Friday 13 September 2019

ஆடவர் நோக்கில் சிலம்புப் பெண்டிர்


ஆடவர் நோக்கில் சிலம்புப் பெண்டிர்

            தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என்னும் கருதுகோளை மையமிட்டதாக அமைகிறது. கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, சேர அரசி வேண்மாள் முதலான பெண் மாந்தர் பலர் இக்காப்பியத்தில் இடம்பெற்றிருக் கின்றனர். கண்ணகி, மாதவி இருவரும் எதிர்எதிர் திசையில் பயணிக்கின்றனர். இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாகக் கோவலன் திகழ்கிறான். இந்நிலையில் இக் காப்பியத்தில் கோவலன் வாயிலாக உணர்த்தப்பெறும் பெண் பற்றிய ஆடவர் மனப்பாங்கினைக் காணுதல் அக்கால சமுதாயத்தை அறிந்துகொள்ளத் துணைபுரியும்.
மகளிரைப் பாராட்டல்
                தன் மனத்தைக் கவருகின்ற மகளிரின் அழகைப் பாராட்டுதல் என்பது ஆடவரின் பொதுவான மனப்பாங்காக அமைகிறது.
                மனையறம் படுத்த காதையில் அமளியில் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய கண்ணகியின் அழகில் திளைத்த கோவலன் அவள் அழகைப் பலவாறு பாராட்டுகின்றான்.
தீராக் காதலின் திருமுக நோக்கிக்
கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை (2.36-37)
என்று கோவலன் கூறும் மொழிகளைக் குறியாக் கட்டுரை என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர்
மறுவின் மங்கல வணியே யன்றியும்
பிறிதணி யணியப் பெற்றதை யெவன்கொல்
பல்லிருங் கூந்தற் சின்மல ரன்றியும்
எல்லவிழ் மாலையோ டென்னுற் றனர்கொல்
நானம் நல்லகில் நறும்புகை யன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை யெவன்கொல்
திருமுலைத் தடத்திடைத் தொய்யி லன்றியும்
ஒருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொல்
திங்கண்முத் தரும்பவுஞ் சிறுகிடை வருந்தவும்
இங்கிவை யணிந்தன ரென்னுற் றனர்கொல் (2.62-72)
என்றெல்லாம் பாராட்டுகின்றான். கண்ணகியைப் பற்றிய கோவலனின் பாராட்டுரையை நாற்பத்துமூன்று அடிகளில் (38-80) வடிக்கிறார் இளங்கோவடிகள். அப் பாராட்டுரையை முடிக்கும்போதும், உலவாக் கட்டுரை பலபா ராட்டி (2.81) என்று முடிக்கிறார் ஆசிரியர். அவளுடைய பேச்சில் அமிழ்து குழைந்திருக்கிறது (2.58) என்றும் அவளும் அமிழ்து போன்றவள் (2.78) என்றும் அவள் ஆருயிர் மருந்து போல்வாள் (2.75) என்றும் பாராட்டும் சொற்கள் பாராட்டுரையில் நோக்கவேண்டிய தொடர்களாகும்.
தப்பித்தல் மனப்பாங்கு
                ஆடவரின் புறத்தொழுக்கம் மகளிரால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றாலும் அது அவர்களுடைய ஆளுகைக்கு அப்பாற்பட்டதாகவே அமைந்துவிடுகிறது. தனது புறத்தொழுக்கத்தைத் தன் மனைவி ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று நன்கு அறிந்திருந்தாலும் தன் இல்லத்திற்குத் திரும்பும்போது தன் மனைவியின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும் அவளிடமிருந்து இல்லற இன்பத்தை அனுபவிப்பதற்குமான வித்தையை அவன் கற்றிருப்பதை அறியலாம். புறத்தொழுக்கத்திற்குப் பின்னர் வீட்டிற்குத் திரும்பும்போது விருந்தினர்களையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றால் தன் மனைவி பிறர் எதிரில் தன்னை எதிர்த்துப்பேசிக் குடும்ப மானத்தை இழக்க விரும்பமாட்டாள் என்னும் உளவியலைக் கணவன் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.
உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்
மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப்
போதுபுறங் கொடுத்துப் போகிய செங்கடை
விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும்
மருந்தும் தருங்கொல்இம் மாநில வரைப்பெனக்
கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் (5.228-234)
என்று ஆசிரியர் கூற்றாக வரும் பகுதியில் தன் கணவனின் புறத்தொழுக்கத்தை ஏற்றுக்கொண்டு மனத்தைத் தேற்றிக் கொள்ளும் பெண்ணே கற்பிற் சிறந்தவள் என்னும் ஆடவரின் மனப்பாங்கு வெளிப்படுகிறது.
தன்னிச்சைப்படி வாழ்தல்
                ஆடவன் தன் வாழ்க்கையைத் தன் இச்சைப்படியே அமைத்துக் கொள்கிறான். சமுதாய நெறிகள் பலவற்றை மிகச் சிறப்பாக ஆடவர் வகுத்துரைத்தாலும் தமது வாழ்க்கை என்று வரும்போது தம் சுகத்திற்கு இடையூறின்றி, மகிழ்ச்சி தருவனவற்றை யாருக்கும் அஞ்சாமல் அனுபவிக்கின்ற தன்மையைக் காணமுடிகிறது.
                இத்தகு ஆடவர் மனப்பாங்கிற்குக் கோவலன் பொருத்தமான எடுத்துக்காட்டாகிறான்.  தன் செல்வ வளத்தின் அகந்தையைப் புலப்படுத்தும் நோக்கத்தோடு மாதவியின் மாலையை வாங்குகிறான் கோவலன். அதனால் விளையப்போகிற எத்தகைய பின்விளைவுகளையும் அவன் சிந்திக்கவில்லை. ஆருயிர் மருந்து என்று தான் போற்றிய தன் மனைவிக்கு அதனால் துன்பம் ஏற்படும் என்ற எந்தவித குற்றஉணர்ச்சியும் அவன் மனத்தில் எழவில்லை.
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென் (3.170-74)
என்று இளங்கோவடிகள் கோவலனின் மனவியல்பைப் புலப்படுத்துகிறார். இதனைச் சமுதாயமும் சாதாரண ஒரு செயலாகவே ஏற்றுக்கொண்டதை உணரமுடிகிறது.
பெண்டிர் வாழ்நெறி வகுத்தல்
                பெண்டிரின் வாழ்நெறி இவ்வாறுதான் அமைய வேண்டும் என்று சமுதாயம் சில வரையறைகளை வகுத்துள்ளது. இந்நெறிகள் ஆடவர் நலன் நோக்கியதாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது. கோவலனோடு மகிழ்ந்து வாழ்ந்த சில ஆண்டுகளில் கண்ணகியின் வாழ்க்கை முறையைக் கூறவந்த இளங்கோவடிகள்,
மறப்பரும் கேண்மையோ டறப்பரி சாரமும்
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க (2.85-88)
என்று பட்டியலிடுகிறார். அதாவது கணவன் மனைவியாகக் கோவலனும் கண்ணகியும் இல்லறம் நிகழ்த்திய காலத்தில் கண்ணகி சுற்றந்தழால், அறவோர்க்கு அளித்தல், விருந்தோம்பல் முதலியவற்றை முறைப்படி செய்ததாகவும் இச் செயல்கள் இல்வாழ்வோர் எப்போதும் மறக்கக் கூடாதவை என்றும் இளங்கோவடிகள் உரைக்கின்றார். இச்செயல்களுக்கு வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி (2.84) என்று கண்ணகியை எழுவாயாக்குவதால் இச் செயல்கள் அனைத்தையும் கண்ணகியே மிகச் சிறப்புற ஆற்றியமையும் இவற்றில் கோவலன் எவ்வித சிரத்தையும் காட்டாமையும் புலனாகின்றன.
