Thursday 25 July 2019

பாவேந்தரின் குடும்ப விளக்கில் சமூக மரபு மாற்றம்


பாவேந்தரின் குடும்ப விளக்கில்
சமூக மரபு மாற்றம்
            



bharathidasan க்கான பட முடிவு




பழமையான மூடப் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் ஆணிவேர்விட்டுக் கால்பதித்துச் சமுதாயம் புரையோடிக்கிடந்த காலகட்டத்தில் அவற்றையெல்லாம் களைந்து புதிய சிந்தனை களை மக்கள் மனங்களில் பதியவைக்கப் பாடுபட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பகுத்தறிவுச் சிந்தனையாளராகிய பாவேந்தர் பாரதிதாசனார் ஆவார். அவர் காலங்காலமாகப் பழக்கப்பட்டுவிட்ட தேவையற்ற மரபுகளை உடைத்துப் புதிய சமுதாயம் காண்பதற்குரிய கருத்துகளைப் பரப்புவதற்குத் தம் படைப்பு களைத் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டவர். அவ்வகையில் சமுதாய முன்னேற்றத்திற்குரிய குறிக்கோள் இலக்கியமாகக் குடும்பவிளக்கைப் படைத்து, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். அந்நூலின் வாயிலாக அவர் வெளிப்படுத்திய புதிய சிந்தனைகளைக் கோடிட்டிக் காட்டுவதாக இக் கட்டுரை அமைகிறது.
திருமண முறை
            தமிழர்கள் ஐயர் எனப்படும் அந்தணர்கள் செய்கின்ற பல்வேறு சடங்குகளோடு கூடிய மணமுறையைக் கடந்த பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் பின்பற்றி வருகின்றனர். இத்தகைய முறையை மாற்றித் தமிழகத்தில் திருமணங்கள் தமிழ்த் திருமணங்களாக அமைய வேண்டும் என்று வற்புறுத்தியவர் பாரதிதாசனார். தமிழர் திருமணம் எவ்வாறு அமையவேண்டும் என்னும் மாதிரியைத் தம் குடும்பவிளக்கில் வருணிக்கிறார்.
பெரியவர் ஒருவர், ‘பெண்ணே நகைமுத்து!
வேடப் பனைநீ விரும்பிய துண்டோ?
வாழ்வின் துணைஎனச் சூழ்ந்த துண்டோ?’
என்னலும் நகைமுத் தெழுந்து வணங்கி,
‘வேடப்பனை நான் விரும்பிய துண்டு
வாழ்வின் துணைஎன்று சூழ்ந்தேன்’ என்றாள்
வேடப் பாநீ மின்நகை முத்தை
மணக்கவோ நினைத்தாய்? வாழ்க்கைத் துணைஎன
அணுக எண்ணமோ அறிவித் திடுவாய்
என்னலும் வேடன் எழுந்து வணங்கி
மின்நகை முத்தை விரும்பிய துண்டு
வாழ்வின் துணையாய்ச் சூழ்ந்தேன் என்றான்
என்னும் பகுதியில் மனமக்கள் இருவரின் சம்மதமும் பொதுமக்கள், உறவினர் மத்தியில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறார். மேலும் கருத்தைச் சொல்லும் உரிமை முன்னதாக மணப்பெண்ணுக்குத் தரப்படுவதும் எண்ணத்தக்கது.
மணமகள் நகைமுத்து வாழ்க வாழ்கவே
மணமகன் வேடப்பன் வாழ்க வாழ்கவே
என்றார் அனைவரும் எழில்மலர் வீசியே
தன்மலர் மாலை பொன்மகட் கிடவும்
பொன்மகள் மாலையை அன்னவற் கிடவும்
ஆன திருமணம் அடைந்த இருவரும்
வானம் சிலிர்க்கும் வண்டமி ழிசைக்கிடை
மன்றினர் யார்க்கும் அன்னைதந் தையர்க்கும்
நன்றி கூறி வணக்கம் நடத்தி
நிற்றலும் நீவிர் நீடு வாழிய
இற்றைநாள் போல எற்றைக்கும் மகிழ்க
மேலும்உம் வாழ்வே ஆலெனச் செழித்து
அறுகுபோல் வேர்பெற குறைவில் லாத
மக்கட் பேறு மல்குக என்று
மிக்கு யர்ந்தார் மேலும் வாழ்த்தினரே
அமைந்தார் எவர்க்கும் தமிழின் சீர்போல்
கமழும்நீர் தெளித்துக் கமழ்தார் சூட்டி
வெற்றிலை பாக்கு விரும்பி அளித்தார் (127-128)
எனவரும் பகுதி தமிழர் திருமணத்தின் மாதிரியை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து யாகம் வளர்த்துப் பெருந்தொகையை விரயமாக்கும் மணமுறையை மாற்றிப் பெரியோர்களால் மணமக்கள் வாழ்த்தப்பெறும் நிறைவான திருமண முறையை அறிமுகப்படுத்துகிறார் பாரதிதாசனார். மேலும் இடைத்தரகராய்ச் செயல்படும் அந்தணர்களும் அவர்கள் இயற்றும் சடங்குகளும் தேவையற்றவை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
            காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபடுவது திருமணம் என்பதும் அன்னாரின் வெளிப்படையான வாழ்க்கை ஒப்பந்தம் திருமணத்தின் அடுத்த கட்டம் என்பதும் அவ் வொப்பந்தத்தைத் துணைபுரிந்து பெரியோர் நிறைவேற்றுவதும் காதலரை வாழ்த்து வதும் திருமண வாழ்த்து என்பதும் என் எண்ணம், பழந்தமிழர் வழக்கமும் இதை மறுக்கவில்லை.
