Sunday 5 February 2017

பாரதியாரின் இறைக் கோட்பாடு


பாரதியார் அனைத்து மதங்களையும் சார்ந்த கடவுளர் மீது பாடல்கள் இயற்றித் தமது சமரச உணர்வை வெளிப்படுத்தியதுடன் அனைவரும் ஒருமித்த சமரச எண்ணம் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளமையை மையமிட்டு அமைகிறது இக்கட்டுரை.
பல்சமய வழிபாடு
      பாரதியார் கடவுளர் பலரையும் வணங்கி வழிபட்டுப் பாக்கள் வடித்திருக்கிறார். விநாயகர்சரஸ்வதிதிருமகள்காளிபராசக்திமாரியம்மாஉமைமுருகன்கிருஷ்ணன்சூரியன்சந்திரன்தீ,   புத்தர்அல்லா (அல்லா), ஏசு (யேசு கிறிஸ்து) என்று சைவம், வைணவம், பௌத்தம், கிறித்தவம், இசுலாம் எனப் பல சமயங்களைச் சார்ந்த கடவுளர் மீது பாடல்களைப் பாடித் துதிக்கிறார் பாரதியார்.
ò       விநாயகர் - விநாயகர் நான்மணி மாலை.
ò       சரஸ்வதி - ஸரஸ்வதி ஸ்தோத்திரம். ஸரஸ்வதி தேவியின் புகழ், மூன்று காதல் : ஸரஸ்வதி காதல்.
ò       திருமகள் - லஷ்மி தேவி சரண் புகுதல், லஷ்மி பிரார்த்தனை, ஸ்ரீதேவி ஸ்துதி, நவராத்திரிப் பாட்டு, மூன்று காதல் : லஷ்மி காதல்.
ò       காளி - மூன்று காதல் : காளி காதல், காளி ஸ்தோத்திரம், காளிப் பாட்டு, ஹே காளீ, மகா காளியின் புகழ், யோக சித்தி வரங் கேட்டல், காளிக்கு விண்ணப்பம்.
ò       பராசக்தி - காணி நிலம், மஹாசக்தி வெண்பா, ஓம் சக்தி, கேட்பன, பராசக்தி, போற்றி அகவல், சக்திக் கூத்து, சக்தி, வைய முழுதும், சக்தி விளக்கம், சக்திக்கு ஆத்ம ஸமர்ப்பணம், சக்தி திருப்புகழ், மஹாசக்தி பஞ்சகம், மஹாசக்தி வாழ்த்து, சிவசக்தி புகழ், ஊழிக் கூத்து, மஹா சக்தி, மஹாசக்திக்கு விண்ணப்பம்.
ò       மாரியம்மா - முத்துமாரி, தேச முத்துமாரி.
ò       உமை - கோமதி மஹிமை.
ò       முருகன் - முருகன் பாட்டு, முருகக் கடவுள் மீது கிளித் தூது, வேலன் பாட்டு).
ò       கிருஷ்ணன் - ஆர்ய தரிசனம் : கிருஷ்ணார்ஜுன தரிசனம், கண்ணன் பிறப்பு, கண்ணன் வரவு, கண்ணம்மா : அங்க வர்ணனை, கண்ணம்மா 1,2,3, கோவிந்தன் பாட்டு, நந்தலாலா.
ò       சூரியன் ஸ+ர்ய தர்சனம், ஞாயிறு +ர்ய ஸ்துதி.
ò       சந்திரன் -  வெண்ணிலாவே, ஸோமதேவன் புகழ்.
ò       தீ - அக்நி தோமம், அக்னி பகவான் - யாகப் பாட்டு).
ò       புத்தர் - ஆர்ய தரிசனம் : புத்த தரிசனம்.
ò       அல்லா - அல்லா
ò       ஏசு - யேசு கிறிஸ்து )
அனைத்தும் கடவுள்
இறைவன் அனைத்துப் பொருள்களிலும் இருக்கிறான் என்ற சயமவாதிகளின் கொள்கையை,
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவு ளென்றார்
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்
(பாரதி அறுபத்தாறு 217)
என்று எடுத்துக்கூறும் பாரதியார் தாமும் அக்கருத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.
சொல்லடா ஹரியென்ற கடவு ளெங்கே
சொல்லென்று ஹிரணியன்தா னுறுமிக் கேட்க
நல்லதொரு மகன்சொல்வான் தூணி லுள்ளான்
நாரா யணன்துரும்பி லுள்ளான் என்றான்
என்று இரணியன் - பிரகலாதன் புராணக் கதையை எடுத்துரைக்கும் பாரதியார் தொடர்ந்து,
வல்லபெருங் கடவுளிலா வணுவொன் றில்லை
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை
அல்லலில்லை அல்லலில்லை அல்ல லில்லை
அனைத்துமே தெய்வமென்றா லல்ல லுண்டோ?
(பாரதி அறுபத்தாறு 220)
என்று உலகப் பொருள்கள் அனைத்தையும் தெய்வமென்று ஏற்றுக்கொண்டுவிட்டால் மக்களுக்கு மதத்தின் பெயரால் துன்பங்கள் ஏற்படாது என்பதை வகுத்துரைக்கிறார்.
ஜடப்பொருட்களும் தெய்வம்
      ஐம்பூதங்களையும் உயிரல்லாத பிற பொருட்களையும் இறைவனின் திருவடிவாகக் காண்கிறார் பாரதியார்.
வெயிலளிக்கு மிரவி மதி விண்மீன் மேகம்
மேலுமிங்கு பலபலவாந் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்க ளனைத்துந் தெய்வம்;
                              (பாரதி அறுபத்தாறு 221)