                கண்ணகியின் வாழியலைக் காட்டிய இளங்கோவடிகள் இதே போன்றதொரு இல்லற வாழ்வியலை மாதவியின் வாழ்க்கையில் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை என்ற பெண்குழந்தை பிறந்திருந்தாலும் அக்குழந்தை வளர்ப்பில் இருவரும் வகித்த பங்கினை இளங்கோவடிகள் எடுத்துரைக்கவில்லை.  அக்குழந்தையின் பிறந்தநாள் விழாவினை மட்டுமே பின்னர்க் குறிப்பிட்டுரைக்கிறார். கானல்வரிக்குப் பிறகு கோவலன் மாதவியைப் பிரிந்துசெல்ல அவள் வரையும் மடலில் கோவலனைப் பிரிந்த அவளது காமத்துயரை வெளிப்படுத்து கிறாளேயன்றி அவர்தம் குழந்தையின் துன்பத்தை எடுத்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பிறன்மனை நயத்தல்
                ஒருவன்-ஒருத்தி என்ற கோட்பாட்டின் நடைமுறை காலங்காலமாக விழையப்படினும் தீயொழுக்கம் மேற்கொள்ளும் பெண்டிரும் பிறன்மனையை நயக்கின்ற ஆடவரும் தமிழ்ச் சமுதாயத்திலும் இருந்ததை மறுக்க முடியாது. இதனை ஒழிக்கவேண்டும் என்னும் ஆவலில் சதுக்கபூதத்தைப் படைத்துக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.
தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர்
அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர்
அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக்
காத நான்கும் கடுங்குர லெடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும் (5.128-134)
என்னும் பகுதியில் கபடவேடதாரிகளை இனங்காட்டுகிறார் ஆசிரியர். அனைவரும் அறியுமாறு குற்றம்செய்யும் திருடர்கள், கொலைகாரர்களைக் காட்டிலும் நல்லவர்போல் நடித்துத் தீயவை செய்யும் இவர்களே அதிக தண்டனைக்கு உரியவர்கள் என்ற ஆசிரியரின் மனப்பாங்கு இங்குத் தெற்றென வெளிப்படுகிறது. பரத்தமையை ஒழித்துக்கட்ட வேண்டிய ஒன்றாகக் குறிப்பிடாத இளங்கோவடிகள் பிறன்மனை நயக்கும் ஆடவரை மன்னிக்க முடியாதவர் களாகக் கருதுகிறார். மனிதர்தம் இல்வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்பது இளங்கோவடிகள் கருத்தாக அமைந்திருப்பதை அறிய முடிகிறது. 
அடங்கி நடத்தல்
                தன் மனைவியாக இருந்தாலும் தன்னால் விரும்பப்படும் எத்தகையதொரு பெண்ணாக இருந்தாலும் அவளும் தன் இச்சைப்படியே அவள் வாழ்தல்வேண்டும் என்பது ஆடவர் மனப்பாங்காக அமைகிறது. தன்னை எதிர்ப்பதைப்போன்ற எத்தகையதொரு செயலையும் அவள் விளையாட்டாகக்கூட செய்துவிடலாகாது. அத்தகு செயல் அவன் தன் உறவை முறித்துக்கொள்ளப் போதுமான காரணமாக அமைந்துவிடலாம் என்பதை இளங்கோவடிகள் மிக நுட்பமாகப் புலப்படுத்துகிறார்.
ஆங்குக் கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும்
மன்னுமோர் குறிப்புண்டிவன் றன்னிலைமயங் கினானெனக்
கலவியான் மகிழ்ந்தாள்போற் புலவியால் யாழ்வாங்கித்
தானுமோர் குறிப்பினள்போற் கானல்வரிப் பாடற்பாணி
நிலத்தெய்வம் வியப்பெய்த நீள்நிலத்தோர் மனமகிழக்
கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தாற் பாடத் தொடங்குமன்
                                                                                                (7.24)
என்னும் பகுதியில் கோவலனுக்குப் போட்டியாக மாதவி பாடிய நிலையைச் சுட்டுகிறார் இளங்கோவடிகள். தான் பாடும்போது அதற்குப் போட்டியாகப் பாடியது, அப் பாடலில் உள்ளர்த்தம் தொனிக்கப் பாடியது, அங்குச் சுற்றிலும் இருந்தவர்கள் மனமகிழ்ந்து கேட்குமாறு பாடியது என்னும் மூன்று செயல்களையும் ஏற்றுக்கொள்ளவியலாத மனநிலையைக் கோவலனிடம் காண்கிறோம். கோவலன் பாடியதைக் காட்டிலும் மாதவி பாடும்போதுதான் மக்கள் அனைவரும் மகிழ்ந்ததாக ஆசிரியர் கூறுவதன்மூலம் கோவலனுடைய அகந்தைக்கு மாதவியால் நிகழ்ந்த ஊறினையும் புலப்படுத்துகிறார். தனக்கடங்கி இருக்க வேண்டிய பெண்ணைப் பிற ஆடவர் போற்றுவதை எந்த ஆண்மகனாலும் எளிதாக ஏற்றுக்கொள்ள இயலாது என்னும் ஆடவர் மனப்பாங்கை இதன்மூலம் அறியமுடிகிறது.
