Thursday 19 September 2019

பாரதிதாசனின் குடும்பத் தலைவி


பாரதிதாசனின் குடும்பத் தலைவி

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
என்று பாடி ஆடுகிறார் பாரதியார். பாரதியின் தாசனாம் பாரதிதாசனும் அனைவராலும் போற்றப்படும் தகைமை யுடைய தலைவியாகத் தங்கத்தைப் படைத்துள்ளார். குடும்பவிளக்கின் ஐந்து பகுதிகளிலும் தலைமைப் பண்புடன் தீட்டப்பட்டிருக்கிறாள் தங்கம். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் தமது கருதுகோளின் வெளிப்பாடாகவே தங்கத்தைப் பாரதிதாசன் படைத் திருப்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

சோர்வுபடா தங்கம்
            ஊக்கமும் சுறுசுறுப்புள்ளமும் கொண்டவளாகத் தங்கத்தைப் படைத்திருக்கிறார் பாரதிதாசன். இப் பண்புகளை அவளுடைய இளமைக்காலம் முதல் முதுமைக் காலம் வரை காணமுடிகிறது. அவள் ஒருநாள் பொழுதில் செய்யும் வேலைகள் அனைவரையும் மலைக்கச் செய்கின்றன.
            காலை வேளையில்வாழிய வையம் வாழியஎன்று இன்னிசை யாழ் மீட்டி, வீட்டையே ஓர் அமைதியான சூழலுக்குக் கொண்டுவருகிறாள்; பின்னர் மாடு கறக்கிறாள்; வீட்டை நிறம் புரிகிறாள்; செம்பு, தவலை ஆகியவற்றைச் செழும்பொன்போல் விளக்குகிறாள்; நீர் முகந்து வைக்கிறாள்; நீரில் கொத்துமல்லி இட்டுக் காய்ச்சிச் சர்க்கரை சேர்த்து இறக்கி வைக்கிறாள்; கணவனையும் தன் குழந்தைகளையும் கவனிக்கிறாள் (6-7); மாடு கன்றினுக்குத் தீனி வைக்கிறாள்.
                கணவனுக்கும் குழந்தைகளுக்கும் தழைத்த வாழைத் தளிர் இலையில் அமுது படைக்கிறாள். தன் குழந்தை களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறாள். அவர்களைப் பள்ளிக்கு அனுப்பிவைத்துப் பின் கணவனையும் அனுப்பி வைக்கிறாள்.

சகல கலாவல்லி
                ஒடிந்த மரச் சாமான்கள் பழுதுபார்த்துப் பளபளப்பாக்கி வைக்கிறாள்; இடிந்துள்ள சுவருக்குச் சுண்ணாம்பால் போரை பார்க்கிறாள் (11). இவ்வாறு தச்சுத் தொழில், கட்டிடக் கலை ஆகியவற்றில் வல்லவளாகத் திகழ்கிறாள் தங்கம்.
தற்கொண்டான் பேணல்
கண்ணல்ல நீதான் சற்றே
கடைக்குப் போய்க் கணக்கர் தம்மை
உண்பதற் கனுப்பி உண்டு
வந்தபின் வாஎன் னாசைப்
பெண்ணல்ல என்று சொல்லிச்
சோம்பலால் பிச்சை கேட்டான்
கண்ணல்ல கருத்தும் போன்றாள்
சரியென்று கடைக்குச் சென்றாள் (23)
என்று தன் கணவனின் வணிகத்திலும் உறுதுணை புரிபவளாகப் படைத்திருக்கிறார் பாரதிதாசன். கணவனுக்குத் துணையாகக் கடைக்குச் சென்று வகையாகக் கணக்கெழுதி களிப்பாக்கு கேட்பார்க்கு ஈந்து புளிப்பாக்கியைக் களிப்பாகப் பேசித் தீர்த்துப் புதுச்சரக்கை அளிக்கிறாள் தங்கம்.

எதிர்காலத் தேவை
            அன்றாட வீட்டுவேலைகள் மட்டுமல்லாமல் வருங்காலத்தில் தேவையான வடகத்தைக் காயவைத்து பெரிய சாலில் சேர்த்து வைக்கிறாள் (25) என்று தங்கத்தின் பொறுப்புணர்வை முன்வைக்கிறார் பாரதிதாசன்.

