Friday 13 September 2019

மணிமேகலையில் பெண்


மணிமேகலையில் பெண்

            மாதவி, மணிமேகலை, சித்திராபதி, வயந்தமாலை, சுதமதி, உதயகுமரன் தாயாகிய அரசி, விஞ்சையர் மகள் காயசண்டிகை, தெய்வ நிலையினலான கந்திற்பாவை, மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சம்பாபதி, தருமதத்தனின் காதலி விசாகை என மணிமேகலைக் காப்பியத்தில் பெண் மாந்தர்களே அதிகமாகக் காணப்படு கின்றனர். அம் மாந்தர்களின் மூலமாகவும் பிற மாந்தர்களின் மூலமாகவும் அக்காலத்திருந்த பெண்களின் நிலையைச் சீத்தலைச் சாத்தனார் எவ்வாறு புலப்படுத்துகிறார் என்பதை இக் கட்டுரை ஆய்கிறது.
மகளிருக்குப் பாதுகாப்பற்ற நிலை
            சண்பை என்னும் நகரத்தில் கௌசிகன் என்னும் அந்தணனின் மகளாகிய சுதமதி தனியே செல்லுவதற்கு அஞ்சாதவள். ஒருதனி யஞ்சேன் (3.31) என்று தன் அச்சமின்மையை அவள் எடுத்துரைக்கிறாள். அதனால் சோலையில் பூக்கொய்யத் தனியளாகச் செல்கிறாள். அப்போது இந்திரவிழா காணவந்த மாருதவேகன் என்னும் வித்யாதரன் அவளைத் தூக்கிக்கொண்டு சென்று அவளை வலிந்து நுகர்ந்தபின் சிலநாட்கள் கழித்துப் புகார்நகரில் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறான். அதன் பின்னர்ப் பல்வேறு துன்பங்களை அடைந்து அவள் தனித்து வாழ்ந்துவருவதைக் காப்பியம் காட்டுகிறது.
            மாதவி மணிமேகலையை மலர்கொய்யச் செல்லுமாறு கூறியதைச் சுதமதி செவியுறுகிறாள். தனக்கு நேர்ந்ததுபோல் ஏதேனும் தீங்கு மணிமேகலைக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறாள். மணிமே கலைதான்/ தனித்தலர் கொய்யுந் தகைமைய ளல்லள் (3.42-43) என்று அறிவுறுத்துகிறாள். எனவே அக்காலத்தில் மகளிர் தனியாகச் சென்றால் காமுகர்களால் அவர்களுக்குத் துன்பம்நேரும் நிலை இருந்தமையைச் சீத்தலைச்சாத்தனார் எடுத்துரைக்கிறார்.
இன்றே யல்ல விப்பதி மருங்கிற்
கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து
பத்தினிப் பெண்டிர் பாற்சென் றணுகியும்
நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும்
தீவினை யுருப்ப வுயிரீறு செய்தோர்
பாராள் வேந்தே பண்டும் பலரால் (22.19-24)
என்ற அறவோர் கூற்றால் மேற்கூறிய தன்மை பரவலாக இருந்தமையை அறிகிறோம்.
மாதவர் நோன்பு மடவார் கற்பும்
காவலன் காவ லின்றெனி னின்றால் (23.208-9)
என்று அறவோர் அரசனுக்கு அறிவுறுத்துகின்றனர். மன்னவன் நீதியை நிலைநாட்டித் தீயவர்களைக் களையாவிடில் மடவார் கற்பென்பது கேள்விக்குறியாகும் என்ற நிலைமையை ஆசிரியர் புலப்படுத்துகிறார்.
ஆண் பெண் சமமின்மை
                பெண்ணினும் ஆணே அறிவிற் சிறந்தவன் என்னும் கருத்தாக்கம் உலகில் பரவலாகக் காலங்காலமாக நிலவி வருவதைக் காண்கிறோம். அதனால் ஒரு பெண் தனக்கு அறிவுரை கூறுவதை ஆடவர் ஏற்பதில்லை.
இளமை நாணி முதுமை யெய்தி
உரைமுடிவு காட்டிய வுரவோன் மருகற்
கறிவுஞ் சால்பு மரசியல் வழக்கும்
செறிவளை மகளிர் செப்பலு முண்டோ
அனைய தாயினும் யானொன்று கிளப்பல்
வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி (4.107-112)
என்று சுதமதி உதயகுமரனிடம் கூறுவதிலிருந்து மகளிர் ஆடவருக்கு அறிவுரை கூறுவது தகாது என்னும் சமுதாயக் கருத்தாக்கம் புலனாகிறது.
