட்டிருக்கலாம்! அல்லது புறநகர்ப் பகுதியில் அறுபதுக்கு நாற்பதில் ஐந்து காலிமனைகள் வாங்கிப் போட்டிருக்கலாம்!
கல்லூரியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என்னால் அறிவுரை கூறாமல் அடக்கிக்கொள்வது கடினமாகவே இருந்தது. அவர்கள் வீட்டு மாடியில் குடியிருந்துகொண்டு அவர்களுக்கே அறிவுரை சொன்னால் நான் வேறுவீடு தேடி அலையவேண்டியதுதான் என்ற அச்சத்தால் பேசாமல் இருந்துவிட்டேன்.
சில மாதங்களில் பணி இடமாற்றம் காரணமாக நான் அவர்கள் வீட்டைக் காலிசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அறிவுரைகளைச் சொல்லாமல் அடக்கிவைத்துக் கொள்ளும் வேதனையிலிருந்தும் எனக்கு விடுதலை கிடைத்தது.
ஓர் ஐந்துவருடம் கழித்து அவர்கள் வீட்டுப்பக்கம் செல்லவேண்டிய வேலைவந்தது. நான் பழைய குடித்தனக்காரர் என்ற பாசத்தில் அவர்களைப் பார்க்கப் போனேன்.
வீட்டில் உஷாதான் இருந்தாள் இன்னும் திருமணமாகாமல்! எல்லாம் வயசாயிட்டுது? இனிமே எனக்கெதுக்குக் கல்யாணம்? பேசாம அண்ணனோட நிழல்ல இப்படியே இருந்துட்டுப் போறேன்’ - சலித்துக்கொண்டாள் உஷா.
உஷாவின் ஜாதக தோஷத்தைவிட ஜானகியின் ஆடம்பர வேஷமே இதற்கு முக்கியக் காரணம் என்பது எனக்கு விளங்கியது. விளங்க வேண்டியவர்களுக்கு விளங்காததுதான் அவள் விளங்காமல் போனதற்குக் காரணம்.
எங்கே ஜானுவக் காணோம்?’
கொஞ்சம் இருங்க, வர்ற நேரம்தான்!
எங்களுக்குப் பில்டர் காபி போடுவதற்காகச் சமையலறைக்குள் நுழைந்தாள் உஷா.
விலையுயர்ந்த சோபாவில் அமர்ந்தபடியே சும்மா இல்லாமல் வீட்டை ஒரு நோட்டம் விட்டேன். ஹாலின் ஷோ கேஸில் விலையுயர்ந்த அழகழகான பெரியபெரிய பொம்மைகள்! எத்தனையோ அலங்காரப் பொருட்கள்! அருகே போய்ப் பார்த்தேன்.
காபியுடன் வந்த உஷா, ‘எல்லாம் முகேஷ§க்கும் ராகேஷ§க்கும் வந்த பர்த்டே கிப்ட்டுங்கஎன்றாள். ஒவ்வொரு அன்பளிப்பும் வந்தவிதத்தை விலாவரியாக எடுத்துரைத்தாள்.
பள்ளி நண்பர்கள் இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்திருந்தால் அவற்றிற்கு மாற்றாக ஜானகி அவர்களுக்கு எவ்வளவு செலவு செய்திருப்பாள்? பிறந்தநாள் விழாக்களை எவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடியிருப்பாள்? மனத்தில் வரவுசெலவுக் கணக்கு ஓடியது.
ஏன் நீதான் அவங்களுக்குப் படியளக்கப் போறியா? வந்தமா? பாத்தமா? போனமான்னு இருக்கணும். அவங்க என்ன செஞ்சாங்க, எப்படி செலவழிக்கிறாங்க, எப்படி ஆடம்பரமா வாழறாங்கன்னெல்லாம் யோசிச்சிட்டிருக்கறது ஒனக்கு அதிகபட்சமா தெரியல?’ என்று எனது இன்னொரு மனம் என்னை இடித்துக்காட்டியது.
பேசாமல் காபியை வாங்கிச் சுவைத்தேன்.
வெளியே ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டது. ஜானகிதான் இறங்கிக்கொண்டிருந்தாள்.
உஷா. . . ! செத்த இங்க வாயேன். . .’ - ஜானகியின் குரல் ஓங்கிக் கேட்டது.
உஷா வேகமாகச் சென்று ஆட்டோவில் இருந்த கைப்பையை எடுத்து ஜிப்பைத் திறந்து ஆட்டோவிற்காகப் பணத்தை எடுத்துக் கொடுத்தது அவளைத் தொடர்ந்து சென்ற என் பார்வையில் பட்டது.
ஜானுவின் கைகளுக்கு என்னாயிற்று?’
உஷா நாங்கள் உள்ளே அமர்ந்திருப்பதைக் கூறியிருக்கவேண்டும்.
ஜானகி உள்ளே வரும்போதே கோவைப்பழ நிற உதடுகள் மலர எங்களை 'வாங்க வாங்க' என்று வரவேற்றுக்கொண்டு நுழைந்தாள்.
வந்ததும் சோபாவில் அமர்ந்தாள்.
கை என்னாச்சு?’ பதற்றத்துடன் கேட்டேன்.
ஒன்னுமில்லையே!' கைகளை விரித்துக்காட்டினாள். இரு கைகளிலும் மெஹந்தி இட்டிருந்தாள்.
எங்கே போயிருந்தீங்க?’
மெஹந்தி போட பியூட்டி பார்லர் போயிருந்தேன்’.
கொல்லையில் வளர்ந்திருந்த மருதாணிச் செடியின் இலைகளைப் பறித்து அம்மியில் விழுதாக அரைத்துக் கைவிரல்களின் நுனிப்பாகத்தில் குப்பி குப்பியாக நான் வைத்துக்கொண்டது ஞாபகத்திற்கு வந்தது.
உள்ளங்கையின் நடுவில் ஒரு பெரிய வட்டம். அதைச்சுற்றிச் சின்னச் சின்ன வட்டங்களாக ஏழு எட்டு வில்லைகள். கைவிரல் ரேகைகளில் பட்டையாய் மருதாணிக் கோடுகள். இதுதான் மருதாணி அலங்காரத்தின் மொத்த தத்துவம்.
இதற்கு ஆகும் நேரம் : அரைக்க - ஐந்து நிமிடம், வைக்க - பத்து நிமிடம். காய - இரண்டு, மூன்று மணி நேரம். அவ்வளவுதான். அதன் ஈரம் தானாகவே காய்ந்து கொட்டிவிட வேண்டும். இரவு சாப்பிட்டுவிட்டு வைத்துக் கொண்டால் அப்படியே தூங்கிவிடலாம். என்ன ஒன்று - தூங்கும்போது தலையணையில், போர்வையில், உடையில் அங்கங்கே அப்பிக்கொண்டிருக்கும்.
