Friday 27 January 2017

கவிஞர் அவ்வை நிர்மலாவின் அணுத்துளி - முனைவர் நா. இளங்கோ அணிந்துரை

கவிஞர் அவ்வை நிர்மலாவின் அணுத்துளி - அணிந்துரை

முனைவர் நா. இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தாகூர் கலைக் கல்லூரி
புதுச்சேரி
ஹைக்கூ ஒரு புதுமையான கவிதை வடிவம். ஜப்பான்தான் ஹைக்கூவின் தாயகம். பிறந்தகத்திலிருந்து புகுந்தகம் வந்தபிறகு ஹைக்கூ.விடம் எத்தனையோ மாற்றங்கள். ஜப்பான் ஹைக்கூ.க்குக் கன்னிப் பெண்ணின் அழகு. தமிழ் ஹைக்கூ.வுக்குத் தாய்மையின் அழகு. துளிப்பா, குறும்பா, சிந்தர், ஹொக்கு என்றெல்லாம் தமிழில் ஹைக்கூ.வுக்குப் பல செல்லப்பெயர்கள் உண்டு. சிறிய கவிதை வடிவங்கள் தமிழின் மரபிலும் உண்டு. குறள் வெண்பா, மூன்றடி அகவல், வஞ்சி விருத்தம் என்றெல்லாம். ஆனால் அந்தக் கவிதை வடிவங்களில் இருந்து மாறுபட்டது ஹைக்கூ. மூன்றடிக் கவிதை ஹைக்கூ.. வாமனனை ஞாபகப்படுத்தும் வடிவம். கவிதை அளவில் சிறியதென்றாலும் அது எடுக்கும், விஸ்வரூபம்.
கவிதை வாசகனிடம் வெளிப்படையாகப் பேசுகிற விஷயங்களை விடப் பேசாமல் விடுகிற விஷயங்கள் ஏராளம். கவிதை பேசாமல் விட்டனவற்றைக் கவிதைக்குள்ளே தேடி வாசிப்பதில்தான் வாசகனின் வெற்றியும் கவிதையின் வெற்றியும் அடங்கியுள்ளது. தமிழின் மரபுக் கவிதைகளுக்கும் புதுக் கவிதைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் போலவே, புதுக் கவிதைகளுக்கும் ஹைக்கூக். கவிதைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. புதுக் கவிதையை மூன்றடியில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ. ஆகிவிடாது.
ஹைக்கூ எளிமையானது இனிமையானது. இந்த எளிமைதான் ஹைக்கூக் கவிதை வடிவத்திற்கு ஒரு ஜனநாயகத் தன்மையைக் கொடுத்துள்ளது. கவிதை எல்லோருக்கு மானது, ஒவ்வொருவர் மனதிலும் கவிதை இருக்கிறது, அதை வடித்தெடுப்பவன் கவிஞனாகிறான். இதுவரை உலகத்தில் எழுதப்பட்ட கவிதைகளை விட எழுதப்படாமல் ஒவ்வொருவர் மனதிலும் பிறந்து தவழ்ந்து வெளிவராமல் செத்துப்போன கவிதைகள் மிகுதி. அவற்றில் உலகின் தலைசிறந்த கவிதைகள் ஏராளமிருக்கலாம். இனி ஒரு கவிதையையும் சாகவிடமாட்டோம் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் 80களுக்குப் பிறகுதான் தமிழில் ஹைக்கூத் தொகுதிகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூவுக்கு 30 ஆண்டுக்கால வரலாறுதான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஹைக்கூ நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும். பெருகும் ஹைக்கூ நூல்களின் வளர்ச்சி ஒரு வகையில் அச்சத்தை உண்டாக்குகிறது என்றாலும் அச்சப்பட நாம் யார்? அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்ற மெல்லிய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது.
கவிஞர் அவ்வை நிர்மலா, காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியப் பணியோடு பல நூறு கவிஞர்களையும் பேச்சாளர்களையும் மாணவியர்களிலிருந்து உருவாக்கி வளர்த்த பெருமை அவருக்குண்டு. இவர் சிறந்த கல்வியாளர், ஐந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலம் மட்டுமன்றிப் பிரஞ்சு, இந்தி, தெலுங்கு, மராட்டி முதலான மொழிகளைப் பயின்றவர். கவிதை, நாவல், சிறுகதைகள், நாடகம் எனப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு வகைமைகளிலும் தொடர்ச்சியாக நூல்களை எழுதி வெளியிட்டு வருவதோடு மிகச்சிறந்த ஆய்வாளராகவும் திகழ்பவர். அவ்வையார் கல்லூரியில் நான் சில மாதங்கள் பொறுப்பு முதல்வராகப் பதவிவகித்த காலங்களில் தமிழ்த்துறைத் தலைவராயிருந்து அவர் ஒருங்கிணைந்;து நடத்திய கருத்தரங்குகளும் பயிலரங்குகளும் அவரின் ஆளுமைத் திறனுக்குத் தக்கதோர் சான்றுகளாகும்.
கவிஞர், அணுத்துளி என்ற இந்தக் கவிதைத் தொகுதியை ஹைக்கூவில் படைத்துள்ளார். வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க பல நல்ல ஹைக்கூக்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இந்தவகை ஹைக்கூக்களைப் பொதுவில் சென்ரிய+ என்றழைப்பது பழக்கம்.. சென்ரிய+ என்பது சமூக அக்கறையோடு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள், அவ்வளவுதான். இந்தத் தொகுப்பில் பல சென்ரியூக்களும் சில ஹைக்கூக்களும் உண்டு. கவிதைகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தனியே தலைப்புகள் இல்லை. ஹைக்கூக் கவிஞர்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடுவதை விரும்புவது இல்லை. தலைப்பிட்டால் அது வாசகனின் வாசிப்பு அனுபவத்தில் கவிஞன் தேவையின்றித் தலையிட்டதாகிவிடும். ஒரு கவிதையை என்னவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது வாசகனுக்குத் தெரியும். எனவேதான் கவிஞர் அவ்வை நிர்மலாவும் தமது கவிதைகளுக்குத் தலைப்பிடவில்லை.