            இந்நாள் அதையொட்டியே மணமுறை அமைய வேண்டும். பயனற்ற சடங்குகள் விலக்கப்படுவதால் பழுதொன்றுமில்லை. விலக்கப் படாவிடில் பகுத்தறிவு புறக்கணிக்கப்பட்டதாகும். திராவிடர் பண்பாடு, கலை, ஒழுக்கம் உருவற்றுப் போகும். எனவே, பண்டைய தமிழர் திருமண முறையை இந்நாளைக்கு ஏற்றவகையில் திருத்தியும் குறைத்தும் சேர்த்தும் திருமணம் என்னும் இச் சிறு நூலை எழுதியிருக்கிறேன். (கவிஞர் முன்னுரை 1.12.48)
என்று நூலின் முன்னுரையாய் அமைந்த பாரதிதாசனாரின் கருத்து அவர் கொண்டுவர விழைந்த மரபு மாற்றத்தைத் தெளிவுபடுத்துகிறது.
பதிவுத் திருமணம்
            அரசாங்கத்தில் திருமணங்களைப் பதிகின்ற வழக்கத்தைக் கொண்டுவர வேண்டுமென்று தமிழ் மக்களுக்கு அறிவுறுத்துகிறார் பாரதிதாசனார்:
அடிமை மணமென்றும்
சொல்லும் அனைத்தும்
கடிந்து பதிவுமணம்
காணல் கடனாகும் (66).
இத்தகைய செய்திகள் தமிழ்ச் சமுதாயத்தில் இன்று பலரைப் பின்பற்ற வைத்திருத்தல் கண்கூடு.
தனிக்குடித்தனம்
            திருமணத்திற்குப் பின்னர் தன் மகன் மருமகளோடு தம்முடனே வாழவேண்டும் என்று மகனின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர். பல சிக்கல்கள் இத்தகைய வாழ்க்கை முறையால்தான் நேருகின்றன என்பதை உணர்ந்த பாரதிதாசனார் திருமணம் முடிந்து மணமக்கள் தனியாக வாழ வேண்டும் என்றும் குழந்தைகளைப் பெற்றெடுத்து பல ஆண்டுகள் கழியும் தருவாயில் பெற்றோர்கள் முதுமை எய்திநிற்கும் நிலையில் அவர்களோடு ஒன்றாக வாழ்ந்து அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனால் உளவியல் ரீதியான சிக்கல்கள் தவிர்க்கப்படக் கூடும் என்றும் கருதுகிறார். அதனை,
எங்கள் மணமுடித்துத்
தட்டா மல்ஈக
தனியில்லம்க் என்றனளே (119)
என்று தங்கத்தின் மகனை மணக்கும் நகைமுத்துவின் கூற்றாக வெளிப்படுத்துகிறார். இத்தகைய சிந்தனை தமிழக மக்களைத் திகைக்க வைக்கும் சிந்தனை என்றாலும் அதனைப் பின்பற்றுவோர் நிச்சயமாக இன்பமே காண்பர் என்பதில் ஐயமில்லை.
மணமுறிவும் மறுமணமும்
            திருமணத்தால் இணைந்துவிட்ட ஆணும் பெண்ணும் அதற்குப் பின்னரான வாழ்க்கையில் மனம் ஒத்துப்போகாத போதும் அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தே தீரவேண்டும் என்ற சமுதாய நெருக்கடி காணப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் இத்தகைய நெருக்கடி அதிக வலுவானதாகச் சுமத்தப்படுகிறது.  கணவனும் மனைவியும் ஒன்றாய் வாழவே இயலாது என்ற நிலைமை ஏற்பட்டுவிடும்போது சட்டபூர்வமாக மணவிலக்கு பெற இயலுகிறது. மணவிலக்குப் பெற்ற பிறகும் பெண்ணின் வாழ்க்கை எளிதானதாக அமைந்துவிடுவதில்லை. பெரும்பாலும் அவள் தனது வாழ்நாள் முழுதும் தனித்து வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய சூழலை மாற்றநினைக்கும் பாரதிதாசன்,
உடையார்தம் வாழ்வில்
உளம்வேறு பட்டால்
மடவார் பிறனை
மணக்க விடவேண்டும் (66)
என்று பெண்ணுக்கு மறுமணத்தை வலியுறுத்துகிறார்.
ஆடவனும் வேறோர்
அணங்கை மணக்கலாம் (காதல் வாழ்க்கை 67)
என்று ஆடவரும் இத்தகைய மறுமணத்தை ஏற்கச் செய்கிறார் பாரதிதாசன். ஆடவன் தனக்குப் பிடிக்காத மனைவியை விலக்கிவிட்டு மறுமணம் செய்துகொள்ளும் வழிமுறையாக இதனைக் கருதாமல் பெண்களுக்குரிய விடுதலையாகவே இதை நோக்கவேண்டியது சீர்மைத்தாகும்.
கருத்தடை
            இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில்கூட மக்கள் அளவின்றிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டார்கள். அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் அவர்களை வளர்க்க இயலாமல் ஏழ்மையில் துன்புற்றதுடன் தாய்மார்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணமுடியாமல் நோய்வாய்ப்படவும் இளமையிலேயே இறக்கவும் நேரிட்டமையைக் கடந்தகாலப் பதிவுகள் தெளிவுறுத்துகின்றன. அந்நிலையில் கருத்தடை முறையை அரசு முன்வைத்தபோதும் பலர் அதனை ஏற்கத் தயங்கினர். கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விழைந்த பாரதிதாசனார் தம் குடும்பவிளக்கில்,
ஈண்டுக் குழந்தைகள்தாம்
எண்மிகுத்துப் போகாமல்
வேண்டும் அளவே
விளைத்து மேல் வேண்டாக்கால்