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டந் தெய்வம்
மீளத்தா னிதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்
விண்மட்டுங் கடவுளன்று மண்ணு மஃதே
சுத்தஅறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்தமண்ணும் சிவமென்றே யுரைக்கும் வேதம்
(பாரதி அறுபத்தாறு 220)
என்னும் பகுதிகளில் சடத்துவப் பொருள்களிலும் இறைவனின் இருப்பை எடுத்துரைக்கிறார் பாரதியார். மேலும்,
காடு மலை அருவி ஆறு
கடல் நிலம் நீர் காற்று
தீ வான்
ஞாயிறு திங்கள் வானத்துச் சுடர்கள் எல்லாம்
தெய்வங்கள் (காட்சி 3 : 424)
என்று வசன கவிதையிலும் ஐம்பூதங்கள் தெய்வமாவதைப் புலப்படுத்துகிறார்.
அனைத்தையுந் தேவர்க் காக்கி அறத்தொழில் செய்யு மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்
(ஸ{ர்ய ஸ்தோமம் - ஞானபாநு 110)
என்னும் பகுதியில் நெருப்பைத் தெய்வமாகச் சுட்டுகிறார் பாரதியார்.
அற்பமும் இறையே
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுயிர் வகைமட்டு மின்றி யிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாந் தெய்வங் கண்டீர்
(பாரதி அறுபத்தாறு 220)
என்று அனைத்து உயிர்களையும் உயிரல்லாத பொருட்களையும் தெய்வமாக உரைக்கிறார் பாரதியார். மேலும், உலகத்தில் காணப்படுகின்ற அற்பமான பொருட்களையும் கடவுள் என்றே கூறுகிறார் பாரதியார்.
கேளப்பா சீடனே கழுதை யொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கர சங்கரவென்றே பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
(பாரதி அறுபத்தாறு 220)
என்னும் பகுதியில் மக்களால் துச்சமாகக் கருதப்படும் கழுதை, பன்றி முதலியவற்றையும் மக்களுக்குத் தீமையை உண்டாக்கும் தேளையும் அருவருப்பை ஏற்படுத்தும் மலம். குப்பை போன்றவற்றையும்கூட கடவுளின் ரூபமாகக் கூறி அவற்றையும் வணங்கவேண்டும் என்று தத்துவ நிலையில் விளக்கிக் கூறுகிறார்.
அனைவரும் இறையே
      உலகிலுள்ள அனைத்தும் தெய்வமென்றால் தீண்டாமை காரணமாக இழிவுபடுத்தப்படும் புலையர்களும் தெய்வமாகவே மதிக்கப்பட வேண்டும் என்பதை,
வித்தகனாங் குருசிவமென் றுரைத்தார் மேலோர்
வித்தையிலாப் புலையனுமஃ தென்னும் வேதம்
உயிர்களெலாந் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை
(பாரதி அறுபத்தாறு 220)
என்று முழங்கித் தீண்டாமையைக் களைவதற்குரிய வழிவகுக்கிறார் பாரதியார்.
பெண் தெய்வம்
      பெண்ணைத் தெய்வமாகக் கருதுவது இந்திய மரபு. அதனையே,
பித்தரே அனைத்துயிருங் கடவு ளென்று
பேசுவது மெய்யானாற் பெண்டி ரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்து வீரே
(பாரதி அறுபத்தாறு 220)
என்று கூறும் பாரதியார் ஒருபடி மேலாக பெண்ணாகிய மனைவியைத் தெய்வமாகக் கருதவேண்டும் என்பதை,
மண்ணுக்குள் எவ்வுயிருந் தெய்வ மென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட் டீரே
(பாரதி அறுபத்தாறு 227)
என்று கூறுகிறார்.
அழகே தெய்வம்
      தெய்வத்தைப் பலவாறு விளக்க நினைத்த பாரதியார் அழகினைத் தெய்வமாக எடுத்துரைக்கிறார்.
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ அடடா
அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே யறிந்தேன்
(அழகுத் தெய்வம் 103)
என்னும் பாடலில் அழகினை இளவயது மங்கையாக உருவப்படுத்தும் பாரதியார் அதனையே தெய்வம் என்றும் விளக்குகிறார்.
அறிவே தெய்வம்
      வெவ்வேறு தெய்வங்களை வணங்கும் மக்களை அறிவிலிகள் என்று கூறும் பாரதியார் அறிவையே தெய்வம் என்று அறிவுறுத்துகிறார்.
ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? – பல்
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? (அறிவே தெய்வம் 101-102)
என்னும் பகுதி சிறுதெய்வ வழிபாட்டை இடித்துரைத்து அறிவைத் தெய்வம் என்று காட்டி அத்தகைய அறிவை அனைவரும் பெறவேண்டும் என்று தூண்டுகிறது. இப் பாடலில் உருவ வழிபாட்டைக் கடிந்துரைக்கும் சித்தர்களின் மனப்பாங்கு வெளிப்படக் காணலாம்.