அணுத்துளி:
இந்நூல் இயற்கை, சமூகம், அரசியல் என்று இன்றைக்குப் பரவலாகப் பாடுபொருளாகும் அத்துணைச் செய்திகளையும் பாடவும் செய்கிறது சாடவும் செய்கிறது. கவிஞர்களுக்குத்தான் இந்த வசதியிருக்கிறது. அவர்கள் எதையும் சாடலாம், பாடலாம்.
• ஒவ்வொன்றாயத் தேடி
சில்லறைகள் சேர்ந்த உண்டியல்
ஹைக்கூ நூல்
வீட்டிலிருக்கும் உண்டியலில் அவ்வப்போது கிடைக்கும் சில்லறைக் காசுகளை ஒவ்வொன்றாய் இட்டுச் சேமிப்பதைப்போல் ஹைக்கூக் கவிதைத் தொகுதிகளிலும் அவ்வப்போது எழுதிய கவிதைகளை ஒவ்வொன்றாய் இட்டு நிரப்பித் தொகுப்பாக்குகின்றோம் என்பதனை இக்கவிதைச் சுட்டுகிறது. ஹைக்கூ கவிதைகள் ஒவ்வொன்றும் வேறுவேறு சூழல்களில் வேறுவேறு மனநிலைகளில் எழுதப்படுகின்றன என்பதனால் இத்தகு தொகுப்பிலுள்ள கவிதைகளை நாவல் படிப்பதுபோல் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுதல் கூடாது. ஒவ்வொரு கவிதையாகப் படித்து அறிந்து உள்வாங்கி அனுபவித்தல் வேண்டும்.
இந்திய அரசியல், இன்றைய கவிஞர்களிடம் படும்பாடு உண்மையில் பரிதாபகரமானது. அரசியல் ஒரு சாக்கடை, படித்தவர்களும் பண்பாளர்களும் அதன் பக்கம் போகவேகூடாது. அதுகுறித்து வெளிப்படையாகப் பேசவும் கூடாது என்றிருக்கும் சராசரி இந்தியப் பொதுப்புத்திக்குள் கவிதைகள் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து உயிர்வாழ்கின்றன. இன்றைய கவிஞர்களுக்கு அரசியல் விமர்சனங்கள் தண்ணீர் பட்டபாடு. கவிஞர் நிர்மலாவும் இத்தொகுதியில் இந்திய அரசியலை கவிதைச் சவுக்கெடுத்து விளாசு விளாசு என்று விளாசுகிறார். எத்தனை படைப்பாளிகள் விளாசி என்ன பயன்? கடைசியில் நாம்தான் ஒதுங்கிப் போகவேண்டியிருக்கிறது. கீழ்க்காணும் கவிதைகளைக் கவிஞர் நிர்மலாவின் அரசியல் சாடல்களுக்குச் சான்றாகக் காட்டலாம்.
• நாளைய கொள்ளைக்கு
இன்றைய இலஞ்சம்
ஓட்டுப்பணம்
• தர்க்கமிடும் மக்களுக்குத்
தற்காலிக வாயடைப்பு
இலவசங்கள்
• ஈழத் தமிழரின்
ஓயாத் துயரம்
இந்திய அரசியல்
• இந்திய வாகனத்தில்
எத்தனையோ டயர்கள்
ஜாலியன் வாலாபாக்
• ஆட்சி மாற்றம்
மக்களுக்குக் கட்டிக்கொடுக்கிறது
ஆகாசக்கோட்டை
இவை உதாரணங்கள் தாம். தொகுப்பினுள்ளே மிகப்பல கவிதைகள் இதே தொனியில் இன்றைய இந்திய அரசியலை விமர்சனம் செய்கின்றன.
வாழ்க்கை குறித்த அச்சம் மனிதர்களை எப்படியெல்லாம் வாட்டி வதைக்கின்றது. இந்த அச்சம்தான் சோதிடமாக, வாஸ்துவாக, குறிகேட்பதாக, மூட நம்பிக்கைகளாக, கடவுள்களாக நம்மைச் சூழ்ந்து நம்வாழ்க்கைத் தீர்மானிக்கும் அசுரசக்திகளாக வலிமை பெறுகின்றன. கவிஞர் நிர்மலா பகுத்தறிவுச் சிந்தனையாளர், இத்தகு அச்சங்களிலிருந்து விலகியவர். பூனைக் குறுக்கே போனால் ஆகாது என்ற நம்பிக்கை நம்மிடையே நெடுங்காலமாக நிலவிவருகிறது. இந்த நம்பிக்கையை ஒட்டியது பின்வரும் கவிதை.
• காலையில் கண்ணில்பட்ட
மனிதனைப் பழிக்கிறது
அடிபட்ட பூனை
பூனையைப் பழிக்க நமக்கு உரிமை இருக்கிறபோது, காலையில் எதிர்பட்ட மனிதனின் அபசகுணம் குறித்து அடிபட்ட பூனை ஏன் பழிகூறக்கூடாது? என்று கவிஞர் நையாண்டி செய்கிறார்,
அணுத்துளி என்ற இத்தொகுதிக்குள் ஜப்பானிய ஹைக்கூவை நினைவுபடுத்தும் சில கவிதைகளும் உண்டு. இத்தகு ஹைக்கூக்கள் இயற்கை தரும் பரவசத்தில் நம்மைக் கரையச் செய்வன. பின்வருவன ஜப்பானிய ஹைக்கூவின் தந்தை பாNஷh கவிதைகளை நினைவுபடுத்தும் சிறப்புடையன.
• விரல் நுனிகளில்
கசியும் கொம்புத்தேன்
புல்லாங்குழல்
• உழவனின் வியர்வைக்குத்
தலைதாழ்ந்து வணக்கம்
நெற்கதிர்
கவிஞர் அவ்வை நிர்மலாவின் அணுத்துளி நம்மை நோக்கி எழுப்பும் கேள்விகள் ஏராளம். சில கவிதைகள் விடை சொல்கின்றன. சில கவிதைகள் மௌன சாட்சியாய் நிற்கின்றன. சில ஹைக்கூக்கள் நம்மைக் கவிதைவரை அழைத்துச் செல்லவில்லை என்றாலும் அதனால் பெரிய குறையொன்றுமில்லை. ஒரு படைப்பாளியின் எல்லாப் படைப்புகளுமே அசாதாரணமாயிருக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை. நிறைவாகக் கவிஞர் அவ்வை நிர்மலாவின் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.
• வெடிக்கக் காத்திருக்கும்
கன்னிவெடி
கவிதை
நல்ல சமூக அக்கறையோடு படைக்கப் பட்டிருக்கும் அணுத்துளி கவிஞர் அவ்வை நிர்மலாவின் மற்றுமோர் வெற்றிப்படைப்பு. நல்ல தமிழ் நூல்களைப் போற்றிப் பாராட்டும் தமிழுலகம் இந்நூலையும் உவந்து ஏற்கும்.
அணுத்துளி மற்றும் சிலப்பதிகார ஆய்வுக்கோவைகள் வெளியீட்டு விழா
இடம் : அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால் (14.12.2014)