பகலில் இட்டுக்கொண்டால் அப்போதுதான் பார்த்து ஈ மொய்க்கும், கொசு கடிக்கும், பாத்ரூம் வரும். கையை இப்படி, அப்படி தூக்கும்போது உள்ளங்கையில் காய்ந்துவரும் பதத்தில் இருக்கும் மருதாணிப் பொட்டுகள் விழுந்துவிடும். உடனே அம்மா அதைத்தேடி எடுத்துப் பழையபடி கையில் வைத்து அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் விட்டு ஒட்டிவிடுவார்கள்.
இப்படிக் கஷ்டப்பட்டாலும் காலையில் கையைக் கழுவிவிட்டுப் பார்த்தால் வெள்ளையான கையில் செக்கச்செவேல் என்று அதன் நிறம் பார்க்கவே அற்புதமாக இருக்கும். கையை மூக்கருகில் கொண்டுபோகும் போதெல்லாம் மருதாணியின் வாசனை நெஞ்சை அள்ளும்.
வருஷத்துல ரெண்டு தடவையாவது மருதாணி வெச்சிக்கிட்டா நகமெல்லாம் சொத்தைவிழாம நல்லா இருக்கும். வெயில் காலத்துல மருதாணி வெச்சிக்கிட்டா ஒடம்புக்குக் குளிர்ச்சியா இருக்கும்என்று கூறிக்கொண்டு அம்மா எனக்கு மருதாணி வைப்பதுண்டு. அம்மா பெரிய பெரிய குப்பிகளாக நாசுக்கில்லாமல் வைப்பார்கள் என்பதற்காக இடது கையில் நானாகவே வைத்துக் கொள்வேன். வலது கையில் மட்டும் அம்மா வைப்பார்கள். பைசா செலவில்லாமல் இப்படி மருதாணி வைத்துக் கொண்டதை நான் நினைத்துக் பார்த்தேன்.
நவநாகரிக உலகில் ரெடிமேடாகக் கிடைக்கும் மருதாணிக் கோன்களைப் பயன்படுத்தி மருதாணி வைத்துவிடக்கூட பார்லர்கள் வந்துவிட்டன. அதற்காகும் காசு, போய்விட்டுவரும் நேரம், ஆட்டோ செலவு - கைப் பையின் கனத்தைக் குறைத்துவிடும். ஆனால் இப்படி வைத்துக்கொள்ளும் மெஹந்தி வெகுவிரையில் அழிந்து போவதுதான்  அபாக்கியம்.
ஜானகியை உற்றுப் பார்த்தேன். கடந்த ஐந்து வருடத்தில் நன்றாகவே மாற்றம் தெரிந்தது. உதட்டுச் சாயம், கண் இமையில் வண்ணங்கள், திரெட்டிங் செய்யப்பெற்று இருக்கா இல்லையா என்று நம் நெற்றியைச் சுருங்கவைக்கும் புருவங்கள், விலையுயர்ந்த செண்ட் வாசனை, சற்றே குட்டையான கையுடன் கழுத்துக்கும் முதுகுக்கும் தடை ஏற்படுத்தாத ஆழமாகவும் அகலமாகவும் வளைந்த லோகட் ஜாக்கட்!  தலை முடியைச் சுருள் சுருளாகத் தூக்கிக்கட்டி கிளிப்புகள் செருகியிருந்தாள். ஏதோ பாஷன் ஷோவிற்கு ஆயத்தமானதுபோல் இருந்தது.
கல்லூரி வேலைக்குச் செல்லும் நான்கூட உதட்டுச் சாயத்தையோ, சென்டையோ தொட்டதுகூட கிடையாது.
என்ன இன்னக்கி விசேஷம்?’
சாயந்திரம் ஒரு ஃபங்க்ஷன் இருக்கு
மேரேஜ் ரிசப்ஷனா?’
இல்ல இல்ல, முகேஷோட பிரண்டுக்கு இன்னிக்கு பர்த்டே. லாஸ்ட் மந்த் முகேஷோட பர்த்டேக்கு அவன் ஆயிரம் ரூபாய்ல ஒரு கிப்ட் வாங்கித் தந்தான். நான் ரெண்டாயிரம் ரூபாய்ல அவனுக்குப் ஃபாரின் கிப்ட் நேத்தே வாங்கி வெச்சிட்டேன்’.
ரெண்டாயிரம் ரூபாய்க்கா?’ அதிர்ச்சியில் வாயைப் பிளந்தேன். அதில் மூனு கிராம் கம்மல் வாங்கலாம் என்று மனத்திற்குள் கணக்குப் போட்டேன்.
அவனோட அப்பா பெரிய ஆபீஸரா இருக்கார். இப்படிப்பட்டவங்களோட பிரண்ட்ஷிப் கெடைக்கறதே கஷ்டம். அதனால பைசாவுக்கெல்லாம் கணக்குப் பாக்கக் கூடாது. அவங்க பிரண்ட்ஷிப் மூலமா பெரிய பெரிய ஆட்களோட அறிமுகம் கெடைக்கும். பாலிஸி சேக்க யூஸ் ஆவும் இல்ல!
கையில் போட்டுவந்த மெஹந்தி காய்ந்து விட்டிருக்க, ‘கையக் கழுவிட்டு வரேன்' என்று கூறிவிட்டு ஜானகி உள்ளே போனாள்.
இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் டெய்லி ஒரு பார்ட்டிக்குப் போறாங்க. ஆனா மன்னி இதுவரைக்கும் ஒரு உருப்படியன பாலிசிகூட சேத்தது கிடையாது. எல்லாம் அண்ணன்தான் அலையா அலைஞ்சி பாலிசி சேக்கறார். மகாராணியம்மா அதை வேட்டு விடறாங்ககாதைக் கடித்தாள் உஷா.
நான் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாமல் பேசாமல் இருந்தேன்.
ஜானுவப் பாத்தா வீட்ல இருக்கறவ மாதிரியா இருக்கு? என்னமோ நடிக்கப்போறது மாதிரியில்ல அலங்காரமெல்லாம் தூள்பரக்குது? இப்படியே செலவு பண்ணிக்கிட்டிருந்தா குடும்பம் உருப்பட்ட மாதிரிதான்!’ - நான் என் கணவரிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தேன்.
நீயேன் தேவயில்லாம புலம்பற. அவங்க என்ன பொண்ணா பெத்து வச்சிருக்காங்க, சேத்து வெக்கணுமேன்னு கவலப்பட? ரெண்டும் பையனா இல்ல அமைஞ்சிடுச்சி. பசங்க படிச்சு வேலைக்குப் போயிட்டா காசுவந்து கொட்டப்போகுது’.
இருந்தாலும் இது ரொம்ப அதிகங்க!
பாரதிதாசன் எழுதிய இருண்டவீடு என்னும் காப்பியத்தின் கதாநாயகி என் மனத்தில் நிதர்சனமாய்த் தெரிந்தாள்.