தூய்மை காத்தல்
ஒட்டடைக் கோலும் கையும்
உள்ளமும் விழியும் சேர்த்தாள்
கட்டிய சிலந்திக் கூடு
கரையானின் கோட்டை யெல்லாம்
தட்டியே பெருக்கித் தூய்மை
தனியர சாளச் செய்து (11)
என்று தங்கம் வீட்டைத் தூய்மைப்படுத்துவதை எடுத்துரைக்கிறார் பாரதிதாசன். மேலும் அவள் உறி விளக்குகளையும் துடைத்துவைக்கிறாள். இவ்வாறு வீட்டை யும் பொருட்களையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறாள் தங்கம்.

விருந்தோம்பல்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
என்கிறார் வள்ளுவர். அவர்தம் வாக்கினது பொருளை நன்குணர்ந்தவளாகத் தங்கத்தைப் படைத்திருக்கிறார் பாரதிதாசனார்.
பொன் துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள முகம்
அன்றலர்ந்த செந்தா
மரையாக - நன்றே
வரவேற்றாள் (38)
என்று தங்கம் விருந்தினரை எதிர்கொண்டமையைப் பாரதிதாசனார் எடுத்துரைக்கிறார். சாய்ந்திருக்க நாற்காலி தந்து தேன்குழலும் தெவிட்டாத பண்ணியமும் பாலும் பழமும் கொடுத்து வெற்றிலையும் கொடுத்து உபசரிக்கிறாள்.

சமையல் கலை
கொண்டவர்க் கெதுபி டிக்கும்
குழந்தைகள் எதைவி ரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
மாமிக்குத் தக்க தென்ன (16)
என்றெல்லாம் யோசித்துக் காய்கறி வாங்குகிறாள். எனவே சமையலையும் ஈடுபாட்டோடு செய்பவளாகத் தங்கம் படைக்கப்பட்டிருக்கிறாள்.

தையற் கலை
            கணவனின் சட்டையில் கிழிசல் இருப்பது கண்டு, மனம் சளைக்காமல் முகம் சுளிக்காமல் தைத்துத் தருகிறாள். கணவனைக் கடைக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கும் அனுப்பிவிட்டபின்,
சட்டைகள் தைப்ப தற்குத்
தையலைத் தொட்டாள் தையல் (11)
என்று குடும்பத்திற்குத் தேவைப்படுவனவற்றை அவளே தைத்து வைப்பதைச் சிறப்பாகப் புலப்படுத்துகிறார் ஆசிரியர்.

தங்கம் : மருத்துவச்சி
            மாமனின் வீங்கிய காலினுக்கு விளக்கு மருத்துவம் செய்து நல் மருத்துவச்சியாகத் திகழ்கிறாள் தங்கம். நாடி பிடித்து மருத்துவம் செய்கிறாள். மீண்டும்,
படுக்கையில் மாம னாரைப்
பார்த்தனள் - காலில் இன்னும்
கடுக்கை தீர்ந்திலதோ என்று
கனிவோடு கேட்டு டுக்கும்
உடுக்கையும் மாற்று வித்து (24)
என்று தங்கம் சிறந்த மருத்துவச்சியாகத் திகழ்வதை எடுத்துரைக்கிறார் பாரதிதாசனார்.

தங்கம் : மருமகள்
            தன் மாமன் மாமிக்குச் சிறந்த மருமகளாகத் திகழ்கிறாள் தங்கம். நாத்தனார் வீடு சென்ற மாமனும் மாமியும் திரும்பி வர உள்ளம் மகிழ்ந்து நல்வரவு கூறி வரவேற்கிறாள். வண்டியில் வந்த பொருட்களையெல்லாம் இறக்கி வைக்கிறாள். வண்டியில் கணக்கற்ற சாமான்கள் இருந்ததால், ‘இத்தனைச் சாமான்கள் வண்டிக்குள் இருந்தனவென்றால் நீங்கள் எப்படித்தான் உட்கார்ந்து வந்தீரோ?’ என உண்மையிலேயே வருந்துகிறாள். மாமனார் கொண்டுவந்த பொருளையெல்லாம் வரிசை செய்து, வெந்நீர் குளிக்கத் தந்து, உணவு பரிமாறி அதன்பின் அவர்கள் சற்றுக் கண்ணயரத் துப்பட்டியும் விரித்துப் போடுகிறாள்.
            இவ்வாறு தன் மாமன் மாமியிடம் சிறந்த அன்பு பூண்டு முதுமைக் காலத்தில் அவர்தம் உள்ளம் வாடாது பணிசெய்து, மருமகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறாள் தங்கம்.