அவ்வை நிர்மலாவின் 'சமயச் சாரலில்' நூல் அணிந்துரை


முனைவர் சிவ. மாதவன்
தமிழ் இணைப்பேராசிரியர்
காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி 605 008.
அவ்வை நிர்மலாவின் 'சமயச் சாரலில்' நூல் அணிந்துரை
     தமிழ்க் கவிதைகளைப் பாடுபொருள் அடிப்படையில் அகம், புறம், அறம், காப்பியம், பக்தி என பகுத்துக் காணும் மரபு பழமை வாய்ந்த மரபாகும். இவ்வகைக் கவிதைகளில் முதன்மையான பாடுபொருளுடன் கூடவே வாழ்வியலுக்கு உதவவல்ல பல கருத்துகளும் இடையிடையே பின்னிப் பிணைந்து நிற்றலைக் காணமுடியும். சமயச் சார்பற்ற சங்கப் பாக்களில் கடவுள், வழிபாடு, சடங்கு, நம்பிக்கை, தொன்மம் சார்ந்த கருத்துகள் இடம்பெற்றிருத்தல் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவ்வாறே, சமய நூல்களாகக் கருதப்பெறும் திருமுறை இலக்கியங்கள் ஆழ்வார் பாசுரங்கள் சீர்திருத்தக் கருத்துகளை முன்வைக்கும் சித்தர் பாடல்கள், இறையின்பம் மிகுவிக்கும் இசைப்பாடல்கள் போன்றவற்றில் சமுதாயத்தின் - மக்களின் - வாழ்க்கையை விவரிக்கும் கருத்துக்களும் உயரிய வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் ஒதுக்கிவிட இயலாது.
   இலக்கியப் படைப்புகள் மக்களை முன்னிறுத்திப் படைக்கப்பெறுவதால், அவை எவ்வகைப் பொருண்மையைச் சார்ந்திருப்பினும் அவற்றில் மக்களின் வாழ்வோடு தொடர்புடைய பல செய்திகள் அமைவது இயல்பான ஒன்றாகும். இறைமையைப் போற்றும் இலக்கியமாயினும் மக்களை அவர்தம் மொழியை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டுக் கூறுகளைப் புறந்தள்ளிவிட்டுப் படைக்கப்பெறின் அவ்விலக்கியம் மக்களிடையே நிலைத்து வாழ்தல் இயலாது. இவ்வெண்ணத்தை உறுதிபட நிலைநிறுத்திக் கொண்டவர்களாகத் தமிழ்இலக்கியப் படைப்பாளர்களைக் கூறலாம். அதிலும் குறிப்பாக, தமிழ் பக்தி இலக்கியக் கவிஞர்களிடம் இந்த எண்ணம் சிறப்பாக இருந்ததெனலாம். தம் காலத்திற்கேற்ற கருத்துகளைப் பழைய மரபின் பின்னணியோடு உரசிப்பார்த்துப் புதிய நெறியைப் படைத்துக்கொள்ளும் இலக்கியப் பரம்பரை இன்றளவும் தொடர்ந்து வளர்ந்துவருதல் கண்கூடு. இத்தகைய இலக்கிய வரலாற்றுப் பின்னணியை நன்குணர்ந்த நிலையில் சமய நூல்களில் இடம்பெறும் பல்வகைச் செய்திகளையும் தொகுத்தும் பகுத்தும் ஆய்ந்துகூறும் நூலாக, ‘சமயச் சாரலில்என்னும் தலைப்பமைந்த தம் நூலை எழுதியுள்ளார் முனைவர் இரா. நிர்மலா அவர்கள்.
  பதினேழு கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்நூல். செவ்வியல் நூல்களான கலித்தொகை, சிலப்பதிகாரம், காப்பியங்களான சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், பக்தி இலக்கியங்களான தேவாரம், திருமந்திரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், பெரியபுராணம் போன்ற முற்காலத் தமிழ்நூல்களும் ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பட்டுத் தோன்றிய வீரமாமுனிவரின் நூல்கள், தியாகையரின் இசைப் பாடல்கள், வள்ளலாரின் அருட்பா, கோபால கிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, மகாகவி பாரதியாரின் பாடல்கள், இருபதாம் நூற்றாண்டில் துரைமாலிறையன் எழுதிய மரியம்மை காவியம் போன்ற நூல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்கு மூலமாக விளங்குகின்றன.
   இடைக்காலத்தில் காரைக்கால் பகுதி பெற்றிருந்த சிறப்பைத் தேவாரப் பாடல்கள் வாயிலாக நூலாசிரியர் எடுத்து இயம்பியுள்ளார். சைவம் மகளிரால் வளர்ந்தது என்னும் கருத்தைச் சேக்கிழார் துணையோடு விளக்கும் கட்டுரை மனையறத்தின் வேர்களாக மகளிர் உள்ளனர் என்னும் கூற்றை மெய்ப்பிக்கின்றது.
மூப்பும் இறப்பும் குறித்த திருமூலரின் சிந்தனையை ஆழ்வாரின் பாடலுக்குப் பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரையோடு இயைபுபடுத்தி விளக்குகிறது திருமூலரின் மூப்பு இறப்புச் சிந்தனைகள்என்னும் கட்டுரை. திருமாலின் வண்ணம் கருமை மட்டும் அன்று, அவருக்கு நீலம், பசுமை, வெண்மை முதலான நிறங்களும் உண்டு என்பதை ஆழ்வார் பாசுரங்கள் வழி அழகுற மொழிகிறது திருமால் வண்ணம்என்னும் கட்டுரை. யாழ் எனும் இசைக்கருவி சீவகசிந்தாமணியில் எவ்வாறெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளது என்பதை இந்நூலில் உள்ள சீவகசிந்தாமணியில் யாழ்என்னும் கட்டுரை விளக்குகிறது. இவையன்றிக் கம்பராமாயணத்தில் இடம்பெறும் சிவன் குறித்த செய்திகள், வாழ்வியல் தொடர்பான சித்தர்களின் எண்ணங்கள், தியாகையரின் இசைப்பாடல்களில் அமையும் சமுதாயச் சிந்தனை, வள்ளலார், பாரதியார் ஆகியோரின் இறைக்கோட்பாடு, சாதிச் சார்பு சமூக அமைப்பின் வலிமையை எடுத்துக்காட்டும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, மரியம்மை காவியப் படைப்பில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பெறுமிடம் போன்ற பொருண்மைகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அனைத்தும் சிறப்பிற் குரியன. முனைவர் இரா. நிர்மலா அவர்களின் சமயச் சாரலில் என்னும் நூலிலுள்ள இக் கட்டுரைகள் பல்வேறு சமயங்களில் எழுதப்பட்டவையாக கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவையாக இருக்கக்கூடும் என எண்ணுகிறேன். தற்போது அவற்றைத் தொகுத்து நூல்வடிவில் வழங்கியுள்ளார். பல வண்ண மலர்களைத் தொடுத்து அழகுபட உருவாக்கும் மாலை போன்று பல பொருண்மையுடைய கருத்துகளைத் தொடுத்துச் சிந்தனைக்கு விருந்து படைக்கும் கட்டுரை மாலையாக இந்நூலை அமைத்துள்ளார் நூலாசிரியர்.
   இக் கட்டுரைகளைக் கருத்தூன்றிப் படிக்கும்போது ஆசிரியரின் நுணுகிநோக்கும் ஆய்வுப் பண்பும் நிரல்பட உரைத்திடும் நெறியும் தெளிவும் எளிமையும் கொண்ட இனிய மொழிநடையும் இலக்கியங்களைச் சமூகத்தோடு இயைபுபடுத்திக் காணும் சிந்தனைத்திறமும் ஒருங்கே வெளிப்பட்டுச் சிறத்தலை உணரலாம். தமிழில் அடிப்படை ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படல் வேண்டும் என்னும் எண்ணத்தை இந்நூல் ஏற்படுத்துகின்றது. இந்த நூலை ஆராய்ச்சியாளர்களும் தமிழ் அறிஞர்களும் வரவேற்றுப் போற்றுவர் என நம்புகிறேன். சிறந்த நூலைப் படைத்து வழங்கும் நூலாசிரியர் இரா. நிர்மலா அவர்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                              சிவ. மாதவன்