சேர்க்கை ஒழித்துக்
கருத்தடையேனும் செய்க (67)
என்று அறிவுறுத்துகிறார்.
கற்பித்தல் அன்னையின் கடன்
            ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே ஃ சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனேக் என்று சங்கப் புலவர் பொன்முடியார் பாடுகிறார். ‘தாயொடு அறுசுவைபோம்; தந்தையொடு கல்விபோம்க் என்பர். இவ்வாறு குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு உணவு தருவதும் தந்தையின் பங்கு நற்கல்வி தருவதும் என்று கருதுகின்ற மரபுவழிப்பட்ட கருதுகோளை மாற்றித் தாயின் மூலமே குழந்தைகள் நல்ல படிப்பையும் படிப்பினையையும் பெற முடியும் என்பதைக் குடும்பவிளக்கின் மூலம் தெளிவுபடுத்துகிறார் பாரதிதாசனார்.
பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்
அவள்வாத் திச்சி; அறைவீடு கழகம்;
தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை அள்ளி
விழுங்கினார் பிள்ளைகள் (தாய்தான் வாத்திச்சி 10)
என்னும் பகுதியின் மூலம் வீட்டில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியராகத் தாயை முன்னிறுத்துகிறார்.
தமிழ்வழிக் கல்வி
            ஆங்கில வழிக்கல்வியால் கவரப்பட்டு அதன்மூலமே சமுதாய மதிப்பும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வழியும் கிட்டும் என்று மூழ்கிக் கிடக்கின்ற மக்கள் கூட்டத்திற்குத் தமிழ்வழிக் கல்வியின் சிறப்பினை அறியுமாறு செய்வதில் முயல்கிறார் பாரதிதாசனார். அதனால்தான் குடும்பவிளக்கில் வாய்க்கும்தோறெல்லாம் தமிழ்வழிக் கல்வியையும் தமிழ் இலக்கியங்கள் கற்பதையும் தம் கதைமாந்தர் வாயிலாக வெளிக்கொணர்கிறார்.
அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை
எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்
இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ?
மெய்ப்படிநம் மறிஞரின் சொற்படி நடந்தால்
மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்
முற்படில் ஆகாத துண்டா? எப்படிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும் என்றாள் (33)
என்று கூறுமிடத்துத் தமிழ்வழிக் கல்வியை வற்புறுத்தி அதன் மூலமாகவே தமிழரின் முன்னேற்றமும் ஏற்படும் என்னும் உண்மையை உணரவைக்கிறார்.
தமிழ்ப்பாடல்
            எங்கும் ‘கர்நாடக சங்கீதம்க் என்ற பெயரில் வடமொழிக் கலப்புடைய பாடல்களும் தெலுங்குக் கீர்த்தனைகளும் தம்முடைய காலகட்டத்தில் பெருவழக்காகப் பாடப்பெற்ற சூழலைக் கண்டு வருந்திய பாரதிதாசன் குடும்பவிளக்கின் தலைவியான தங்கம் யாழ் இசைத்துத் தமிழ்ப்பாடல்களைப் பாடியதாகப் படைக்கின்றார்.
யாழின் உறையினை எடுத்தாள்; இசையில்
‘வாழிய வையம் வாழியக் என்று
பாவலர் தமிழிற் பழச்சுவை சேர்த்தாள்
தீங்கிலாத் தமிழில் தேனிசைக் கலவைபோய்த்
தூங்கிய பிள்ளைகள் தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
அமைதி தழுவிய இளம்பகல்
கமழக் கமழத் தமிழிசை பாடினாள் (8)
என்னும் பகுதியில் பாவலர் தமிழ் என்று தமிழ்ப் பாடல்களையும் தமிழிசை என்று தமிழ்க்குரிய இசையையும் வாசகர்களுக்கு அறிவிக்கிறார்.
. . . செல்வச்
சிட்டுக்கள் சுவடிக் குள்ளே
செந்தமிழ்த் தீனி உண்ண (29)
என்று குழந்தைகள் தொடக்கக் கல்வியில் தமிழ் படித்தலை முன்வைக்கிறார்.
ஆடவரும் சமைத்தல் வேண்டும்
            வீட்டில் பெண்கள் மட்டுமே சமைத்திட வேண்டுமென்றும் அச்செயலை ஆடவர் புரிதல் இழிவானது என்றும் எண்ணும் மனப்பாங்கு இன்றும் பலரிடம் நிலவக் காணலாம். ஆனால் பாரதிதாசனார் சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஆடவரும் சமையலில் பங்கேற்க வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.
சமைப்பதும் வீட்டுவேலை
சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
தமக்கேஆம் என்று கூறல்
சரியில்லை ஆடவர்கள்
நமக்கும் அப் பணிகள் ஏற்கும்
என்றெண்ணும் நன்னாள் காண்போம்
சமைப்பது தாழ்வா இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்

