Thursday 27 November 2014

இருண்மை கொண்ட நெஞ்சினாய்






அழுகிக்கிடக்கும்
குட்டையைத் தூர்வாரி 
தாமரைகளை
மலரவிட்டமை 
தரங்கெட்ட செயலென்று 
தம் கும்பகருணத் தூக்கம் 
கலைந்துவிட்டதற்காகக் 
கூச்சலிட்டு 
ஊர்கூட்டும் 
சில சொறித்தவளைகள்! 

முட்டிக் கொண்டிருக்கும் 
முடைநாற்றம் வீசும் 
குட்டிச் சுவர்களை 
நெட்டித்தள்ளிச் 
சோலைகள்
உருவாவதை 
ஜீரணிக்கவியலாக்
கோபத்தில் 
கத்தித் தொலைக்கும் 
சில தரங்கெட்ட
கழுதைகள்!...

சமயம் பார்த்துக் காத்திருக்கும்
ஊளை நரிகளின்
பேரப் பேச்சுகளின்
தந்திரம் புரியாமல்
எண்ணிக்கை பலத்தில்
ஏமாந்து சாய்ந்துவிடும்
சில செம்மறியாடுகள்!

தங்கள் பிரதிநிதிபெறும்
தரச்சான்றிதழ்
காணச் சகியாமல்
பொறாமையால்
கொடிபிடிக்கத்
தம் சேலையையே
கிழித்துப் பங்கப்படும்
திரௌபதிகள்!

இராமன் முடிதுறப்பதால்
தமக்கு இனி
இலாபமில்லையென்னும்
தப்புக்கணக்கில்
இராவணனோடு சேர்ந்துகொண்டு
மூக்கறுபட இருக்கும்
லட்சுமண பரதன்கள்!

காற்றாடிகளைப் பறக்கவிடும்
சூட்சுமம் கற்றுக்கொள்ளாமல்
காற்றை எதிர்ப்பதாகக்
காட்டிக்கொள்ள
காற்றாடிகளைப் பறக்கவிடாமல்
கயிறுகளை அறுத்துவிடும்
காலித்தனங்கள்!

No comments:

Post a Comment