Tuesday 11 November 2014

ஆசை முகம் மறந்து போச்சே ..

ஆசை முகம் மறந்து போச்சே ..

‘கண்ட கண்ட கழுதையை எல்லாம் உள்ளே யார் விட்டது’ என்று சற்று இரைந்தே சொன்னார் பரந்தாமன்.
கோப்புகளில் ஓடிக்கொண்டிருந்த கண்களையும் மனத்தையும் அவர் பக்கம் திருப்பினேன்.
ஒருவன் அவரை முறைத்துக்கொண்டே அறைக்கு வெளியே சென்றுகொண்டிருந்தான்.
 அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வறுமையால் கூனிக்குறுகிப்போன உருவம் என்பது அவன் நடையில் தெரிந்தது.
தேய்க்கப்படாத கசங்கிய உடை. கவனமாகத் துவைக்கப்படாததால் அழுக்கே அதன் 
நிறமாக மாறிப் போயிருந்தது.
என்ன சார் விஷயம்?’
அவன் பொண்ணுக்குக் காலேஜ்ல படிக்க ஸ்காலர்ஷிப் வேணுமாம். அதுக்கு இங்க   வந்து அப்ளிகேஷன் கேக்கறான்.’
ஸ்காலர்ஷிப் விவகாரமெல்லாம் மேல்தளத்தில் இருந்தது. அவன் மூன்றாவது தளத்திற்குச் செல்வதற்குப் பதில் தவறுதலாக இரண்டாம் தளத்திற்கு வந்துவிட்டான்.
இப்படி மாறிப்போவது என்ன குற்றமான காரியமா? அங்கேயே வேலை செய்பவர்களுக்குத்தான் எந்தப் பிரிவு எங்கே இருக்கிறதென்று தெரியும். வெளியே இருந்து வருபவர்களுக்கு எப்படித் தெரியும்? ஒரு நாளைக்கு இப்படிக் குறைந்தது பத்து பேராவது வேறு ஏதாவது ஒரு செக்ஷனுக்குள்ள விஷயத்தைப் படிக்கட்டு ஏறியதும் உள்ள எங்கள் அறையில் வந்து விசாரித்துச் செல்வது வாடிக்கைதான்!
இப்படி வாடிக்கையான ஒரு விஷயத்திற்காகப் பரந்தாமன் சாருக்கு மூக்குமேல் கோபம் ஏன் வந்தது?
பரந்தாமன் சாருக்கு என் அப்பா வயது இருக்கும்  - என் அப்பா உயிருடன் இருந்திருந்தால். பரந்தாமன் சார் அடுத்த வருடம் பணிஓய்வு பெறப்போகிறார்; யாரையும் பெரிதாகக் கடிந்துகொள்ள மாட்டார்; பொறுப்பானவர்; வெளியே இருந்து விவரம் தெரியாமல் வருகின்ற பாமர மக்களுக்கு எல்லாவற்றையும் விளக்கி ஒரு வகுப்பு எடுத்துவிடுவார். அதைப்பார்த்து நாங்கள் பலமுறை அதிசயப்பட்டதுண்டு. சிலநேரம் கேலி செய்வதும் உண்டு. அப்படிப்பட்டவர் ஏன் இப்படிக் கோபித்துக் கொள்கிறார்?
ஒருவேளை அவர் வீட்டில் ஏதாவது சண்டையோ? அதனால்தான் அந்தக் கோபத்தை இப்படி வெளிஆள்மேல் காட்டுகிறாரோ?
காலையிலிருந்து அவர் சாந்தமாகத்தானே இருந்தார்?
இன்னும் அவர் வாய் சென்றவனைத் திட்டிக் கொண்டிருந்தது.
என்னசார் இது. இவ்வளவு கோபமா இருக்கீங்க? போறாரு விடுங்க’.
ஏம்மா சாந்தி . . . !  அந்தக் கட்டைல போறவனப் பாத்தா ஒனக்குக் கோவம் வரலயா?’
நான் ஏன் சார் கோபப்படணும்? பாவம், போகட்டும் விடுங்க சார்’.
நீ ஓர் அபூர்வப் பிறவிம்மா!’
பரந்தாமன் சார் சொன்னதைக்கேட்டு எனக்குக் குழப்பமாக இருந்தது. எதற்காக இவர் இப்படி டென்ஷனாகிறார்? என்னை ஏன் சம்பந்தமில்லாமல் புகழ்கிறார்?
