Sunday 5 February 2017

கால ஓவியன்




காலமே!
நீ ஒப்பற்ற ஓவியன்!

குறும்புக் குழந்தையைக் குமரியாக்கினாய் - அவள்
கூந்தலில் அலைகளை நீயே எழுப்பினாய்
காண்போர் இமைக்கா விழிகளை வரைந்தாய்
கிளர்ச்சி யூட்டும் தோள்களை அமைத்தாய்
நடையில் நளின நாட்டியம் சேர்த்தாய்
இடையில் இன்மை அழகினைப் புகுத்தினாய்
உதட்டில் கனிச்சுவை இனிமை குழைத்தாய்
ஆமாம். . .
அந்த ஓவியத்தை
நன்றாகத்தானே வரைந்து கொண்டிருந்தாய்!
காலமே!
நீ ஒப்பற்ற ஓவியன்!
ஆனாலும் குணமாறாட்டமுள்ளவன் நீ!
நீ பார்த்துப்பார்த்து வரைந்த ஓவியத்தை
ஏன் இப்படிப் பாழ்படுத்தி விட்டாய்?
கூந்தல் கருமையில் வெண்மையை விரவினாய்
அடர்த்தியைக் குறைத்துக் குட்டை ஆக்கினாய்
குதிரை வாலினை எலிவா லாக்கினாய்
கண்களின் வெண்மையில் பழுப்பினைக் கலந்தாய்
கண்களைச் சுற்றிக் கருவளையம் தீட்டினாய்
வெண்பல் வரிசையில் வெற்றிடம் வரைந்தாய்
தோள்க ளிரண்டையும் சரிந்திடச் செய்தாய்
ஓடி ஆடிய கால்களை நீதான்
முடக்கி மூலையில் கிடந்திடச் செய்தாய்
மெத்தென இருந்த மெல்லிய பாதத்தில்
வெடிப்புகள் கிறுக்கித் தடித்திடச் செய்தாய்
இருபது நிலவுகள் ஒளிர்ந்திட்ட நகங்களில்
சொத்தையும் புத்தையும் சேர்த்துக் கலந்தாய்
வழுவழு தோலைச் சுருக்கியே திரைத்தாய்
உயிர்தந்த நீயே உயிரினைப் பிரித்தாய்
அத்துடன் உன்பணி முற்றுப் பெற்றதாய்ச்
சித்திரம் சிதைத்துச் சிதையினில் எறிந்தாய்
காலமே!
நீ ஒப்பற்ற ஓவியன்தான்
முற்றிலும் உன்னைக் குணப்படுத் திடுகையில்
காலமே!

நீ ஒப்பற்ற ஓவியன்தான்!

(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-)

No comments:

Post a Comment