ஆத்திசூடி - அரிவை ஆத்திசூடி

அரிவை ஆத்திசூடி


1. ன்பே அழகுணர்
2. திக்கம் அழித்திடு
3. ல்லறம் போற்றிவாழ்   
4.  டிலா திறன்வளர்
5.  றவுகள் காத்துவாழ்
6.  ர்க்கு உதவிடு
7.  திரியை எடையிடு
8.  ழ்மை விரட்டு
9.  யம் தெளிந்திடு
10. ப்புர வறிந்திடு
11. துதல் கடைப்பிடி
12. ஒளவை சொல்நட
13. ண்ணீர் விட்டொழி
14.  காட்சிப் பிழைதெளி
15.  கிடைப்பதில் மனம்மகிழ்
16.  கீழோர் உறவறு
17.  குறிக்கோள் வாழ்வுகொள்
18.  கூன்மனம் விட்டொழி
19. கெடுமதி அகழ்ந்தெறி
20.  கேண்மை மனங்கொள்
21. கைத்தொழில் கற்றறி
22. கொள்கைப் பிடிப்புகொள்
23. கோபம் குறைத்திடு
24. கௌவைத் தூற்றொழி
25. க்தி நீயென்றறி
26. சாத்திரம் பழகு
27. சிறுமைகள் தகர்த்தெறி
28. சீர்தரா உறுதிகொள்
29. சுறுசுறுப்புப் பழகு
30. சூது மனந்தவிர்
31. செம்மாந்த நடைகொள்
32. சேவை மனங்கொள்
33. சைனியப் பயிற்சிகொள்
34. சொத்தினைப் பெறமுயல்
35. சோதனை எதிர்கொள்
36. சௌகரியம் விருத்திசெய்
37. மனை வெற்றிகொள்
38. ஞானச் செருக்குகொள்
39.  ஞிமிறுபோல் இயங்கு
40.  ஞெண்டின் பிடிப்புகொள்
41.  லைமை விரும்பு
42. தாய்மை போற்று
43. திறம்பா மனங்கொள்
44. தீயோர் விலக்கிவாழ்
45. துவளாச் சிந்தைகொள்
46. தூய்மை அகங்கொள்
47. தெளிவாய்க் கருத்துரை
48. தேன்போல் சொல்லுரை
49. தையலெனத் தாழேல்
50. தொன்னெறி போற்று
51. தோல்வியை வீழ்த்து
52. லிவை மீட்டுயர்
53. நாணம் நசித்திடு
54. நிமிர்ந்த நடைகொள்
55. நீசரை எதிர்த்திடு
56. நுண்ணறி திறங்கொள்
57. நூல்கள் இயற்றிடு
58. நெருப்பெனச் சிவந்தெழு
59. நேரியப் பார்வைகொள்
60.  நைந்திடா உளங்கொள்
61. நொந்திடா உறுதிகொள்
62. நோக்கம் விரிவுசெய்
63. குத்தறி சிந்தைகொள்
64. பார்புகழ் பெற்றிடு
65. பிற்போக்கு நடைதவிர்
66. பீடுறப் பழகு
67. புயலின் வேகங்கொள்
68. பூவின் மென்மைகொள்
69. பெண்விடுதலை போற்று
70. பேச்சுரிமை நிலைநாட்டு
71. பையென இயங்கேல்
72. பொறுப்புகள் ஏற்றிடு
73. போலிமை நீக்கு
74. பௌவச் சீற்றங்கொள்
75. டமை நீக்கு
76. மாதர் நலம்பேண்
77. மிகையாய்ப் பேசேல்
78. மீதம் வைத்துவாழ்
79. முன்னுணர் ஆற்றல்பெறு
80. மூதுரை போற்றிவாழ்
81. மென்மை துலங்கிடு
82. மேன்மை விழைந்திடு
83. மைந்தர்ப் பொறுப்புணர்த்து
84. மொட்டாய் முகிழ்த்திடு
85. மோகம் நீக்கு
86. மௌடியம் அகற்று
87. ந்திரப் பயன்கொள்
88. யாக்கை வலிவுசெய்
89. யுகப்புரட்சி செய்
90. யூகம் ஆய்ந்தறி
91. யோகப் பயிற்சிகொள்
92. யௌவன மனங்கொள்
93. கசியம் பேணு
94. ரோஷம் பெருக்கு
95. ட்சியப் பார்வைகொள்
96. ரதட்சணைப் பேயழி
97. வாழ்க்கைத் தரம்உயர்த்து
98. விழுமியம் பெறமுயல்
99. வீறுடன் பழகு
100.வெற்றிகள் நாடிடு
101.வேலையில் சிறந்திடு
102. வையகம் போற்றவாழ்


இலங்கையில்



நமக்காக எல்லாம் நமக்காக . . .



நீலவானத்து நிலாவிற்கருகில்
கோலமிகு மாளிகையில்
குலவியிருப்போமென
குருட்டுத்தனமான
கற்பனைகள் குவிக்காதே!
மின்வெட்டிலா ஊரில்
வீடொன்று வாங்கிவிட்டுத்
திட்டவட்டமாய் என்னைத்
திரும்பிவந்து பார்த்திடு!

நட்சத்திரங்கள் பறித்துவந்து
நீநடக்கும் பாதையிலே
கொட்டிடவாஎன்றெல்லாம்
கோரிக்கை வைக்காதே!
வெட்டிப் பயலாக
ஊர்சுற்றித் திரியாமல்
வேலை யன்றில்
சேர்ந்துவிட்டு எந்தன்
விருப்பத்தைக் கேட்டிடு!

சுட்டெரிக்கும் சூரியனைப்
பற்றிவந்து தரட்டுமாவென
காதில்பூ சுற்றுகிற
வெட்டிப்பேச்சுகளை
இத்தோடு விட்டுவிடு!
வாழ்க்கை இனித்திடவே
வசதிகளைச் சேர்ப்பதற்கு
வழிவகை செய்துவிட்டு
வந்தெனக்குச் சொல்லிவிடு!

கற்பனைத் தேரினிலே
கனவுக் குதிரைபூட்டி
காலமெலாம் எனையேற்றி
காயப்படுத்தாதே!
நாம் இருவர்
மகிழ்ந்துசெல்ல
நானோ காராவது
பதிந்துவிட்ட பின்னாலே
காதல்மடல் வரைந்திடு!

காலங்கள் கடந்துநிற்கும்
காவியங்கள் படைத்துநிதம்
காலடியில் கொட்டுவதாய்க்
கதைகள் புனையாதே!
சாராயம் குடித்துவிட்டு
சாக்கடையில் உருண்டுநிதம்
தள்ளாடி வீடுவந்து
தகராறு செய்யாத
தரமுண்டேல் சொல்லிவிடு!

திருமணம் புரிந்திடில்
பன்னீரில் நீராட்டி
பாதத்தைக் கழுவுவதாய்ப்
பசப்புவார்த்தை பிதற்றாதே!
பிரச்சனை வந்துவிட்டால்
அமிலத்தால் அபிஷேகம்
அறவே நடக்காதென
உறுதிமொழிப் பத்திரம்நீ
எழுதிவந்து தந்திடு!

உனக்காக உயிரையும்
உறுதியாகக் கொடுப்பேன்என்ற
உலுத்துப்போன வார்த்தைகளை
உளறிக் கொட்டாதே!
தனித்துநாம் இருக்கையிலே
காமுகர்கள் சூழ்ந்துவிடில்
என்கற்பைக் காத்திடவே
தற்காப்புக் கலைபயின்று

தகுதியுடன் வந்திடு!