இவனெல்லாம் வாந்திபேதி வந்து போய்ச்சேராம இருக்கானுங்களே? இவன் பொண்ணுக்கு ஸ்காலர்ஷிப்பா வேணும்? நான் அந்த செக்ஷன் சுந்தர்கிட்ட சொல்லி அவனுக்கு உதவித்தொகை கிடைக்காமப் பண்றேன் பாரு . . .’
பரந்தாமன் சாருக்கு ஏன் இந்தக் கோபம்?
அவனுக்கும் உங்களுக்கும் என்ன சார் பகை?’
ஏன் அவனுக்கும் எனக்கும் பகை இருந்தாத்தானா? நான் என்ன உப்பு போட்டு சோறு திங்கல? எனக்குச் சொரண இல்ல? எத்தனமொற என்ன நீ அப்பா மாதிரின்னு சொல்லியிருக்கே? உன் அப்பாவா இருந்தா கோபப்பட மாட்டாரா?’
என் அப்பா அவர்மீது ஏன்சார் கோபப்படணும்?’
தன் பொண்ணக் கட்டிக்கிட்டு நிர்க்கதியா விட்டுட்டுப் போனவனப் பாத்து எந்த அப்பா ஆத்திரப் படாம இருப்பார்?’
யாரு சார் வந்தது?’
ஏம்மா? அவன நீ சரியா பாக்கலையா? உன் புருஷன்தான் வந்திருந்தான் . . .’
பரந்தாமன் சார் இன்னும் ஏதேதோ அவனை வசைமாரி பொழிந்து கொண்டிருந்தார். பின்னோக்கிச் சென்ற என் கவனத்தில் அச்சொற்கள் தெளிவின்றி ஒலித்தன.
வந்தவன் என் புருஷனா . . . ?
நான் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்று, கருப்பு கவுன் அணிந்து, பட்டத்தை வாங்கிப் புகைப்படம் எடுத்து வீட்டு ஹாலில் மாட்டி மகிழ்ந்துகொண்டிருந்த வேளை. . .
ஆங்கில அறிவு அரசுப் பணித் தேர்வில் வெற்றிபெற துணைபுரிந்தது.
அகால மரணமடைந்தவிட்ட அப்பா. அப்பா இல்லாத குடும்பத்தில் அண்ணனுக்குத்தானே பொறுப்பு அதிகம். தங்கைக்கு மணம் செய்வித்தால்தான் அவன் நிம்மதியாகத் திருமணம் செய்துகொள்ள முடியும்.
பாவம். அவனுக்கும் அனுபவம் இல்லை. வந்த வரனை விட்டுவிட விரும்பாமல் எனக்கு அவசரக் கல்யாணம் செய்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சுவிட நினைத்தான்.
அந்தக் காலத்தில் எனக்கு மட்டும் என்ன தெரிந்திருந்தது? அண்ணன் சொன்னான். கேட்டுக் கொண்டேன்.
என்ன படிச்சிருக்காருண்ணா?’
இதோ பாரு. நம்ம சக்திக்கு ஒன் அளவுக்குப் படிச்சவன என்னால தேடமுடியாது. ஏதோ நல்ல பையனா? சம்பாதிக்கிறானா? அவ்வளவுதான் பாக்கணும்!’  
அண்ணனின் பொறுப்புணர்வை அக்கம் பக்கத்தினர் மெச்சிக்கொண்டார்கள்.
புகைப்படத்தில் அவன் முகம் சுமாராகவே இருந்தது.
தலையாட்டினேன். தலை நீட்டினேன்.
தாலி கட்டிய உடனேயே தாலி கட்டியவன் சுயரூபம் தெரிந்துவிட்டது.
அவன் வீட்டிற்குக் காரில் செல்லும்போதே நடு வழியில் காரை நிறுத்தினான்.
சுகுமார், இந்தா பாரு . . . இனிமே இவ சம்பாதிக்கறதுல ஒரு சல்லிக்காசு ஒங்க வீட்டுக்குக் கொடுக்க முடியாது. இவ சம்பாதிக்கறதுல ஏதாச்சும் கெடைக்கும்னு நெனப்பிருந்தா அந்த நெனப்ப இப்பவே விட்டுப்புடணும். இல்லன்னா இதோ இதே கார்ல அவள திருப்பிக் கூட்டிட்டுப் போயிடு’ - தாட்சண்யமின்றிச் சொன்னான் அவன்.