கால ஓட்டத்தில் அவளைப் பற்றிய எண்ணங்கள் கரைந்துபோயின.
பல வருடங்களுக்குப் பிறகு நேற்று திடீரென்று ஜானுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மாலையில் வீட்டிற்கு வரப்போவதாகச் சொன்னாள்.
அன்று பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கும் அவள் நடை, உடை, பாவனையில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. இந்நேரம் அவளுடைய பையன்கள் படித்து டாக்டராகவோ, இன்ஜினியராகவோ இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் விசாரித்தேன்.
தயங்கித் தயங்கிச் சொன்னாள். 'எங்க . . . ? அவங்களுக்குப் படிப்பே ஏறலை. என்ஜினியரிங்கும் எம்.பி.பி.எஸ்.ஸ§ம் மெரிட்ல கெடைக்கல’.
இப்பத்தான் மூலைக்கு மூலை ரெண்டும் கூவிக்கூவி விக்கறாங்களே?’
செல்ஃப் பைனான்ஸ்ல காசுகுடுத்தெல்லாம் சேக்க முடியாதுன்னு அவங்க அப்பா சொல்லிட்டாரு’.
நீங்க என்ன பத்துப் புள்ளயா பெத்துவச்சிருக்கிங்க, அல்லது பொண்ணா பெத்துவச்சிருக்கிங்களா? நீங்க சேத்து வச்சிருக்கறதெல்லாம் பிற்காலத்துல அவங்களுக்குதானே? அவங்க படிக்கறதுக்காகச் செலவுசெய்யாம வேறு எதுக்குச் செலவுசெய்யப் போறாராம்?’
லட்சக்கணக்குல யாரு கடன் தருவா?’
ஏன் கடன் வாங்கணும்? வீடுவாசல் இல்லையா? நகையில்லையா? இத்தன வருஷமா அவர் சம்பாதிச்சது எங்க? வீட்டு வாடகை வருது. எல்.ஐ.ஸி. பாலிசியில பணம் வருது. அப்பறம் ஏன் அவரு பஞ்சப்பாட்டு பாடறார்?’
இப்ப எதுவும் இல்ல’.
என்ன இல்ல?’
வீட்ட வித்துட்டோம்!
கேட்டதும் எனக்குத் திக்' என்றது.
என்னது வீட்ட வித்துட்டிங்களா? சென்னையில சென்டர் ப்லேஸ் ஆச்சே. அதப்போயா வித்துட்டீங்க? நெறைய வாடகவேற வந்துட்டிருந்ததே?’
வீட்டு பேர்ல ஹவுஸிங் லோன் இருந்தது. ரொம்ப வருஷமா டியூ கட்டாம இருந்தது. அதனால வீடு ஏலத்துக்கு வந்துடிச்சி’.
சுத்த சைவம் என்பதால் கறி, மீன் என்று உணவு விஷயத்திலும் செலவாகிவிடப் போவதில்லை. அப்படி யென்றால் அவள் எவ்வளவு பொறுப்பற்றவளாக நடந்து கொண்டிருக்க வேண்டும்? ஒரு குடும்பத்தின் தலைவி இப்படியா தான்தோன்றித்தனமாகச் செலவுசெய்வாள். தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்ற திருக்குறள் ஞாபகத்திற்கு வந்தது. இவளோ அனைத்தையும் அழித்து விட்டல்லவா மறுவேலை பார்த்திருக்கிறாள்?
அப்படின்னா பசங்க என்னதான் பண்றாங்க?’
பெரியவன் எலக்ட்ரானிக் டிப்ளமா முடிச்சிட்டு ஒரு கம்பெனில அசிஸ்டெண்டா இருக்கான்’.
எவ்ள சேலரி?’
ரெண்டாயிரம் வருது. ஆனா அவன் டூவீலர்க்கு பெட்ரோல் போடவே சரியாயிடுது’.
சின்னவன் என்ன பண்றான்?’
அவனத்தான் டிகிரிக்குப் படிக்கவெச்சேன். நாலஞ்சு பேப்பர்ஸ் அரியர்ஸ் இருக்கு. பரீட்சைக்குப் பீஸ் கட்டணும்.  அதுதான் உங்களக் கேக்கலாம்னு வந்தேன். ஒரு ரெண்டாயிரம் ரூபா கடன் தந்திங்கன்னா அவனுக்குப் பரீட்சை பீஸ் கட்டிடுவேன்’.
என் பார்வை அவள் காதுகளில், கழுத்தில், கைகளில் நின்றுநின்று பயணித்தது.
அந்தப் பார்வையை அவள் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
எல்லாம் கவரிங்தான். என்னோட நகையெல்லாம் வித்தாச்சி’.
நான் வாயைத்திறந்து பேசமுடியாத நிலைக்குப் போய்விட்டேன்.
ஒருத்திய நம்பி சூரிட்டி போட்டேன். அவ லோன் வாங்கிட்டுக் கட்டாம விட்டுட்டா. என் நகைகள வித்துக் கட்டவேண்டியதாப் போச்சி. வேற வழி தெரியல’.
ஒருத்தி அடுக்கடுக்காய் எத்தனைத் தவறுகளைச் செய்வாள்? நினைக்கும்போதே அவள்மீது எனக்கு அருவருப்பாய் வந்தது?
பரீட்சை பீஸ் ரெண்டு நாள்ல கட்டியாகணும். இல்லன்னா அடுத்த வருஷம்தான் எழுதலாம். நான் உங்க பணத்தச் சீக்கிரத்துல திருப்பிக்கொடுத்திடறேன்.
இருபதாண்டுகளுக்கு முன்னால் எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைக்கு இருபதாயிரத்திற்குத் தேவையே இல்லாமல் புத்தகங்களை வாங்கி அடுக்கியவள், இப்பொழுது அவன் படிப்பிற்குச் செலவுசெய்ய வேண்டிய முக்கியமான நேரத்தில் இரண்டாயிரம் ரூபாய்கூட இல்லாமல் அவதிப்படுவதைப் பார்த்துக் கை கொடுப்பதா?
கை விரிப்பதா?
கைகொட்டிச் சிரிப்பதா?
கழுத்தைப்பிடித்துத் தள்ளுவதா?
நீங்களே சொல்லுங்கள்!
அவ்வை நிர்மலா, ஆசைமுகம் மறந்து போச்சே (சிறுகதைத் தொகுப்பிலிருந்து) பக். 34-51


வம்பு ஆடுகள்





வம்பு ஆடுகள்
புன்னகைக் கதவுகளை
முட்டித் தள்ளிவிட்டு
எளிதாக உள்நுழைந்து
மனவயல்களை மேய்ந்து
பாழ்படுத்தி விடும்!