அவ்வை நிர்மலாவின் மரத்தை வீழ்த்திய விழுது - திறனாய்வு

அவ்வை நிர்மலாவின் மரத்தை வீழ்த்திய விழுது - திறனாய்வு





பெண்கள் சூழ்நிலைக் கைதிகளா? சந்தர்ப்பவாதிகளா?
திருமதி அனந்தலட்சுமி ஹேமலதா
துணைப்பேராசிரியர், ஆங்கிலத் துறை
தாகூர் கலைக் கல்லூரி,
புதுச்சேரி

           மனிதன் ஆறறிவு படைத்த ஒரு விலங்கு என்பர். மனித மனம் ஒரிடம் நில்லாது குரங்காய்த் தாவும் இயல்புடையது; சில சமயம் இருக்கும் இடத்திற்கேற்பப் பச்சோந்தியாய் நிறம் மாறும். மனிதனுக்குப் பல முகங்கள்; பல குணங்கள். சந்தர்ப்பங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் தெரியும்; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளவும் தெரியும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைத் தோலுரித்துக் காட்டும் முயற்சியே எழுத்தாளர் நிர்மலா கிருட்டினமூர்த்தியின் மரத்தை வீழ்த்திய விழுது என்னும் புதினம். நான்கு முதன்மைப் பாத்திரங்களைக்கொண்டே இக் கதையை நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர். இவர்களில் சிலர் சந்தர்ப்பவாதிகளாகவும் சிலர் சூழ்நிலைக் கைதிகளாகவும் அமைவதற்கான காரணங்களை ஆய்வதாக இக் கட்டுரை அமைகிறது.
முதிர்கன்னியின் திருமண ஆசை
                  கதையின் நாயகன் கோபாலன் சிறந்த பண்புகளோடு விளங்குபவன். தன் மனைவி பவித்ரா மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன். அவனது இந்தக் குணமே அவன் அலுவலகத்தில் பணிபுரியும் கல்யாணிக்கு அவன் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. சுயநலம் மிக்கவர்கள், காமக்கண் படைத்தவர்கள், ஆணாதிக்க வெறி கொண்டவர்கள் - இப்படிக் குறையுடைய ஆடவர்களையே தன் வாழ்க்கையில் கண்ட கல்யாணிக்குச் சிறந்த பண்புகளைக்கொண்ட கோபாலனைக் கண்டதும் அவன்மீது விருப்பம் ஏற்படுகிறது. கல்யாணி நாற்பதை நெருங்கும் முதிர்கன்னி; இயல்பாகவே பிறர்க்கு உதவும் பண்புடையவள்; அலுவலகத்தில் மற்றவர்கள் முடிக்கவேண்டிய சில்லரை வேலைகளைத் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவள். சுறுசுறுப்பும் அறிவும் பணிவும் நிறைந்த கல்யாணி குடும்பச்சுமை காரணமாகத் திருமணமாகாமல் வாழ்ந்துவருகிறாள். அவள் நல்லவளாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஒரு கட்டத்தில் ஏற்கெனவே திருமணமான கோபாலனைத் தனக்குரியவனாய் ஆக்கிக்கொள்ளும் சுயநலமிக்க சந்தர்ப்பவாதியாய் மாறுகிறாள். குழந்தையில்லாக் குறையை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கும் கோபாலன் - பவித்ரா தம்பதியினரிடையே நுழைந்து அந்தச் சின்ன நூல்கண்டை வைத்து அவனைச் சிறைப்படுத்தவும் முயல்கிறாள். இந்த இலாவகம் முதிர்கன்னியர் சிலர் தமது எதிர்கால நலனுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் சுயநலமிக்க சந்தர்ப்பமாக அமைவதை உளவியல் உண்மையோடு எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். தனக்கு வாய்த்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வாடகைத்தாய் என்ற அஸ்திரத்தைக் கல்யாணி கையிலெடுக்கிறாள். அதற்கு அவள் தாயும் முழுமையாக ஒத்துழைக்கிறாள்.
             கல்யாணி கருவுற்ற நிலையில், தனக்குக் கோபாலனின் விருப்பமே முதன்மையானது என்பதுபோல்,
உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா இதைக் கலைச்சுடறேன். (26)
உங்களுக்காகவே உங்க பிள்ளைய சுமக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷங்க (28)
என்றெல்லாம் கூறுகிறாள். தனக்கு வரப்போகும் அவதூறுகளைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் கோபாலனுடைய மகிழ்ச்சியும் எதிர்காலமுமே தன் குறிக்கோள் என்பதாய் ஒரு போலி நாடகத்தைக் கோபாலன் நம்பும்விதமாக அரங்கேற்றுகிறாள் கல்யாணி.
தாயின் இயலாமை
கல்யாணியின் தாய் கணவனை இழந்தவள்; மூன்று பெண்குழந்தைகளைப் பெற்றவள்; மூத்த மகளான கல்யாணியின் சம்பளத்தில் இளைய பெண்களின் திருமணத்தை முடித்தவள்; நாற்பதை நெருங்கும் கல்யாணிக்குத் தமிழ்ச் சமுதாயத்தில் இயல்பாய் நடப்பதுபோன்ற திருமணத்திற்கு வாய்ப்பில்லை என்ற உண்மையை நன்றாக உணர்ந்தவள்; தனக்குப்பின் அவளுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள் என்ற கேள்விக்கு விடைகிடைக்காமல் அஞ்சிக் கொண்டிருப்பவள்.
                  கல்யாணியின் மேலதிகாரியான வசதிபடைத்த கோபாலனின் குணநலன்களைக் கல்யாணி மூலமாக அவள் அறிகிறாள். அத்தகையவன் தன் மகளுக்குக் கணவனானால் அவள் வாழ்க்கை செல்வ வளத்துடனும் மகிழ்ச்சியாகவும் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறாள். அத்தருணத்தில் கல்யாணிக்கும் கோபாலனுக்கும் இடையில் நிலவிய சுமூகமான நட்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் முனைகிறாள். எனவே அவள் தன் வீட்டிற்கு வரும் கோபாலனிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கிறாள். பெரும்பாலும் தன் குடும்பச் செய்திகளைப் பிறரிடம் வெளிப்படுத்தாத கோபாலன் கல்யாணியின் தாயினுடைய சாதுர்யத்தால் ஒளிவுமறைவு இல்லாமல் வெளியே கொட்டிவிடுகிறான். குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து,
சொத்து சுகம் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்? அப்பான்னு கூப்பிட ஒரு புள்ள இல்லையே? (14)
என்று கூறி அவன் மனத்தின் மூலையில் மறைந்திருந்த குழந்தை வேட்கையை வெளியே கொணர்கிறாள் கல்யாணியின் தாய். பட்டத்தரசி கோசலையாக பவித்ரா இருந்தபோதும் தசரதனுக்குத் தக்க சமயத்தில் உதவிபுரிந்து வரம் வாங்கிய கைகேயியைப்போல் தன் மகள் வாழ்க்கை அமையும் என்று நம்புகிறாள். அதனால் கல்யாணியும் கோபாலனும் உறவுகொள்ளும் தருணத்திற்குரிய சூழலையும் உருவாக்கித் தருகிறாள். அதன் விளைவான கல்யாணியின் கர்ப்பத்தைச் சாதகமாக்கிக் கோபாலனைக் கல்யாணியின் வலையில் விழவைக்கிறாள்.
தம்பி. . . நீங்க எதுவும் பயப்படாதீங்க. . . எங்களுக்கு உங்க அன்பே போதும். தாலி வேணும், சொத்து வேணும் அப்படின்னு எல்லாம் நானோ என் பெண்ணோ எப்போதும் ஆசைப்பட மாட்டோம். (25)
என்று மெல்ல அவனை அசைத்துப் பார்க்கிறாள். மேலும்,
காதும் காதும் வெச்ச மாதிரி நீங்க யாரோ ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கிட்டதா ஆக்கிடலாம். எந்தக் குழந்தையோ உங்க வீட்டுல உரிம கொண்டாடறதவிட உங்க இரத்தம் உங்க மடியில தவழறது சந்தோஷம் இல்லையா. . . ? (28)
என்று கோபாலனின் வாழ்க்கையை பொருளுடையதாக்கத் தானும் தன் மகளும் பெருமுயற்சி மேற்கொள்வதுபோல் காட்டிக்கொள்கிறாள்.