கணவனுடன் இறத்தலும் கற்பும்
                கணவன் இறந்துவிட்டால் அவனுடன் இறப்பவரே கற்பு உடையவர் என்ற கருத்து அக்கால மக்களிடையே நிலவியது.
காதல னுற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா வுயிரொடு நின்றே
பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து
நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன் (2.38-41)
என்று கோவலன் இறந்ததும் உடன் இறவாத தன்செயலை நாணமற்ற செயலாகத் தன்தோழி வயந்தமாலையிடம் மாதவி கூறுகிறாள்.
            ஆதிரையின் கணவனாகிய சாதுவன் கணிகையர்பால் சென்று தன் கைப்பொருள் அனைத்தையும் இழந்தபின்னர் அறிவுதெளிகிறான். வணிகம் செய்து மீண்டும் பொருள் ஈட்டக் கப்பலில் சென்றபொழுது சூறைக்காற்றால் கப்பல் உடைந்துவிட நாகர்மலையை அடைந்து பிழைக்கிறான். கணவன் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்ட ஆதிரை உடன்கட்டை ஏறுவதற்குரிய ஈமப்படுக்கையை அமைத்துத் தருமாறு ஊராரைக் கேட்கிறாள். ஊராரும் அது சரியானது என்பதுபோல் அவள் உடன்கட்டை ஏறுவதற்கு ஈமப்படுக்கையை ஏற்படுத்தித் தருகின்றனர். தீயானது அவளைச் சுடாததுகண்டு தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் (16.35) என்று வருந்துகிறாள். அசரீரி மூலம் தன் கணவன் உயிருடன் இருப்பதை அறிந்து தனது இல்லத்திற்குத் திரும்புகிறாள்.
புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம்
அரும்பெறன் மரபிற் பத்தினிப் பெண்டிரும்
விரும்பினர் தொழூஉம் வியப்பின ளாயினள் (16.49-51)
என்று ஆதிரையின் சிறப்பினை எடுத்துரைக்கிறாள் காயசண்டிகை. கற்பிற் சிறந்த ஆதிரை கையால் முதற்பிச்சையை அமுதசுரபியில் பெறுமாறு மணிமேகலையிடம் காயசண்டிகை கூறுகிறாள். தன் கணவன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதுமே தானும் இறக்கத் துணிந்தமையால் அவள் பத்தினிப் பெண்டிரும் தொழுகின்ற சிறப்புப் பெற்றாள் என்பதனை ஆசிரியர் புலப்படுத்துகிறார்.
                தவக்கோலம் தரித்த மணிமேகலையை மீண்டும் அவளது குலத்தொழிலாகிய கணிகைத் தொழிலுக்குத் திருப்பப் போவதாக நாடகக் கணிகையரிடம் சித்திராபதி உரைக்கும்போது,
காதலன் வீயக் கடுந்துய ரெய்திப்
போதல் செய்யா வுயிரொடு புலந்து
நளியிரும் பொய்கை யாடுநர் போல
முளியெரிப் புகூஉ முதுகுடிப் பிறந்த
பத்தினிப் பெண்டி ரல்லேம் (18.11-15)
என்று கூறுகின்றாள்.
                எனவே கற்புடை மகளிரின் தகுதியாகக் கணவனுடன் உயிர்துறக்கும் செயல் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
                கற்புநெறியில் ஒழுகும் குலமகளிரிடமிருந்து கணிகையரின் வாழ்நெறியை வேறுபடுத்திக்காட்டும் சித்திராபதி, பாணன் இறந்துவிட்டால் பாணனுடன் இறந்துபோகாத யாழ்போன்றது தங்கள் வாழ்வு என்று கூறுகிறாள்:
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில்
யாழினம் போலு மியல்பினம் (18.17-18).
கணவன் இறந்துவிட்டால் அவன் மனைவி செய்யவேண்டிய மூன்றுவகையான செயல்களை எடுத்துரைக்கிறாள் மாதவி.
காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்கா
தின்னுயி ரீவ ரீயா ராயின்
நன்னீர்ப் பொய்கையி னளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயி னன்பரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் (2.42-47)
இவ்வாறு மூன்றில் ஒருசெயலைக் கைக்கொள்ளாதவரைக் கற்புடைய மங்கையராக அக்காலச் சமுதாயம் கருதவில்லை என்பதை மணிமேகலைக் காப்பியம் உணர்த்துகிறது.