உணர்ச்சிவயப்படுதல்
            கானல்வரியில் மாதவி தனக்குப் போட்டியாகப் பாடியது மட்டுமல்லாமல் அவளது பாடற்பொருளும் நெறியும் விலைமகளின் தன்மையைப் பிரதிபலிப்பதாக ஐயுறுகின்றான் கோவலன்.
கானல்வரி யான்பாடத் தானொன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாள் (7.52.1-2)
என்று கோவலன் எண்ணும்போது, அத்தனைநாள் விடுதல் அறியா விருப்பினனாக (3.173) மாதவியே கதியென்று வாழ்ந்தவன் எப்படி ஒருசில மணித்துளிகளில் தன் கருத்தை மாற்றிக் கொள்கிறான் என்பதைக் காட்டி ஆடவனின் மனவியல்பை உணரவைக்கிறார் ஆசிரியர். பெண்களைப் பற்றிய ஆடவர் மனப்பாங்கு பல சந்தர்ப்பங்களில் உணர்ச்சி மேலீட்டால் எழக்கூடியவை என்பதையும் இங்கே விளங்கவைக்கிறார் ஆசிரியர்.
உறுதி இன்மை
                எந்த ஓர் இழப்பைக் காட்டிலும் ஒரு பெண்ணிடத்துத் தோன்றுகின்ற அவமதிப்பையே பெரிதாக நினைத்து மருகுவது ஆடவர் இயல்பாக அமைகிறது. தான் விலைமகளாகிய மாதவியினால் வஞ்சிக்கப்பட்டதாகக் கருதும் கோவலன் அந்த ஊரைவிட்டே நீங்கிச் சென்றுவிட வேண்டும் என்று அவசரப்படுகிறான். தனது நிலையை அறிந்து தன்னைநோக்கி யாரும் கைநீட்டி எதனையும் உரைத்துவிடக் கூடாது என்று கருதுகின்ற கோவலன் தன் மனைவி கண்ணகியிடம் எந்தவோர் ஆலோசனையையும் கேட்கவில்லை. தன் வீழ்ச்சியில் பக்கத்துணையாக இருந்து தன்னைக் காக்கவேண்டிய கடப்பாடு தன் மனைவி கண்ணகிக்கு உண்டு என்று தீர்மானிக்கும் அவன்,
. . .                          சேயிழை கேளிச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனோ
டுலந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென் றென்னோடிங்
கேடலர் கோதா யெழுக (9.73-77)
எனக் கண்ணகியையும் உடன்வருமாறு ஆணையிடு கின்றான். அதே ஊரில் இருந்தால் மாதவியின் வற்புறுத்தலுக்குத் தான் இலக்காகின்ற சூழலுக்கு ஆட்பட வேண்டியிருக்கும் என்றே அவன் அத்தகையதொரு முடிவெடுக்கிறான் என்பதை நுணுகிநோக்கின் புலனாகும். ஒருவேளை கோவலன் மதுரைக்குப் பயணப்படாமல் புகார் நகரில் இருந்திருந்தால் மாதவியின் இரண்டாவது மடலைக் கண்டபின் மீண்டும் அவளிடத்துச் சென்றிருப்பான் என்பதிலும் ஐயமில்லை.
                மேற்கூறியவற்றால், சிலப்பதிகாரக் கோவலனை ஆடவர் சமுதாயத்தின் ஒரு பிரதிநிதியாக நோக்குமிடத்து ஆடவன் ஒருவன் பெண்டிரைப் பற்றிய எத்தகைய மனப்பாங்கினைக் கொண்டிருக்கிறான் என்பதனை அறியமுடிகிறது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 46-54.

No comments:

Post a Comment