                  கோபாலனின் வாழ்வில் நுழைவதற்குக் குழந்தைதான் ஒரேயொரு துருப்புச் சீட்டு என்பதைக் கல்யாணியும் அவள் தாயும் நன்குணர்ந்து யாருக்கும் சந்தேகம் வராமல் எந்தச் சிக்கலுமின்றிக் குழந்தையைப் பெற்றெடுக்கச் சென்னைக் கிளைக்கு மாற்றல் வாங்கிப் போகிறார்கள். சூழ்நிலையைத் தங்களுக்கேற்றவாறு சாதகமாக மாற்றியமைத்துக் கோபாலனை ஆட்டி வைக்கின்றனர்.
குழந்தை ஆசை
                  மரத்தை வீழ்த்திய விழுது கதைத்தலைவன் கோபாலனும் சந்தர்ப்பவாதிதான். பவித்ராவின் கணவனாய்ப் பவித்திரமாய் இருக்கவேண்டியவன் ஒரு சந்தர்ப்பம் வாய்த்ததும் கல்யாணியோடு உறவுகொண்டு தனக்கென ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கத் துணிகிறான். அதுவரை அவன் மனைவியோடு அவன் வாழ்ந்த வாழ்க்கை ஒரு நாடகமாக அர்த்தமற்றதாக முடிவடைகிறது. கல்யாணியுடனான தனது உறவைத் தன் மனைவியிடமிருந்து மறைக்கப் பல வழிகளில் முயற்சி செய்கிறான். பவித்ரா அவனைக் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பொய்களைக் கூறிச் சமாளிக்கிறான். தன் தவறுகளை நியாயப்படுத்துவதற்குத் தகுந்த காரணங்களைக் கண்டுபிடிக்கிறான். கல்யாணி பெற்றெடுக்கவிருக்கும் குழந்தையைக் காலப்போக்கில் தத்துக் குழந்தையாய் ஆக்கி விடலாம் என்று முடிவு செய்கிறான்.
  சிலப்பதிகார மாதவியைக் கற்புக்கரசி என்று புகழ்ந்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அத்திப்பூக்கள் நெடுந்தொடரில் இடம்பெறும் கற்பகத்தைத் தியாகச்சுடர் என்று வருணித்தும் கல்யாணியை அவர்களோடு மனத்திற்குள் ஒப்பிட்டுப் பார்த்தும் மகிழ்ந்துபோகிறான். ஆனால் என்றேனும் தன்மனைவிக்கு உண்மை தெரியும்போது அவள் அடையப்போகும் மன வேதனையையும் அவளது எதிர்கால வாழ்க்கை நிலையையும் குழந்தையைப் பெற்றெடுத்தவுடன் கல்யாணி தனக்கு அளிக்கப்போகும் நெருக்கடிகளையும் குறித்து அவன் எள்ளளவும் சிந்தித்க முனையவில்லை. தன் விருப்பத்திற்கும் தன் செயல்களுக்கும் ஏற்றாற்போல் மனைவி தன்னை அனுசரித்து வாழ வேண்டும் என்னும் ஆணாதிக்க வெறி அவனுள்ளிருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தன்மையை அறியமுடிகிறது. மனைவியைச் சமமாக நடத்துபவனாகவே இருந்தாலும் ஆடவன் தன்னுடைய விருப்பங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பவனாக இருக்கும் இயல்பையும் அத் தருணத்தில் அவன் தன் மனைவியைத் தூக்கி எறியவும் தயங்காத போக்கினைக் கொண்டவனாக இருப்பதையும் புலப்படுத்தும் ஆசிரியர் ஒவ்வொரு ஆடவனுக்குள்ளும் ஆண் என்ற அகம்பாவம் தூங்கிக் கொண்டிருப்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார்.
சூழ்நிலைக் கைதி
      இக்கதையில் பவித்ரா மட்டுமே சுயநலமற்றவளாய்ச் சூழ்நிலையின் கைதியாய்ச் சித்திரிக்கப்படுகிறாள். அவள் பத்தாண்டுக் காலம் தன் கணவனொடு வாழ்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை நினைத்தும் இப்போது தன்னைக் காட்டிலும் அவன் கல்யாணிக்கு முக்கியத்துவம் தருவதை உணர்ந்தும் ஒரு முடிவெடுக்கிறாள். கணவன் தன் கைமீறிப் போய்விட்டதால் தனது சர்க்கரை நோய்க்கு உரிய மருந்துகளை உட்கொள்ளாமல் நேரத்திற்கு உணவருந்தாமல் உடம்பைக் கெடுத்துக்கொண்டு இறுதியில் உயிரையே விடுகிறாள்.
கதைக்குள் கதை
                  மேகலா என்ற முதிர்கன்னிக்கும் எழுத்தாளர் முகுந்தனுக்கும் ஏற்பட்ட தவறான உறவால் உண்டாகியிருக்கும் குழந்தையால் எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதை மேகலா தான் வாசிக்கும் ஒரு நாவலின் மூலம் உணர்வதாக ஆசிரியர் கதைக்குள் கதை என்கிற உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். மேகலா கல்யாணியைப் போல் சந்தர்ப்பவாதியில்லை, திரைப்படங்கள், நெடுந்தொடர்கள் முதலானவற்றில் தான் கண்ட சித்திரிப்புகளின் தாக்கத்தால் வாடகைத்தாய் என்பது தியாகத்தின் கடைசிப்படி என்ற நினைப்பால் உந்தப்பட்டு, தன் யோசனைக்கு உடன்படாத முகுந்தனை அன்பினால் கட்டிப்போட்டு அவனுக்காகவே ஒரு குழந்தையைச் சுமக்கிறாள். இச் சமயத்தில் கோபாலன் - பவித்ரா பற்றிய புதினத்தை வாசிக்கிறாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு மனப்பூர்வமாக முடிவெடுத்து மாத்திரைகளை உட்கொண்டு கருச்சிதைவு செய்துவிடுகிறாள்.
எதிர்ப்பின்மை
                  தன் கணவனிடத்தில் பவித்ரா கொண்ட தூய்மையான அன்பும் பத்தாண்டுகள் அவனோடு இல்லறம் நடத்திய மாண்பும் ஆணாதிக்கத்தை எதிர்த்துக் குரல்கொடுக்கின்ற வேகத்தைக் கட்டிப்போடுகிறது. அதனால் பவித்ரா கோபாலனின் வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள உயிரைவிடுகிறாள். ஒரு ஆண், இரண்டு பெண்கள் என்னும் முக்கோணக் கதையில் பெரும்பாலும் கதைமுடிவில் ஒரு பெண்ணைச் சாகடித்துவிட்டு எஞ்சியிருக்கும் பெண்ணோடு அந்த ஆண் சுபமாக வாழ்க்கையைத் தொடருவதாகக் கதைபுனைதல் பண்டைதொட்டு எழுத்தாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற உத்தியாகும். இதனை இக்கதையின் ஆசிரியரும் பயன்படுத்தியுள்ளார். எனினும் கதையை இத்துடன் நிறுத்திவிடாமல் கோபாலனைச் சற்றே மாறுபட்டுப் படைத்துள்ளார். பவித்ராவின் இறப்புக்குத் தான்தான் காரணம் என்ற குற்றவுணர்ச்சியால் அவன் இறந்துவிடுவதாகக் காட்டி அவனையே நம்பி வாழ்க்கையைத் தொடங்கநினைத்த கல்யாணியையும் இறக்கச்செய்து அனைத்திற்கும் காரணமான கல்யாணியின் தாயையும் தற்கொலை புரிந்துகொள்ளச்செய்கிறார். எந்தக் குழந்தையின் காரணமாகக் கோபாலனின் வாழ்க்கை திசைமாறியதோ அந்தக் குழந்தை அனாதையாகக் கிடப்பதாகக் காட்டி வாழ்க்கையில் எட்டவேண்டிய உயரம் குழந்தைப்பேறு மட்டுமே என்பதைப் புறந்தள்ளி, வாழ்க்கையில் கணவனும் மனைவியும் இறப்புவரை எட்டவேண்டியது எக்காரணத்தாலும் பிரிக்கமுடியாத உள்ளம் ஒன்றுபட்ட அன்பே என்பதை நிறுவுகிறார் ஆசிரியர். இக் கருத்தை மேகலா மூலமாகவும் வாசகர்களுக்குப் புரியவைக்கிறார்.
முடிவுரை
                  சூழ்நிலை காரணமாக வேறு வழியின்றி விதிவசம் தம் வாழ்க்கையை ஒப்படைத்து வாழ்ந்து மடிபவர்கள் ஒருபுறம் இருந்தாலும் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு தன்னலத்திற்காய்ப் பிறரைப் பலவிதங்களில் பயன்படுத்திக்கொண்டு அவர்களுடைய நீரோட்டமான வாழ்க்கையைச் சீர்குலைத்து விடுகிறார்கள் என்பதை இந்தக் குறும்புதினம் மூலம் எழுத்தாளர் நிர்மலா கிருட்டினமூர்த்தி எடுத்துக்காட்டுகிறார். இலக்கியம் என்பது நம்மிடையே வாழும் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். சமூகச் சிக்கல் ஒன்றைக் கையாண்டு அதற்கு ஒரு தீர்வும் வழங்கியுள்ளார் ஆசிரியர். சந்தர்ப்பவாதத்திற்குத் 'தியாகம்" என்றும் 'நல்ல எண்ணம்" என்றும் போர்வை போர்த்திக்கொண்டு அலையும் மனிதர்களை இனியேனும் நாம் அடையாளம் காண முடிந்தால் அது இப்புதினத்திற்குக் கிடைக்கும் வெற்றியாகும்.