பிறர் நெஞ்சுபுகா மாண்பு
                கணவனைத் தவிர வேறு ஆடவரைக் கற்புடை மகளிர் நினைத்தும் பாரார் என்பது ஒருபுறமிருக்க அப்பெண்ணை வேறோர் ஆடவன் நினைத்தலும் அவளுடைய கற்புக்கு இழுக்காகும் என்னும் வரையறை மகளிருக்கு வற்புறுத்தப்பட்டமையை எடுத்துக்காட்டுகிறார்.  
            காவிரியில் நீராடிவிட்டுத் தனித்துவந்த மருதி என்னும் அந்தணப் பெண் திருமணமானவள் என்று அறிந்தும் அந்நகரைப் பாதுகாத்துவந்த சுகந்தன் என்பான் அவளைக்கண்டு காமம்கொண்டு அவளைத் தன் இச்சைக்கு இணங்குமாறு அழைக்கிறான். திருமணமான பின்னரும் பிறனுடைய நெஞ்சில் தான் புகுந்ததால் அதனைத் தன் தவறாகக் கருதுகிறாள் மருதி.
புக்கேன் பிறனுளம் புரிநூன் மார்பன்
முத்தீப் பேணு முறையெனக் கில்லென
மாதுய ரெவ்வமொடு மனையகம் புகாஅள்
பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்
கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன்
கண்டோ னெஞ்சிற் கரப்பெளி தாயினேன்
வான்றரு கற்பின் மனையறம் பட்டேன்
யான்செய் குற்றம் யானறி கில்லேன் (22.47-54)
என்று கூறும் மருதி, தன்னைப் பிறனொருவன் காமுற்றதால் அந்தணருக்குரிய முத்தீ பேணுகின்ற தகுதி தனக்கு இல்லை என்று கருதுகிறாள். பிறருடைய நெஞ்சிலே தான் புகுந்தமையின் தனக்குரிய தண்டனை இறப்பே என்று தீர்மானித்துத் தன்னைப் புடைத்து உண்ணுமாறு சதுக்கபூதத்திடம் வேண்டுகிறாள். இக்கருத்தினுக்குச் சீத்தலைச்சாத்தனார் மறுத்துரை ஒன்றும் படைத்துக்காட்ட வில்லையாதலால் அவருக்கும் இக்கருத்தில் உடன்பாடு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
கடவுளைத் தொழாமை
            கணவனைத் தவிர பிற கடவுளை வழிபடாது இருக்கும் பெண்களே கற்புடையவராகக் கருதப்பெறுவர் என்ற கருத்தை இளங்கோவடிகள் கண்ணகியின் வாயிலாகப் புலப்படுத்தக் காணலாம். அதே கருத்தைச் சீத்தலைச் சாத்தனாரும் முன்வைக்கிறார்.
கன்னிக் காவலுங் கடியிற் காவலுங்
தன்னுறு கணவன் சாவுறிற் காவலும்
நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்தங் குடியிற் பிறந்தா ளல்லள் (18.98-102)
என்று சித்திராபதி உரைப்பதன் வாயிலாக நற்குடிப் பெண்டிர் கணவனைத் தவிர இறைவனையும் வழிபடார் என்ற கருத்தினை முன்வைக்கிறாள்.
                'சுகந்தனின் மனத்தில் எவ்வாறு புகுந்தேன் என்பதை நான் அறியவில்லை' என்று சதுக்கபூதத்திடம் புலம்புகிறாள் மருதி. அதற்கு அப்பூதம், பிறர் கூறக்கேட்டு கடவுளரை வழிபட்டதன் காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்தது என்றும் கணவனைத் தவிர கடவுளை வழிபட்டதால் அவள் கற்புத்திறம் உடையவளாகாள் என்றும் உரைக்கிறது :
பிசியு நொடியும் பிறர்வாய்க் கேட்டு
விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்
கடவுட் பேணல் கடவியை யாகலின்
மடவர லேவ மழையும் பெய்யாது
நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்
பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியு மில்லை (22.62-67).
இதனால் கடவுளை வழிபடும் பெண்கள் தம் கற்பின் திறத்தால் பிறர்நெஞ்சு சுடுகின்ற பெற்றியை இழப்பர் என்னும் கருத்தையும் சீத்தலைச்சாத்தனார் முன்வைக்கிறார்.
கற்பாற்றல்
                கற்பிற் சிறந்த பெண்களுக்கு அளவிறந்த ஆற்றல் உண்டு என்னும் நம்பிக்கையைச் சீத்தலைச் சாத்தனார் புலப்படுத்துகிறார். மணிமேகலையை நாடிவந்த உதயகுமரனிடம் சுதமதி,
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள் (5.16-17)
என்று உரைக்கிறாள். மணிமேகலை சாபம் தருகின்ற ஆற்றல் படைத்தவள் என்பதனைச் சுதமதி கூறுகிறாள்.
