Monday 16 September 2019

நீர்ப் பத்து - துளிப்பா


நீர்ப் பத்து                       
அணையில் தேக்கம்
இமை மதகில் ஏக்கம்
உழவன்!

குழாயில் உவர்நீர்
தொடர்வண்டி நிலையம்
பெருகும் நீர் விற்பனை!

சாலை இணைப்பு
நதிகள் அடைப்பு
மாநிலவாதம்’!

நீரில் விழுந்தாலும்
அணையவில்லை விளக்குகள்
 நிழல்!             

அயலக நிறுவனங்கள்
ஏரிகளைத் தூர்க்கின்றன
வேட்டிக் கறை(ரை)கள்!                 
               
குளியல் சுகம்
இழந்தன எருமைகள்
தூர்ந்த குளம்!

ஏரிகள் தூர்ப்பு
மழைநீர்ச் சேகரிப்பு
நரித்தந்திரம்!

புட்டிகளில்
அடங்கும் ஆறுகள்
தனியுடைமை!

வண்ணமானது
கருப்பு நிழற்படம்
வெள்ளக்காடு!
               
தண்ணீர் ஊர்தி
தவங்கிடக்கிறது
வானவில்!

நூல் : கவிஞர் ஔவை இரா. நிர்மலா , நற்றமிழ்த் துளிப்பா நானூறு
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2017, 47-48.

No comments:

Post a Comment