முதன்மை நூல் :
நிர்மலா கிருட்டினமூர்த்தி, மரத்தை வீழ்த்திய விழுது, சென்னை : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2008.



மங்கையராய்ப் பிறப்பதற்கே...



வெள்ளனநான் எந்திரிச்சி
வெளிவாசல் பெருக்கணுமே!
வெச்சபுள்ளி தப்பாம
மாக்கோலம் முடிக்கணுமே!

பால்காச்சி டீப்போட்டு
பரபரன்னு குடிச்சிபுட்டு
அடுப்படில வேலயத்தான்
அசராம முடிக்கணுமே!

அம்முகுட்டி செல்லகுட்டி
எந்திரிங்க என்றுசொல்லி
எம்புள்ள ரெண்டையுந்தான்
எழுப்பிவிட வேணுமில்ல!

பேருசொல்லிக் கூவிகூவி
பல்லத்தான் வெளக்குங்க,
பாத்ரூமு போய்வாங்க,
பள்ளிக்கூடப் புஸ்தகங்க
பட்டுன்னு எடுத்துவைங்க!
பத்துபாஞ்சி நிமிஷத்துல
பள்ளிவேனு வந்துபுடும்!
மீதிபாதி இட்டலியும்
சாப்பிட்டு முடிங்கன்னு
டைகட்டி சூபோட்டு
தரதரன்னு இழுத்துபோயி
பஸ்ஸ§லத்தான் ஏத்திவிட்டா
அப்பத்தான் மூச்சுவரும்
அடுத்தவேல நெனப்புவரும்!

அந்தப்புறம் பாத்தாக்கா
தாலிகட்ன மவராசன்
பேப்பரும் கையுமாத்தான்
பேஜாரு பண்ணுவாரு!
அத்தானே டீக்குடிங்க
ஆபிசுக்கு நேரமாச்சு
வெரசாக குளிங்கன்னு
நச்சரிப்பேன் ஓயாம!

பேண்ட்டுசட்ட அயனுபண்ணி
செல்போனு சார்ஜுபண்ணி
செருப்பயுந்தான் தொடச்சிவச்சி
செய்யவேணும் பலவேல!

சுறுசுறுப்பே இல்லாம
மணிக்கணக்கா இருந்துபுட்டு
நேரந்தான் ஆனதுன்னு
பறப்பாரு றெக்ககட்டி!
அய்யய்யோ பாவமுன்னு
அவசரமா நானுந்தான்
அஞ்சாறு இட்டலிய
அருமயான சட்னியோட
தட்டுலத்தான் ஏந்திநின்னா -
சாப்பிடத்தான் நேரமில்ல
சண்டகிண்ட புடிக்காதனு
சட்டுனுதாங் கௌம்பிடுவார்!

கண்டகண்ட தண்ணியால
காமால வந்துடும்னு
காச்சிநல்லாக் குளிரவச்ச
தண்ணியத்தான் ரொப்பிவச்சா
பட்டிகாடு நானுன்னு
பகடிசெஞ்சி போயிடுவார்!

சுத்தபத்தம் இல்லாம
எப்படியோ சமச்சுவச்சு
யார்யாரோ சாப்புட்ட
எச்சிதட்ல பரிமாறும்
ஓட்டலோட சாப்பாடு
ஒத்துக்கா துன்னுநானு
சீக்கிரமா எந்திரிச்சி
செரமமாநான் சமச்சுவெச்சி
கட்டிவெச்ச சாப்பாட்டக்
கட்டாயப் படுத்தாத
கைச்சுமையே வேண்டான்னு
கத்திபுட்டுப் போயிடுவார்!

வெயிலிலே சுத்தாதிங்க
வொடம்புரொம்ப கருத்துபுடும்!
வெளியில சாப்டாதிங்க
வயிறுரொம்ப கெட்டுபுடும்!
வேகமா போவாதிங்க
ஆபத்தா ஆகிபுடும்!
இப்படித்தான் எச்சரிக்க
எத்தனையோ நானுசொல்ல
நச்சரிக்கக் கூடாதுனு
என்னோட வூட்டுகாரு!
எகத்தாளம் பண்ணுறாரு
எங்கபோயி முட்டிக்கிட?

புள்ளங்க புருஷனுந்தான்
பொறப்பட்டுப் போனபின்ன
ஜிலோன்னுத்தான் ஆகிபுடும்
என்னோட வூட்டுலதான்!
எத்தினியோ வேலைங்கதான்
எனக்கோசம் காத்துருக்கும்!

முரண்டுசெஞ்சி மூத்தமவன்
கடாசிட்ட புஸ்தகம்லாம்
கச்சிதமா அடுக்கவேணும்!
சின்னமவ வீசிபோட்ட
பென்சிலத்தான் தேடவேணும்!
கண்டகண்ட எடத்துலெல்லாம்
கலஞ்சிபோயி கெடக்குமந்த
மைபேனா இஸ்கேலு
அழிரப்பர் ஷார்ப்பனரு
நோட்டுபுக்கு எல்லாமும்
குனிஞ்சிநானு பொறுக்கவேணும்!
சாக்சுஷ¨ ஜோடிகளச்
சேத்துசேத்து வெக்கவேணும்!