புருவ வில்களையும்
பார்வை அம்புகளையும்
பாதுகாப்பாய் வைத்து
வாயிற் கதவுகளை
இறுக்கி மூடினால்
வம்பு ஆடுகளை
வாசல் நுழையாமல்
வகையாய்த் தடுக்கலாம்!

இவ் வம்பு ஆடுகள்
பயிர்களை மேய்ந்து
பயனை அழிப்பதோடு
எங்கெங்கோ
மேய்ந்துவிட்டு வந்த
முள்வேலிக் கருவைகளின்
நச்சு விதைகளைப்
புழுக்கையாய் இட்டுவிட்டு
மனச்சோலைகளில்
முட்புதரை உருவாக்கிப்
பாழடையச் செய்துவிடும்!

வம்பு ஆடுகளால்
முட்புத ராகிப்போன
இதய நிலத்தில்
அவசரத்துக்கு ஒதுங்குபவர்
மட்டுமே
ஆனந்தம் அடைவார்கள்
மற்றவர்கள்
மூக்கைப் பிடித்துக்கொண்டு
முகம்சுளிப்பார்கள்!

பண்பட்ட நிலத்தைப்
பாழாக்க விட்டுவிட்டால்
ஜேசிபி வைத்துப்
புதர்களைத் தோண்டி
எரித்துச் சாம்பலாக்கினாலும்
உடைந்து உதிர்ந்துகிடக்கும்
முள்ளின் முனைகள்
முன்னிருந்த நிலையை
முழுதாகத் தந்திடாது! 

(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-)


பெரியபுராணத்தில் வேட்டுவர் வாழ்வியல்


சங்க இலக்கியக் குறிஞ்சித்திணைப் பாடல்களில் வேடர்களின் வாழ்வியல் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கு விரவிக்காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் மறக்குடி மக்களின் வழிபாடு பற்றிய செய்தி உரைக்கப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் குகனை நாவாய் வேட்டுவன்என்று கம்பர் குறிப்பிடுகிறார். குகன் சார்ந்த சமுதாயத்தின் வாழ்க்கையைக் கம்பர் விரிவாகப் பேசவில்லை. இராமன் மீது குகன் கொண்ட அன்பின் திறத்தினையே கம்பர் மையப்படுத்தியுள்ளார். இவ்வாறு பழந்தமிழ் இலக்கியங்களை நுணுகி நோக்கும்போது வேடர்களின் வாழ்வியலை விரிவாக அறியும் வகையில் எந்த நூலும் அமையவில்லை எனலாம்.
சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறுகளைக் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பல இனங்களைச் சார்ந்தவராவர். அவர்தம் சமுதாய வாழ்க்கையைக் குறிப்பாகவே புலப்படுத்தியுள்ளார். எனினும் கண்ணப்ப நாயனார் புராணத்தில் கண்ணப்பர் பிறந்த வேடுவக் குலத்தின் வாழ்வியலை விரிவாகவே பேசிச்செல்லும் பாங்கைக் காணமுடிகிறது. இந்நிலையில் பெரியபுராணத்தின் வாயிலாக அறியப்படும் வேடுவர் வாழ்வியல் தொடர்பான செய்திகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.
வாழிடம்
வேடர்கள் பெரும்பாலும் மலைப் பகுதிகளில் வாழ்பவராவர். அவர்களைக் குன்றவர்’ (652) என்றும் மலையர்’ (702) என்றும் சேக்கிழார் குறிப்பிடுகிறார். மலர்ச்சோலைகளும் நீர்நிலைகளும் சூழ்ந்த பொத்தப்பி என்னும் நாட்டினில் (650) முத்துகள் கொழிக்கும் நீரருவியின் சாரல் உடைய நீண்ட மலை சூழ்ந்த இடமாகிய உடுப்பூர் என்னும் இடத்தைக் கண்ணப்பன் பிறந்த இடமாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார் (651).
வேடர்கள் தாம் வாழும் ஊரைச் சுற்றி மதங்கொண்ட யானைகளின் கொம்புகளால் தொடர்ச்சியாக வேலியமைத்துப் பாதுகாத்தமை (651, 674). சேக்கிழாரால் குறிப்பிடப்பெறுகிறது.
தோற்றம்
            வேடர்கள் கரிய நிறத்தை உடையவர்கள். மைசெறிந்து அனைய மேனி (656.1) என்று அவர்களுடைய கருமைத் தோற்றத்தைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
கருவரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை
பொருவரைத் தோள்கள் ஆரப் புதல்வனை எடுத்துக் கொண்டான் (664.3-4)
என்னும் பகுதியில் குழவியாகிய கண்ணப்பனைக் கருமேகத்திற்கும் அவனை ஏந்திய தந்தை நாகனை கரிய மலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவதன் வாயிலாக அவர்தம் கரிய நிறத்தைச் சுட்டிச்செல்கிறார்.
மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் (692.2) என்று பிறிதோரிடத்திலும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
கருங்கதிர் விரிக்கும் மேனிக் காமரு குழவி (665.1),  கரும்போர் ஏறு (689.4) மணிநீல மலை (701.2) கருங்குவளை மலர்போன்ற திருமேனி (714) எனவரும் பெரியபுராணத்தின் வருணனைப் பகுதிகள் கண்ணப்பனின் கரியநிறத்தை விதந்துரைப்பனவாக அமைகின்றன.
            நாகனின் மனைவியைப் பற்றிக் குறிப்பிடும்போது சூர்அரிப் பிணவு போல்வாள் (658.4) என்று அச்சமூட்டுகின்ற பெண்சிங்கத்திற்கு ஒப்புமைப்படுத்துகிறார் சேக்கிழார்.
பெயர் வைத்தல்
            கண்ணப்பனின் தந்தை பெயர் நாகன் என்பதாகும் (656). அவன் மனைவியின் பெயரைத் தத்தை என்று குறிப்பிடுகிறார் (657) சேக்கிழார். கண்ணப்பன் என்னும் பெயர் சிவபெருமானால் பின்னர் அளிக்கப்பெற்றதாகும். அவன் பிறந்தபோது தூக்குவதற்குக் கனமாக இருந்த காரணத்தால் திண்ணன் என்ற பெயரை வைப்பதாக நாகன் கூறுவதன் வாயிலாக வேடுவரின் பெயரிடும் மரபை அறியமுடிகிறது.
அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்
திண்ணன் என்று இயம்பும் என்னத் திண்சிலை வேடர் ஆர்த்தார் (666.1-2)
என்று கண்ணப்பருக்குப் பெயரிடப்பெற்ற சூழலை விளக்குகிறார் சேக்கிழார்.
திண்ணனோடு சென்ற வீரர்கள் நாணன், காடன் என்னும் பெயர் பெற்றவராவர். இவ்வாறு வேடர்குலத்தவரின் பெயர்கள் அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப அமைந்துள்ளமையை அறியமுடிகிறது.