தங்கம் : மனைவி
            தன் கணவனுக்குச் சிறந்ததொரு மனைவியாய்த் திகழ்கிறாள் தங்கம். பண்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்கிறாள். கணவனைக் குளிர்ப் புனலாட்டி, மேனி துடைத்து விடுகிறாள்; அவன் உடுக்க உடைகள் எடுத்துக் கொடுக்கிறாள்; தலைமயிர் மழிப்பதற்குக்கூட அவளே நினைவுபடுத்துகிறாள்; வெற்றிலைச் சுருள் மடித்து ஏந்துகிறாள்.
கையிற் கொடுப்பதைக் காட்டிலும் சுருளை
வாயிற் கொடுத்திடு மங்கையே என்றான்
சேயிழை அன்பாய்ச் செங்கை நீட்டினாள்
குடித்தனப் பயனைக் கூட்டி எடுத்து
வடித்த சுவையினை வஞ்சிக் களித்தல்போல்
தளிர்க்கைக்கு முத்தம் தந்து
குளிர்வாய் வெற்றிலை குழைய ஏகினனே (9-10)
என்று கணவனை அவள் மகிழ்வுறுத்தும் தன்மையைப் புலப்படுத்துகிறார் பாரதிதாசனார். தன் கணவனுடைய அன்புக்கு நிகர் எதுவும் இல்லையெனத் துணிகிறாள்.
செம்மா துளை பிளந்து
சிதறிடும் சிரிப்பால் என்னை
அம்மாது களிக்கச் செய்வாள்
என்று முதியோர் காதலில் மணவழகன் தன் மனைவி தங்கத்தின் பண்புநலனைச் சுட்டுகிறான்.
தற்காத்துத் தற்கொண் டானைத்
தான்காத்துத் தகைமை சான்ற
சொற்காத்துச் சோர்வி லாளே
பெண்என்று வள்ளு வர்தாம் (106)
சொன்ன நெறியில் நடப்பவளாய்த் திகழ்கிறாள் தங்கம். மணவழகரின் முதுமைக் காலத்திலும் அன்பு மாறாதவளாய் விளங்குகிறாள்.
மணவழகர்தம் மறுபுறம் நகர்ந்தால்
அணிமையிற் சென்றே அன்பன் படுக்கையைத்
தட்டி விரிப்பு மாற்றித் தலையணை
உறைமாற் றுவாள் அவள் மணந்த நாள்
பெறுவதைப் பார்க்கிலும் பெறுவாள் இன்பமே
என்று அவள்தன் அன்பின் திறத்தைக் கூறுகிறார் பாரதிதாசனார். இவ்வாறு தன் கணவன் செய்யும் காரியங்களுக் கெல்லாம் கைகொடுத்து மாட்சிபெற்று விளங்குகிறாள்.