கழட்டிபோட்ட யூனிபாரம்
கருத்தோடக் கசக்கவேணும்!
தண்ணியில சோப்புபோட்டு
முக்கிஅத வெக்கவேணும்!
காலருல தங்கிப்போன
அழுக்குகர தேய்க்கவேணும்!
மண்ணெண்ண ஊத்தியூத்தி
மைக்கரயப் போக்கவேணும்!

புள்ளங்க இப்படின்னா
புருஷனுந்தான் இன்னுமோசம்!
பாத்ரூமு மூலையில
கைலிங்க நனஞ்சிருக்கும்!
சோப்புபெட்டிக் குள்ளேதான்
ரெண்டுஇஞ்சித் தண்ணிநிக்கும்!
சோபாவின் முதுகுமேல
சட்டயோட தோரணந்தான்!
பேண்ட்டுதுண்டு பனியனுலாம்
கட்லுமேல குவிஞ்சிருக்கும்!
பாக்கெட்ல கையவுட்டா
கத்தையாகத் தாளிருக்கும்!
குப்பதான்னு தூக்கிபோட்டா
குய்யமுய்யோ கூச்சலுதான்!

துணியெல்லாம் தொவச்சிபோட்டு
கொடிக்கயித்ல விரிச்சிபோட்டு
பறக்காம கிளிப்புபோட்டு
வெள்ளத்துணி வெயில்லபோட்டு
சாயத்துணி நெழல்லபோட்டு
மழைவந்தா எடுத்துபோட்டு
காஞ்சதுமே மடிச்சிபோட்டு
ஷெல்புலதான் வெக்கபோனா
காலைஅவர் எடுத்ததாலத்
துணிபூரா கலஞ்சிருக்கும்!
களேபரத்து நெலமபாத்து
மனசுகுள்ள தீப்புடிக்கும்!

எரிச்சலெல்லாம் மூட்டகட்டி
எல்லாமும் அடுக்கிவெச்சி
குப்பகூளம் பெருக்கிவெச்சி
குவிஞ்சபேப்பர் மடிச்சிவெச்சி
எச்சிதட்டு கழுவிவெச்சி
எலிபிடிக்க மருந்துவெச்சி
மச்சுமேல வெச்சசாமான்
மங்காம வெளக்கிவச்சி
ரேஷனரிசி கோதுமய
வண்டுபோவக் காயவெச்சி
இட்டிலிக்கு மாவரச்சி
தோசபொடி இடிச்சிவச்சி
அழுக்கடஞ்ச டப்பாவ
சோப்புபோட்டுக் கழுவிவெச்சி
அலங்காரப் படத்தயெல்லாம்
துணியால தொடச்சிவெச்சி
ஒட்டடய அடிச்சிவச்சி
மூலமுடுக்கு சுத்தஞ்செஞ்சி
ஓஞ்சிகொஞ்சம் ஒக்காந்தா
அலறிவரும் பூதம்போல
அழைப்புமணி ஒலிகேக்கும்!

எழுந்துபோயி தொறக்கநானு
ஒருசெகண்டு லேட்டுபண்ணா
கதவொடஞ்சி போறாப்ல
தடதடன்னு தட்டிடுவான்
சிடுசிடுன்னு கத்திடுவான்
சிங்ககுட்டி எம்மவன்தான்!
காலகைய கழுவாம
காலுசட்ட மாத்தாம
தின்றதுக்குக் குடுமான்னு
சிணுங்கிடுவா சின்னமவ!

கடையிலநான் வாங்கிவச்ச
முறுக்குதட்டை எடுத்துதந்தா
எப்பவுமே இதுதானா?
பஜ்ஜிபோன்டா போட்டுத்தா
சூடாவட சுட்டுதான்னு
அடம்பிடிப்பான் ஆசமவன்!

அதுவேணும் இதுவேணும்
அப்பாட்ட சொல்லுமாநீ!
அடுத்தவாரம் டூருபோவ
ஐநூறு வாங்கித்தா!
புராகிரசு ரிப்போட்ல
கையெழுத்து போட்டுத்தா!
இப்படித்தான் எத்தினியோ
கண்டிஷனப் போடுவாங்க!

எல்லாத்தயும் கேட்டப்றம்
வீட்டுபாடம் செய்யவெச்சி
விட்டதெலாம் வரஞ்சிதந்து
கிழிஞ்சஅட்ட மாத்திதந்து
லேபிளயும் ஒட்டிதந்து
பிஞ்சிபோன ஸ்கூலுபைய
ஊசியால தச்சிதந்து
ராத்திரில சோத்தயுமே
ரவரவயா ஊட்டிவுட்டு
கொழந்தகள தூங்கவெச்சி
அசந்துபோயி எந்திரிச்சா
அப்புறமும் வேலவரும்!

இங்கஎன்ன கவனிக்க
ஒனக்குநேரம் ஏதுனுதான்
எப்பவுமே சொல்லிகிட்டு
எடக்காத்தான் பேசிகிட்டு
டீவியவே பாத்துகிட்டு
கெடப்பாரு எம்புருஷன்!
சப்பாத்தி சுட்டுவச்சி
சாப்புடநான் கூப்டாக்கா
வெகுநேரம் கழிச்சிவந்து
காஞ்சிபோன இத்தநீதான்
கழுதைக்குப் போட்டிடும்பார்!
வந்தவுடன் சுட்டுத்தர
பொறுமத்தான் வேணுமுன்னு
பொருமிகிட்டு இருப்பாரு!

காலைல இருந்துநீயும்
ஊட்டுகுள்ள என்னாத்த
வெட்டித்தான் முறிச்சேனு
வெறுப்பேத்தி உடுவாரு!

அனுசரன பத்தாது
அறிவுனக்குக் கிடையாது
அடிமுட்டாள் நீயின்னு
அடுத்தவங்க பாக்கறப்ப
அதட்டலாத்தான் கத்துவாரு!
அடிக்கக்கை ஓங்குவாரு!
ஆபீசு போறவர்க்கு
ஆயிரந்தான் டென்ஷனுன்னு
அசதியாதான் வந்தவர்க்கு
ஆத்திரமேன் மூட்டனுன்னு
அவரோட ஏச்சுகள
அமைதியாநான் உட்டுடுவேன்!

அத்தனைக்கும் அப்புறமா
மிச்சமீதி சாப்டுட்டு
மீதிவேல அத்தனயும்
மறுநாளு பாக்கலான்னு
படுக்கநானு போவயிலே
ரேடியோல இருந்தொருத்தர்
வகதொகயா பேசுறத
காதாலக் கேட்டேங்க!

மங்கயராப் பொறந்திடவே
மாதவந்தான் செஞ்சிருக்க
வேணும்னு சொன்னாராம்
ஆம்பளக் கவியொருத்தர்!
அதக்கேட்டு நானுந்தான்
அசந்துட்டேன் ஒருநிமிஷம்
அறியாம சொன்னாரோ?
அறிஞ்சேதான் சொன்னாரோ?
அனுதாபப் பட்டுத்தான்
அருமகளப் புகழ்ந்தாரோ?
அனுபவந்தான் உள்ளவங்க
ஆருகிட்ட கேக்றதுன்னு
ஆராய்ச்சி பண்ணிகிட்டே

அசதியிலே தூங்கிபுட்டேன்!
(ஆசிரியரின் பெண்களின் கதை - கவிதை நூலிலிருந்து... ப.1 (விழிச்சுடர்ப் பதிப்பகம், காரைக்கால், 2013)