பண்பு
            அச்சமும் அன்பும் என்றும் அடைவிலார் (656.2) என்று வேடுவர்களின் அச்சமற்ற, அன்பற்ற பண்புநலனைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.
பெற்றியால் தவம்முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின் றுள்ளான்
விற்றொழில் விறலின் மிக்கான் வெஞ்சின மடங்கல் போல்வான் (657.1-3)
என்று நாகனின் பண்பினை எடுத்துரைக்கிறார். வேடுவர் குலத்து உதித்ததன் காரணமாகக் குற்றமே குணமாகக்கொண்டு வாழ்பவன் நாகன் என்று குறிப்பிடுவதன் மூலம் வேடுவரைத் தீயபண்புகள் உடையவராக முன்வைக்கிறார் ஆசிரியர்.
சினவில் வேடர் (683.4), சினவேடர் (693.3), வெஞ்சொல் வேட்டுவர் (654.1) எனவரும் சொல்லாட்சிகள் வேடுவர் கோபம் நிறைந்தவர் என்பதனைச் சுட்டுகின்றன. வேடுவர்கள் வாழும் இடத்தில் கொல், எரி, குத்து என்ற ஓசைகளே கேட்கும் (654) என்றும் சேக்கிழார் உரைக்கிறார்.
தொழில்
            ஆறுஅலைத்து உண்ணும் வேடர் (655.1) என்றும் வயவர் (738.1) என்றும் குறிப்பிடுவதால் வேடர்கள் ஆறலைக்கள்வராக இருந்தமை பெறப்படுகிறது. அவர்களை வன்தொழில் மறவர் (656.1) என்றும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
            வேற்றார் வளர்த்துவரும் பலதிறத்ததான பசுக் கூட்டங்களையும் அவர்கள் கவர்ந்துவருவர் (655). நாகனைப் பற்றிக் குறிப்பிடும்போது, கைவண்ணச் சிலைவேட்டை ஆடித் தெவ்வர் கணம் நிரைகள் பலகவர்ந்து (692.3) என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
தெம்முனையில் அயல்புலங்கள் கவர்ந்துகொண்ட
திண்சிலையின் வளம் ஒழியாச் சிறப்பின் வாழ்வாய் (704.2)
என்று நாகன் தன் மகனுக்கு எடுத்துரைக்கிறான். இவற்றால் ஆநிரை கவர்தல் என்பது அவர்களின் முக்கியத் தொழிலாக அமைந்தமையை அறியமுடிகிறது.
விலங்குகளைப் பழக்குதல்
வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றி னோடும்
புன்தலைச் சிறும கார்கள் புரிந்துடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூர அணையும்மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் (653)
என்பதனால் புலிக்குட்டிகள், யானைக் கன்றுகள், மான்கள் ஆகியவற்றை வேடர்கள் வளர்த்துவந்தமையை அறியமுடிகிறது.
கடுமுயல் பறழி னோடும் கானஏ னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை செந்நாய் கொடுஞ்செவிச் சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடித் தொடர்ந்துடன் பற்றி முற்றத்து
இடுமரத் தாளில் கட்டி வளர்ப்பன எண்ணி லாத (675)
என்னும் பகுதியும் வேடுவர்கள் வளர்த்த விலங்குகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சிறுவர்கள் தாம் விளையாடும்போது முயல், காட்டுப் பன்றி, செந்நாய், புலி ஆகியவற்றின் குட்டிகளைப் பிடித்துவந்து தம் வீட்டு முற்றத்தில் கட்டிவைத்து வளர்ப்பர்.
வளைந்து தொங்கும் காதுகளைடைய நாய்களை விளாமரத்தின் கிளைகளில் கட்டிவைப்பர் (652) என்னும் செய்தியால் வேட்டையாடுவதற்குப் பயன்படும் வகையில் நாய்களைப் பழக்கியமையை அறியமுடிகிறது.
இடிமுழங்கும் மேகத்திற்கு எதிராகப் பிளிறுகின்ற மதம்மிக்க யானைக்கூட்டங்களையும் அவர்கள் வைத்திருந்தனர் (655) என்றும் அயல்புலம் சென்று கவர்ந்துவந்த பசுக்கூட்டங்களை வளர்த்தனர் (655) என்றும் அறியமுடிகிறது.
திருமணம்
            கண்ணப்பனின் தந்தையாகிய நாகனின் மனையாளாகத் தத்தையைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார். மற்று அவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் (657.4) என்பதன்மூலம் வேடுவர் வாழ்வில் காணப்பெற்ற ஒருதார மணத்தை எடுத்துரைக்கிறார் எனலாம்.
குழந்தை வளர்ப்பு
அலர்பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
குலமுது குறத்தி ஊட்டிக் கொண்டுகண் துயிற்றிக் கங்குல்
புலரஊன் உணவு நல்கிப் புரிவிளை யாட்டின் விட்டுச்
சிலமுறை ஆண்டு செல்லச் சிலைபயில் பருவம் சேர்ந்தார்
(676)
என்னும் பகுதியால் குழந்தை வளர்ப்பில் குலமுது குறத்தியர் ஈடுபட்டமையை அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் செவிலித்தாயர் தலைவியை வளர்த்துப் போற்றும் பங்கைப் பெற்றிருந்தனர். எனினும் வேட்டுவர் குலத்து முது குறத்தியர் பங்களிப்பு அதனினும் வேறுபட்டதாகும்.
உணவு
வேடுவர்களின் முன்றிலில் ஐவனம் எனப்படும் மலைநெல்லைக் காயவைப்பர் (652) என்பதால் ஐவனம் அவர்களின் முக்கிய உணவாக இருந்தமையை அறியமுடிகிறது.
மலைத்தேனையும் ஊன் கலந்த சோறையும் அவர்கள் உணவாகக் கொள்வர் (656.3). இறைச்சியை நெருப்பில் வதக்கி அதில் தேனைப் பிழிந்து கலந்து உண்பர் (797). காலையில் சிறுவர்களுக்குப் புலால் கலந்த உணவை உண்ணக் கொடுப்பர் (676) முதலான செய்திகளைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
விருந்துணவு
வில்விழாவின்போது நிகழும் விருந்துபசரிப்பு பற்றிச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். மறவர்கள் அனைவரும் வந்து குழும அவர்களுக்கு உணவாக ஐவனம் என்னும் மலைநெல், புல்லரிசி, தினை, மூங்கில் அரிசி முதலியவற்றால் சோறு சமைப்பர். அவற்றுடன் ஊனும் கிழங்கும் கலந்து வைப்பர். (683)
இடித்த செந்தினையின் மாவுடன் தேனைக் கலந்து விழாவிற்கு வந்தவர்கள் உண்பர். ஊனுணவைத் தேனில் கலந்து இனிப்பாக்கி உண்பர். விளங்கனியோடு தேனைக் கலந்து கவளமாக்கி உண்பர். ஈசல் உணவை விருப்பத்தோடு உண்பர். (684)
சூரியன் உச்சிப் பொழுதைக் கடந்தபின் எயினரும் எயிற்றியரும் பலவகையான மதுவகைகளை அதிகமாக அருந்தி மயங்கிக் களிப்பர் (685) என்னும் செய்தியும் சேக்கிழாரால் குறிப்பிடப்பெற்றுள்ளது.