புதுமைத் தெய்வங்கள்
      மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம்
(வசன கவிதை, காட்சி 3 : 424)
      உணர்வு தெய்வம் (வசன கவிதை, காட்சி 2 : 424)
என்னும் பகுதிகள் மனம், சித்தம், உயிர் ஆகியவற்றையும் தெய்வமாகக் காட்டுகின்றன.
மேலும் பாரதியார் தமது எழுத்தையும் எழுது கோலையும் தெய்வத்தின் உருவாகவே காணுகிறார்.
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்துந் தெய்வம்
(பாரதி அறுபத்தாறு 221)
என்று கூறுவதுடன்,
நீயே யுயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்
(கவிதா தேவி அருள் வேண்டல் 393)
என்று கவிதையையும் தெய்வமாகக் கருதி வேண்டுவதையும் காணலாம்.
தானே தெய்வம்
    ஒவ்வொருவரும் தம்மையும் தெய்வமாகவே கருதலாம் என்பதை,
இவ்வுலகம் ஒன்று
ஆண் பெண் மனிதர் தேவர்
பாம்பு பறவை காற்று கடல்
உயிர் இறப்பு இவை யனைத்தும் ஒன்றே
ஞாயிறு வீட்டுச் சுவர் ஈ மலை யருவி
குழல் கோமேதகம் இவ் வனைத்தும் ஒன்றே
இன்பம் துன்பம் பாட்டு
வண்ணான் குருவி
மின்னல் பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
மூடன் புலவன்
இரும்பு வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம் கடல்மீன் புயற்காற்று மல்லிகை மலர்
இவை ஒருபொருளின் பலதோற்றம்
உள்ள தெல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் 'தான்"
தானே தெய்வம் (காட்சி 4 : 424)
என்னும் வசனகவிதை மூலமாகப் புலப்படுத்துகிறார்.
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே
தத்வமஸி தத்வமஸி நீயே யஃதாம்
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
ஸதாகாலம் சிவோ ஹமென்று ஸாதிப் பாயே
(பாரதி அறுபத்தாறு 223)
என்னும் பகுதியும் ஒவ்வொருவரும் தம்மையே தெய்வமாகக் கருதவேண்டும் என்பதைச் சுட்டுகிறது.
மத ஒருமை
      அனைத்து மதங்களும் ஒன்றே என்பதை,
ஒருமொழி ஓம்நமச்சி வாய வென்பர்
ஹரிஹரியென் றிடினு மஃதே ராமராம
சிவசிவவென் றிட்டாலும் அஃதே யாகும்
தெரிவுறவே ஓம்சக்தி யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்
ஸாரமுள்ள பொருளினைநான் சொல்லி விட்டேன்
சஞ்சலங்க ளினிவேண்டா சரதந் தெய்வம்
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போது மருளைமனத் திசைத்துக் கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்
பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி
புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்று மார்க்கம்
ஸநாதனமாம் ஹிந்துமதம் இஸ்லாம் யூதம்
நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்
நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள்பல வுளவா மன்றே
யாவினுக்கு முட்புதைந்த கருந்திங் கொன்றே
பூமியிலே வழங்கிவரு மதத்துக் கெல்லாம்
பொருளினைநா மிங்கெடுத்துப் புகலக் கேளாய்
(பாரதி அறுபத்தாறு 222-23)
என்னும் பகுதியில் பாரதியார் அறிவுறுத்துகிறார்.
      மேற்கூறியவற்றால் சமயப் பொதுமை காணும் பாரதியார் உலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் தெய்வமாகவே போற்றும் இறைக்கோட்பாட்டை வற்புறுத்துவதைக் காணமுடிகிறது. இத் தன்மையால் மக்களிடையே உள்ள வேற்றுமைகளை எல்லாம் அகற்றி அனைவரையும் சகோதரத்துவம் மிக்கவர்களாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கையை பாரதியார் வெளிப்படுத்துவதையும் அறியமுடிகிறது.
பயன்நூல் :
ச. மெய்யப்பன் (பதி.) பாரதியார் கவிதைகள், 10ஆம் பதி. 2000; சிதம்பரம் : தென்றல் நிலையம், 2010.


காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில், காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016, பக்.183-192.   

No comments:

Post a Comment