தங்கம் : தாய்
            தன்னைக் கொண்டானுக்குத் தகைமையுடன் நடப்பது மட்டுமன்றி தன் அன்புச் செல்வங்களுக்கு அமுதமாயும் திகழ்கிறாள் தங்கம். தன் குழந்தைகளின் சுவடியை ஒழுங்குற அடுக்கி, அவர்களுக்கு உடை அணிவிக்கிறாள். புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகளைச் சின்னவன் காலிற் செருகிச் சிறு குடை கையில் தந்து, கையொடு கூட்டித் தானும் உடன்சென்று பள்ளியில் விட்டு வருகிறாள். பள்ளிக்குச் சென்ற தன் பிள்ளைகள் வீட்டிற்குத் திரும்பி வருவதைத் தங்கம் எதிர்பார்த்து நின்றதை,
செங்கதிரை மேற்குத் திசையனுப்பி மாணவர்கள்
பொங்கும் மகிழ்ச்சியினால் வீடுவரும் போதாக
வீட்டுக் குறட்டில் நின்ற நற்றலைவி வேல்விழிகள்
பாட்டையிலே பாய்ச்சி (77)
என்று அழகாகக் கூறுகிறார் ஆசிரியர். குழந்தைகள் மீண்டும் வீடு திரும்பியதும்,
பள்ளியில் அறிஞர் சொன்ன
பாடத்தின் வரிசை கேட்டு
வெள்ளிய உடை கழற்றி
வேறுடை அணியச் செய்தே
உள்வீட்டில் பாட்டன் பாட்டி
உள்ளதை உணர்த்தி அந்தக்
கள்ளினில் பிள்ளை வண்டு
களித்திடும் வண்ணம் செய்தாள் (18)
என்று தங்கத்தின் செயலைப் பதிவுசெய்கிறார் பாரதிதாசனார்.

தங்கம் : மாமியார்
            தங்கம் சிறந்த மாமியாராகவும் திகழ்கிறாள். தன் மருமகளைத் தேனும் உயிருமாய் நினைக்கிறாள்.
மானே மயிலே மருமகளே என்வீட்டு
வானநிலவே
மகிழ் வென்றாள் தங்கமுமே (30)
என்று தங்கம் ஒரு சிறந்த மாமியாராகத் திகழுவதைப் பாரதிதாசனார் படம்பிடிக்கிறார். தன் மகனின் திருமணத்தை விரைவில் தன் வீட்டில் பணச்செலவு நேர்ந்தாலும் பாங்காய் நடத்த விழைகின்றாள்.

தங்கம் : பாட்டி
                தன்னுடைய முதுமைக் காலத்தில் தன் பேத்தி மீதும் அன்பு செய்கிறாள் தங்கம். அக் குழவியை இன்ப அமிழ்தாக இணையற்ற ஓவியமாக நினைக்கிறாள். குழவியின் தலை உச்சிமோந்து மங்கா மகிழ்ச்சியினால் மார்போடு அணைக்கிறாள்.
ஆட்டனத்தி யான அருமை மணாளனையே
ஓட்டப் புனற் கன்னி உள்மறைத்துக் கொண்டு செல்லப்
போதுவிழி நீர்பாயப் போய்மீட்டுக் கொண்டுவந்த
ஆதிமந்தி கற்புக் கரசியவள் நீதானோ (74)
என்று தாலாட்டுப் பாடுகிறாள். பேத்தியை ஔவையாகவும் காக்கைப் பாடினியாகவும் நச்செள்ளையாகவும் இளவெயினி நக்கண்ணையாகவும் நினைக்கிறாள்.
கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடியின் திருவிளக்கே (75)
எனப் போற்றுகிறாள்.
                நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பர். தங்கத்தின் அறிவாலும் ஆற்றலாலும் பண்பாலும் குணத்தாலும் அவள்தன் குடும்பமே சிறப்புற்று விளங்கியது என்று தங்கத்தின் குடும்பப் பாங்கை மிகமிக அழகாகச் சித்திரித்துச் செல்கிறார் பாவேந்தர் பாரதிதாசனார். இவ்வாறு குடும்ப விளக்கில் படைக்கப்பட்டுள்ள தங்கம் ஒரு சிறந்த குடும்பத்தலைவியின் மாதிரியாகத் திகழ்கிறாள். ஒரு குடும்பம் சிறந்ததாக அமைய வேண்டுமாயின் அக் குடும்பத்தின் தலைவி இத்தகைய அனைத்து குணங் களையும் சிறப்புகளையும் உடையவளாகத் திகழ வேண்டும் என்ற குறிக்கோளியல் சார்ந்த பாத்திரப் படைப்பில் பாரதிதாசன் வெற்றி பெற்றுள்ளார் எனலாம்.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 98-106.

No comments:

Post a Comment