உடை
            உடைவன் தோலார் (656.2) என்பதனால் வேடுவர்கள் வலிமை வாய்ந்த தோலாடை அணிந்தமையை அறியமுடிகிறது.
அணிகலன்
திருமணமான மகளிர் பெரிய புலிப்பல்லைத் தாலியாக அணிந்துகொள்வர் (658.2). அதில் இடையிடையே மனவுஎனப்படும் சங்கு மணிகளைக் கோர்த்திருப்பர். அம் மாலையானது முதுகிலும் அலையுமாறு தொங்கிக் கொண்டிருக்கும் (658).
குழந்தையின் பெயர்சூட்டும் விழாவன்று அக் குழந்தைக்குப் பல அணிகலன்களை அணிவிப்பர் (666).
மறவர்கள் காலில் கழல் அணிந்திருப்பர் (732, 738.1).
மகளிர் தம் கொண்டையில் மயில் பீலியையும் தளிர்களையும் பூக்களையும் அணிவர் (658) என்னும் செய்திகள் பெரியபுராணத்தில் அறியக்கிடக்கின்றன.
ஆயுதங்கள்
நச்சழல் பகழி வேடர் (656.4), விற்றொழில் விறலின் மிக்கான் (நாகன் : 657.3), திண்சிலை வேடர் (666.2) முதலான தொடர்களால் வேடுவர்கள் பெரும்பாலும் வில்லினைப் பயன்படுத்தியமையை அறியமுடிகிறது. காட்டில் நெருப்பில் வேகவைக்கும் விலங்குகளின் இறைச்சியை ஈர்ந்து எடுக்கவும் (766) இறைச்சித் துண்டுகளைக் கோர்த்து நெருப்பில் வதக்கவும் (767) அம்புகளைப் பயன்படுத்தினர்.
சகுனம் பார்த்தல்
            தன் மகனுக்கு வேடர் தலைமை கொடுக்கப்போவதாக நாகன் உரைக்க அதனைக்கேட்ட தேவராட்டி தான் புறப்படும்போது நல்ல குறிகள் தோன்றியதாகக் கூறுகிறாள். இருப்பினும் அவை என்ன என்பதை அவள் குறிப்பிடவில்லை (700).
வேட்டைக்குச் செல்லும்போது சில பறவைகள் எதிர்பட்டால் இரத்தப் பெருக்கினை உண்டாக்கும் என்று நம்பி, சகுனம் பார்க்கிறான் திண்ணன். எனினும் எப் பறவைகள் என்ற குறிப்பினைச் சேக்கிழார் சுட்டவில்லை (817).
காலடி பணிதல்
திண்ணனைக் காண்பதற்காக நாகன் அழைப்பு விடுக்கிறான். தந்தையைக் காணவரும் திண்ணன் தந்தையின் கழல்அணிந்த கால்களை வணங்குகின்றான் (701). தலைமைப்பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேடயத்தையும் உடைவாளையும் அளித்தபோது தந்தையின் கால்களை வணங்கி அவற்றைப் பெறுகிறான் (703). விடைபெற்றுக் கொண்டு செல்லும்போது மீண்டும் ஒருமுறை தந்தையின் கால்களை வணங்குகிறான் (705).
தன்னை வணங்கிய தன் மைந்தனை தன் தோள்கள் நெருங்கத் தழுவிக்கொள்கிறான் நாகன் (701).
இறை வழிபாடு
வேடர்கள் குறிஞ்சிநிலக் கடவுளான முருகனை வழிபடுவர்.  நாகனுக்கு மகப்பேறு இன்றி வருந்தியபோது, முருகலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று/ பரவுதல் செய்து நாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பார் (659.3-4) என்று மகப்பேறு வேண்டி முருகனை வழிபட்டமையைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
வாரணச் சேவ லோடும் வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங்கு ஆடல் செய்து பெருவிழா எடுத்த பின்றை (660)
என்பதால் முருகனுக்குக் காணிக்கைப் பொருள்களாகச் கோழிச்சேவல்களையும் வரிகளையுடைய மயில்களையும் தருவதை அறியமுடிகிறது. விழா நாளன்று மணிமாலைகளைத் தோரணங்களாகக் கட்டுவர். வண்டுகள் மொய்க்கின்ற கதம்ப மலர்மாலைகளைத் தொங்கவிடுவர். குரவைக்கூத்தும் அணங்காடலும் ஆடுவர். தத்தைபால் கருப்பம் நீடியபோது இறைவனுக்குப் பல பலிப்பொருள்களை நல்கி வெறியாடல் நிகழ்த்தினர் (662) என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
நெடுவேலோன் (660) என்ற குறிப்பால் வேடர்கள் நெடிய வேல் ஏந்திய முருகனின் சிலையை வைத்துவழிபடும் உருவ வழிபாடு புலனாகிறது. அயிலுடைத் தடக்கை வென்றி அண்ணலார் (661.4) என்று பிறிதொரு இடத்திலும் முருகனின் தோற்றம் குறிக்கப்பெறுகிறது.
தேவராட்டி
            காட்டிலுள்ள தளிர்களை நெருக்கமாகக் கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருப்பாள். மான்கொம்பினை அரிந்து காதில் குழையாக அணிவாள். கத்தூரி மானின் வயிற்றில் தோன்றிய கத்தூரியை நெற்றியில் பொட்டாக வைத்திருப்பாள். சங்கு மணியை மாலையாகக் கழுத்தில் சூடியிருப்பாள். இடையில் மரவுரி அணிந்து அதன்மீது நீண்ட மயிற்பீலியைச் சூடியிருப்பாள் (697).
            பூவும் அரிசியும் கலந்த அட்சதை நல்குவாள் (697).
            மென்மையான இறைச்சி, ஈயல், தேன், மலையில் விளையும் பொருட்கள், பிற வளங்களோடு தேவராட்டி கேட்கும் அளவு மானியமாக அளிக்கப்பெறும் (698).
விழாக்கள்
தமது தலைவனுக்குக் குழந்தை பிறந்தபோது மக்கள் அனைவரும் பெருவிழா எடுத்து மகிழ்கின்றனர் (664).
வில் விழா
வில்விழா எடுக்கும்போதும் இறைவனுக்குப் பராய்க் கடன் இயற்றுவர் (680). அப்போது வில்லிற்குத் திருக்காப்பு செய்வர் (681). வலிமையுடைய புலி நரம்பில் செய்த நாணாகிய கயிற்றை வில்லில் காப்பாகக் கட்டுவர் (682). வில்வித்தை கற்பவரின் முன்கையிலும் அதனைக் காப்பாகக் கட்டுவர் (682).
