Monday 10 November 2014

இதுவா எங்கள் சுதந்திரம்?

- கவிஞர் அவ்வை நிர்மலா


ஊர்நடுவே மேடையிட்டு 
ஒலிவாங்கி கைபிடித்து
லாரிகளில் அழைத்துவந்த
கூட்டத்தால் அவைநிரப்பி
கரகரத்த ஒலியோடு
பிறகட்சிதனைத் தாக்கி
கரைவேட்டி அணிந்துகொண்டு
கார்பவனி செல்வதுடன்
மக்களின் வரிப்பணத்தை
மடைமாற்றம் செய்தேதான்
இலவசங்கள் எனும்பெயரால்
ஓட்டுவங்கி நிரப்புகின்ற
அரசியலைப் புரிகின்ற
தலைவரை யாம் பெறுதல்
சுதந்திரத்தால் அடைந்திட்ட
சுகமென்று உரைத்திடவோ?
திருட்டுக்கும் புரட்டுக்கும்
பேர்பெற்ற கொள்ளையர்கள்
தருக்கிநடை பயின்றிடவே
தடையேதும் இல்லையென்றும்
மருட்டுகின்ற கொலைபுரிந்த
மாந்தர்களும் திறமுடனே
கருணைமனு அளித்துவிட்டால்
தப்பிக்க இயலுமென்றும்
விருப்புற்ற பெண்மீது
அமிலத்தை வீசிடினும்
சிறப்புற்று வாழ்ந்திடவே
மணப்பெண்கள் வாய்ப்பரென்றும்
குருட்டுமனம் கொண்டார்க்கு
நம்பிக்கை விதைத்திடலே
சுதந்திரத்தால் அடைந்திட்ட
பயனென்று பகன்றிடவோ?
கண்டகண்ட இடத்தினிலே
காரிகாரி உமிழ்வதுவும்
கழிவறைகள் செல்லாமல்
பாதையோரம் கழிப்பதுவும்
எவர்வீட்டுச் சுவரினிலோ
விளம்பரங்கள் செய்வதுவும்
விருப்பம்போல் வீதியிலே
வாகனங்கள் நிறுத்துவதும்
ஆக்கப் பணிகளையே
ஆள்கூட்டி எதிர்ப்பதுவும்
ஆபத்துக் காலத்தில்
ஆதாயம் தேடுவதும்
அரசாங்க நிலத்தினையே
கூறுபோட்டு வளைப்பதுவும்
சுதந்திரத்தால் அடைந்திட்ட
வசதியென விளம்பிடவோ?
கால்வயிற்றுக் கஞ்சியுண்டு
தமை வளர்த்த பெற்றோரின்
பாரத்தை ஏற்கின்ற
பரிதவிப்பு இல்லாமல்
திரைப்படத்து நாயகர்க்குக்
கட்அவுட்டு நாட்டிவிட்டு
முதற்காட்சி பார்ப்பதற்கு
முண்டியடி சண்டையிட்டு
அங்கங்கே திறந்திருக்கும்
அரசாங்கக் கடைகளிலே
அனுதினமும் குடித்துவிட்டுக்
கும்மாளம் போடுகின்ற
கல்வியிலே கோட்டைவிட்ட
வேலையற்ற இளையோர்தாம்
சுதந்திரத்தால் அடைந்திட்ட
பரிசென்று செப்பிடவோ?

No comments:

Post a Comment