                சுகந்தன் என்னும் காமுகன் திருமணமான தன்னைக் கண்டு மோகித்ததால் பிறர் நெஞ்சு புகுந்த தவறினைத் தான் இழைத்துவிட்டதாகக் கருதும் மருதி,
மண்டிணி ஞாலத்து மழைவளந் தரூஉம்
பெண்டி ராயிற் பிறர்நெஞ்சு புகாஅர் (22.45-46)
என்று கூறுகிறாள். கற்புடை மகளிர் இவ்வுலகில் மழைவளம் தரும் ஆற்றலுடையவர் என்னும் நம்பிக்கை இதனால் வெளிப்படுகிறது.
            மருதிக்கு அறிவுரை கூறுகின்ற சதுக்கபூதத்தின் வாயிலாகவும் திருவள்ளுவரின் கற்புக்கோட்பாட்டை வெளிப்படுத்துகிறார் சீத்தலைச் சாத்தனார்.
தெய்வந் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் (22.59-61)
என்று சதுக்கபூதம் கூறுகிறது. மேலும் அவள் பிற கடவுளரை வழிபட்டதன் காரணமாக அவள் மழையைப் பெய்விக்கும் ஆற்றலை இழந்ததாகவும் இனிவரும் காலத்தில் அவள் பிற கடவுளரைத் தொழும் வழக்கத்தை விட்டுவிட்டால் மீண்டும் அவளுக்கு மழைபெய்விக்கும் ஆற்றல் கைகூடும் என்றும் அப்பூதம் வகுத்துரைக்கிறது.
ஆங்கவை யொழிகுவை யாயி னாயிழை
ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது
பெட்டாங் கொழுகும் (22.68-70)
இவ்வாறு ஒருமுறை தப்பினும் தன் ஒழுகலாற்றை மாற்றிக்கொள்வதன் மூலம் கற்புத் திறத்தை மீட்டுப் பெறலாம் என்னும் சிந்தனை கருதத்தக்கது. பொழிமழை தரூஉம் / அரும்பெறன் மரபிற் பத்தினிப் பெண்டிர் (16.49-50) என்று கூறுவதிலிருந்து பத்தினிப் பெண்டிர் மழையைப் பெய்விக்கும் ஆற்ற லுடையவர் என்பதனைச் சீத்தலைச் சாத்தனார் ஏற்றுக்கொள்வதாக அறியலாம்.
கற்பும் வீட்டின்பமும்
            கற்புடைய மனைவி வாய்க்கப்பெற்ற ஆடவனுக்கே வீட்டின்பம் கிடைக்கும் என்னும் கருத்தும் சமுதாயத்தில் நிலவி வந்தது.
பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும்
புத்தே ளுலகம் புகாஅ ரென்பது
கேட்டு மறிதியோ (22.117-19)
என்று திருமணமாகாமல் வாழ்ந்துகொண்டிருந்த தரும தத்தனிடம் ஓர் அந்தணன் கூறுகிறான். வீடுபெற வேண்டுமாயின் முதலில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சமுதாயக் கருத்து இதன்மூலம் வெளிப்படு கிறது. எனினும் இக்கருத்தைச் சீத்தலைச் சாத்தனார், ‘புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்/ மிக்க அறமே விழுத்துணை யாவதுஎன்று கூறும் விசாகையின் வாயிலாக மறுத்துரைப்பதையும் காணமுடிகிறது.
                மேற்கூறியவற்றால் கற்புடைய பெண்டிராயின் பிறர் நெஞ்சுபுகுதல் கூடாது; கணவனைத் தவிர்த்த பிற கடவுளரை வணங்குதல் கூடாது; மழையையும் பெய்விக்கும் ஆற்றல் அவர்க்கு உண்டு என்னும் பெண் தொடர்பான கருத்தாக்கங்கள் சங்கம் மருவிய காலத்துத் தமிழகத்தில் இருந்தமையை அறியமுடிகிறது. வீட்டின்பத்திற்குத் திருமணம் இன்றியமையாதது என்னும் ஒரு கருத்தைத் தவிர பிறவற்றைத் தன் கூற்றிலோ காப்பியமாந்தரின் கூற்றிலோ காப்பிய ஆசிரியர் மறுக்காமையால் இக்கருத்துகளில் சீத்தலைச் சாத்தனாருக்கும் உடன்பாடு இருந்தமையை உய்த்துணர முடிகிறது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 55-64.

No comments:

Post a Comment