வில்லிற்குப் பசுமையான இலைகளை மாலையாகக் கட்டிச் சூட்டுவர். பல மலர்களைக்கொண்டு கட்டிய மாலைகளையும் சூட்டுவர். காசுகள் கொண்ட வடத்தோலைக் கட்டி அழகுபடுத்துவர். பலகறை மணிகளை கோர்த்துக் கட்டிய மாலைகளைச் சூட்டுவர். வெட்சி முதலான போர்க்குரிய அடையாள மாலைகளையும் சூட்டுவர் (686).
வில்விழாவின்போது தொண்டக முரசு, கொம்பு, துடி, துளைகொண்ட புல்லாங்குழல் முதலியவற்றை இசைப்பர் (687).
வில்விழாவானது ஏழு நாள் நடக்கும் (688). ஏழாம் நாளில் மக்கள் மங்கல வாழ்த்து கூற, பல இசைக்கருவிகள் முழங்க, வில்லாசிரியரின்பால் மாணவனை ஒப்படைப்பார்கள் (689).
வில்விழா மலையடிவாரத்தில் நடக்கும் (690).
வில் பயிற்றுதல்
வில் பயிற்றுவதற்கென்று ஆசிரியர்கள் இருந்தனர் (677, 686). அவர்களை தனுத்தொழில் வலவர் (689.3) என்று பெரியபுராணம் சுட்டுகிறது.
வில்வித்தை கற்பதற்கு நாள் குறிப்பர் (677). அதனை மறவர்களுக்குச் சொல்லிவிடுவர் (677). துடிப்பறை முழக்கி அதனை அறிவிப்பர் (678).
மலைபடு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றுக் கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவில்பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்றச்
சிலைபயில் வேடர் கொண்டு திசைதொறும் நெருங்க வந்தார் (679)
என்னும் பகுதி வில்வித்தை கற்போர் ஆசிரியருக்குப் பரிசுப் பொருள்களை அளித்தலைக் காட்டுகிறது.
வில் வித்தை முதன்மையானதாகக் கற்பிக்கப்பட்டாலும் பிறவகைப் படைக்கருவிகளையும் ஆசிரியர் கற்றுத்தருவார் (691).
கன்னிவேட்டை
கூட்டத்திற்குப் புதியதாகத் தலைமை ஏற்று வேட்டை நடத்துவதனைக் கன்னி வேட்டை என்பர் (696.2).
கன்னி வேட்டைக்குச் செல்லும்போது காட்டிற்குரிய வனதேவதைக்குப் பலி கொடுப்பர் (696, 699).
கன்னிவேட்டைக்கு வனதெய்வங்களை மகிழ வைப்பதற்காக வேண்டிய பொருட்களைப் பெற்றுச்சென்றாள் (700).
            மங்கலநீர்ச் சுனையில் நீராடி இருள்புலரும் காலைநேரத்தில் கன்னிவேட்டையாடச் செல்கின்றனர் (705).
வேட்டைக்குப் புறப்படும்போது தேன், நல்ல இறைச்சி, தேறல், பொரி மற்றும வனதேவதைகளுக்குரிய பலிகளையும் எடுத்துக்கொண்டு தேவராட்டி வந்தாள் (714).
தலைமை தாங்கிச்செல்பவர் நெற்றியில் அட்சதை சாத்தி தேவராட்டி வாழ்த்து சொல்வாள் (715).
தனக்கு வாழ்த்து நல்கிய தேவராட்டிக்குச் சிறப்புகள் பல செய்து வழியனுப்புவர் (716).
திங்கள்தோறும் வேட்டையாடுவர் (693).
வேட்டைக்குரிய படைக்கலங்கள் வில்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் (705). வேட்டைக்குச் செல்லும்போது பல்வேறு வகைப்பட்ட அம்புகளை அம்புக் கூடுகளிலிருந்து தேர்ந்து எடுத்துக் கொள்வர் (713).
வேட்டைக்குச் செல்லும்போது தலைமை ஏற்பவருக்கு வேட்டைக்கோலம் புனைந்துவிடுவதற்காகப் புனைதொழில் கைவினைஞர் இருப்பர் (705).
அடர்ந்துவிளங்கும் சுருண்ட தலைமயிரை நிமிர்ந்து இருக்குமாறு மேலே தூக்கிக்கட்டி அதில் தளிர்களால் கட்டப்பட்ட மாலை சூட்டுவர். அதன் இடையே மயிலிறகைச் செருகுவர். நறுமணமுடைய முல்லைப் பிணையலையும் குறிஞ்சி, வெட்சி முதலான மலர்மாலைகளையும் சூட்டுவர் (706).
முன்நெற்றியில் மயிலிறகின் முருந்தையும் குன்றிமணி களையும் சேர்த்துக் கோர்த்த மயிர்க்கற்றையைக் கட்டுவர். சங்கால் செய்த முழுமதி போன்ற வெண்ணிறத் தோடு காதில் தொங்கவிடுவர் (707).
கழுத்தில் வெண்ணிறப் பலகறையினால் ஆன மாலை அணிவிப்பர். பலவகை மணிகளோடு இடையிடையே காட்டுப்பன்றிக் கொம்பினை பிறைபோன்று துண்டுபடுத்திக் கோர்த்த மாலையை அணிவிப்பர். புலியின் வலிமையான தோலை அணிவித்து சன்ன வீரம் எனப்பெறும் வெற்றிமாலை அணிவிப்பர் (708).
தந்தத்தை மணிகளாக்கிக் கோர்த்த நீண்ட மாலையை மார்பில் சூட்டுவர். மாலை போன்ற வாகுவலயங்கள் தோளில் ஓளிவீசுமாறு பொருத்துவர். கங்கணம் கட்டப்பட்ட முன்கையில்  வில்லிற் கட்டிய நாணை ஏற்றி அம்பு எய்வதற்கு ஏற்ற சாதனமாகிய செறிகட்டி எனப்படும் விரலுறையைக் கட்டுவர். (709)
இடையில் தோலாடையின் மீது கடலலைகளால் கரையில் குவிக்கப்பெற்ற பலகறைகளைக் கோர்த்து விளிம்பாய் ஓரத்தில் கட்டி, வரிசையாய் விளங்கும் நீண்ட உடையாகிய தோலையும் வாளின் பக்கத்துச் செறிந்த நறுமணம் சூழ்ந்த துவர் ஏற்றிய வாரையும் சேரக்கட்டும் விசியைப் பூட்டுவர் (710).
வீரக்கழல் காலில் அணிசெய்யும். பாதத்தோடு சேரும்படி நீண்ட செருப்பு அணிவர். (711)
வேட்டைக்குச் செல்லும்போது அனைவரும் வாழ்த்துவர் (713).