சமைப்பது பெண்க ளுக்குத்
தவிர்க்கொணாக் கடமை என்றும்
சமைத்திடும் தொழிலோ நல்ல
தாய்மார்க்கே தக்க தென்றும்
தமிழ்த்திரு நாடு தன்னில்
இருக்குமோர் சட்டந் தன்னை
இமைப்போதில் நீக்க வேண்டில்
பெண்கல்வி வேண்டும் யாண்டும் (72-73)
என்னும் பகுதியில் சமையலைப் பெண்களின் வேலையாகக் கருதும் எழுதப்படாத சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறுவதுடன் இக்கருத்தை மணவழகரின் தாய் மாவரசனின் மனைவி மலர்க்குழலுக்கு உரைப்பதுபோல் கூறுகின்ற நெஞ்சுரத்தையும் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
சரிநிகர் சமானம்
            சமுதாயத்தில் எல்லாப் பணிகளிலும் ஆணுக்குச் சமமாகப் பெண்களுக்கும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் பாரதிதாசனார்.
வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுத ளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே இன்று (72)
என்று அந்நாளில் பாரதிதாசன் உரைத்த சொற்கள் இன்று நனவாகியிருப்பதைக் காணலாம்.
            இவ்வாறு பாரதிதாசனார் கூறிய கருத்துகள் அவை கூறப்பட்ட காலத்தில் நடைமுறையில் பரவலாக இல்லாமல் மக்களால் ஏற்கப்பட முடியாதனவாகவும் கருதப்பட்ட நிலைமாறி இன்று அவையனைத்தும் நடப்பியலில் உண்மையாகி இருப்பதை அவரது படைப்பின் வெற்றியாகக் கருதலாம்.

பயன்நூல்
பாரதிதாசன், குடும்ப விளக்கு, 3ஆம் பதி. 1992; சென்னை : பூம்புகார் பதிப்பகம், 2008.
*

No comments:

Post a Comment