துடிப்பறையை முழக்கிக்கொண்டு செல்வர் (713).
நாய்வேட்டை
வன்தொடர்ப் பிணித்த பாசம் வன்கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம்முன்
சென்று மீளு மாறு போல்வ செய்ய நாவின் வாயவாய்
ஒன்றொ டொன்று நேர்படாமல் ஓடும் நாய்கள் மாடெலாம்
(718)
வன விலங்குகள் ஓடுமாறு வேட்டை நாய்களை இடையே பல பக்கங்களிலும் ஓடச்செய்வர் (725). பல வழிகளிலிருந்தும் வருகின்ற விலங்குகள் அவ் வலைகள் அறுமாறு அச்சம்கொண்டு விழுந்து, கற்பாறைகளின் வழியாகத் தப்பிச்செல்ல முற்பட அவற்றைச் சினம் மிக்க வேட்டை நாய்கள் கவ்விப் பற்றும். இத்தன்மையானது இருவினையின் வலைப்பட்டுத் தடுமாறிச் சுழல்பவர் நன்னெறி சேரும் மெய்யறிவு காணும்போது அதன்பால் நாடவொட்டாது தடைசெய்யும் ஐம்புலன்களைப் போன்று விளங்கின (734).
வேட்டையாடுவதற்கு வலைகளையுடம் சுமந்து செல்வர் (719).
கோடு முன்பு ஒலிக்கவும் குறுங்கண் ஆகு ளிக்குலம்
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்டு கைவிளிச் சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே (721)
என்பதனால் கைகளையும் தட்டி ஒலி எழுப்புவர் என்பது புலப்படுகிறது. துடிப்பறை முழங்கவும் பம்பை ஒலிக்கவும் கைதட்டியும் ஒலி எழுப்புவதுடன் வாயினாலும் ஒலி எழுப்புவர் (726).
            கலைமான்களைக் குரலெழுப்பி அழைப்பர் (792).
விலங்குகளின் இயக்கம் கண்டறிதல்
வனவிலங்குகள் சஞ்சரிக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு அவ்விடத்திலுள்ள மரக்கிளைகளை ஒடித்து அகற்றியும் வாரினால் ஆன வலைகளை ஒரு யோசனையளவு நெடிது கட்டியமைத்து பரந்த காட்டினைக் காவல் செய்வர் (724).
தென்திசைப் பொருப்புடன் செறிந்தகானின் மானினம்
பன்றிவெம் மரைக்கணங்கள் ஆதியான பல்குலம்
துன்றி நின்ற என்றடிச் சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன்தடக்கை வார்கொடுஎம் மருங்கும் வேடர் ஓடினார் (723)
என்று விலங்குகளின் சஞ்சாரத்தைக் கண்டறிவதைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
வேட்டையாடும்போது எப்போதும் வில்லை மட்டுமே பயன்படுத்துவதில்லை. தாங்கள் வேட்டையாடும் விலங்கிற்கு ஏற்ப ஆயுதத்தைத் தெரிவுசெய்து பயன்படுத்துவர்.
அத்தருவளர் சுழலிடைஅடை அதன்நிலைஅறி பவர்முன்
கைத்தெரிகணை யினில்அடுவது கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை முனைபெறஎதிர் உருவிக்
குத்தினர்உடல் முறிபடஎறி குலமறவர்கள் தலைவர் (740)
என்று துரத்திச்சென்ற பன்றியானது மேற்கொண்டு ஓட இயலாதவாறு தளர்ச்சியுற்று நின்றபோது உடைவாளைக்கொண்டு அதன் உடலைத் துண்டாகும்படிக் குத்தினார் கண்ணப்பர்.
காட்டில் வேட்டையாடிய மிருகங்களை உண்பதற்கு ஏற்ப சமைப்பதற்கு தீக்கடைகோலால் தீமூட்டுவர் (748).
சிறு பரல்கள் இடப்பெற்ற துடி, கொம்பு, சிறுமுகம் கொண்ட ஆகுளி எனப்படும் சிறுபறை ஆகியவை வேட்டுவர் பகுதியில் ஒலியெழுப்பியபடி இருக்கும் (654)
வலிமையான பருத்த அடிப்பகுதியை உடைய விளா மரத்தின் கிளைகளில் வார்களையுடைய வலைகள் தொங்க விடுவர் (652).
காட்டுப் பன்றி, புலி, கடமை எனப்படும் காட்டுப் பசு, மான் ஆகிய பார்வை விலங்குகள் அங்கிருக்கும் (652). வேட்டையாடிய பன்றி முதலான விலங்கினை எரியினில் வதக்கி, அதன் தசைகளை அம்பினால் ஈர்ந்து எடுப்பர் (766). அவ்வாறு எடுத்த தசைப் பகுதிகளை அம்பில் கோர்த்து நெருப்பில் வேகச்செய்வர் (767). சருகு இலைகளை இணைத்துத் தைத்து அவற்றில் அவ் உணவை வைப்பர் (767).
தேக்கிலைகொண்டு வட்டமான தொன்னைகளை அமைத்து அவற்றில் கொம்புத்தேனை நிறைப்பர் (793).
வேட்டை அறம்
துடியடியன மடிசெவியன துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள் மிசைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு கொலைபுரிசிலை மறவோர்
(735)
என வேடுவரின் வேட்டை அறம் எடுத்தியம்பப்பெறுகிறது. யானைக் கன்றுகளைக் கொல்லமாட்டார்கள். சிறிய குட்டிகள், கருவுற்ற நிலையிலுள்ள தளர்நடை பெண்விலங்குகளையும் துன்புறுத்த மாட்டார்கள்.
இசையும் நடனமும்
     கண்ணப்பன் பிறந்தபோது அரியிடப்பெற்ற குறுந்துடியை ஆர்த்தனர்.
    குன்றவர்கள் வரிக்கூத்தாடுவர். வேட்டுவப் பெண்கள் துணங்கைக் கூத்தாடுவர் (688).
மருத்துவ அறிவு
வேடர்கள் அம்பினால் ஏற்படும் புண்களை ஆற்றுவிக்கவல்ல மூலிகைகளை அறிந்திருந்தனர் (824)
பயில்வடுப் பொலிந்த யாக்கை (661.1) என்று நாகனைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.
            இவ்வாறு கண்ணப்பர் வாழ்க்கை மூலமாக வேட்டுவர் சமூகத்தின் வாழ்வியல் தொடர்பான உணவு, உடை, உறையுள், தொழில், பழக்க வழக்கங்கள், சடங்குகள், விழாக்கள் முதலான பல செய்திகளைச் சேக்கிழார் மிக நுணுக்கமாகப் பதிவுசெய்திருப்பதை அறியமுடிகிறது.

 காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில், காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016, பக்.98-113.