அண்ணனுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை. எனக்கும்தான்!
அண்ணன் மௌனம் அவனுக்குச் சாதகமானது.
அன்றோடு என் பிறந்த வீட்டுத் தொடர்பு அறுந்து போனது.
கல்யாணமாயிட்டா வாழ்வோ சாவோ அது வெளியில தெரியக்கூடாது. தெரியறமாதிரி நடந்துகிட்டா அவ நல்ல பொண்ணு இல்லஎன்று கட்டுதிட்டத்தில் வாழ்ந்த தாயினால் வளர்க்கப்பட்ட நான் - காலம்காலமாகப் பெண்குலத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட வலையில் கட்டுண்டு கிடந்த நான் - அதன் இறுகிக்கிடந்த முடிச்சுகளைத் தளர்த்தக்கூட எந்தவித யோசனையும் செய்யவில்லை.
முதல்மாதச் சம்பளத்தை அப்படியே கொண்டுபோய் அவனிடம் கொடுத்தேன்.
சம்பள ரசீதை எடுத்துப் பார்த்தான். சம்பளப் பணத்தை எண்ணிப் பார்த்தான்.
அம்பது ரூபா கொறயுதே?’
ஆபிஸ்ல பிடிச்சுக்கிட்டாங்க’.
ஆபிஸ்ல பிடிக்கறதுதான் இதுல போட்டிருக்கே?’
அவுட்சைடு ரெகவரி சம்பள ரசீதுல போட மாட்டாங்க.’
அது என்ன எழவு? நான் படிக்காதவன்னு என்னையே ஏமாத்தறயா? உன் அம்மாவுக்குப் பணத்தைக் கொடுத்திட்டு இங்கவந்து நாடகம் ஆடறியா?’
அவுட்சைடு ரெகவரி பற்றி அவனுக்கு என்னால் விளக்க முடியவில்லை. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடாது என்பார்கள். அந்த மூர்க்கனுக்கு என்னால் எப்படி விளக்க முடியும்?
அவன் மூர்க்கன் என்றுதான் முதலில் நினைத்தேன்.
பிறகுதான் தெரிந்தது அவன் காமாந்தகன் என்று - அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதென்று.
என்னை மணந்துகொண்டபின் ஏற்பட்ட தொடர்பா? முன்னாலேயே இருந்ததா? ஆராய்ச்சி செய்யக் கூடத் தெரியாத அப்பாவியாக இருந்தேன்.
அந்தப் பெண் இப்போது ஏன் குறுக்கே வந்தாள்?
நான் யாரை நொந்து கொள்வேன்?
அப்பாவியாக என்னை வளர்த்துவிட்ட என் அன்னையையா?
தன் சுமையை இறக்கிவைத்தால்போதும் என்று அவசரப்பட்டுவிட்ட என் அண்ணனையா?
என்னை எதற்காக மணந்துகொண்டோம் என்று தெரியாமல் தாலிகட்டிய கணவனையா?
இன்னொரு பெண்ணுக்குத் துன்பம் இழைக்கலாமா என்று எண்ணிப் பார்க்காத அந்தக் கல்நெஞ்சக்காரியையா?
திருமணத்திற்கு முன்னதான தொடர்பு என்றால் திருமணம் நடக்காமல் தடுத்து அவனை அவள் மணந்து கொண்டிருக்க வேண்டும்.
அத் தொடர்பு பின்னால் ஏற்பட்டது என்றால் மணமானவனை விட்டு நீங்கி இருக்கவேண்டும்.
என்னிடத்தில் என்ன இல்லை?
கண்ணாடி முன் நின்றேன்.
சிவப்பாக இருந்தேன். வட்ட முகம். அழகாகவே இருந்தேன். நான் அழகு என்பதை நான் மட்டும் சொல்லவில்லை. என் வகுப்புத் தோழிகள் சொல்லி இருக்கிறார்கள். அக்கம்பக்கத்தினர் சொல்லியிருக்கிறார்கள். சொந்தக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கல்லூரியில் படித்தும்கூட எனக்கு ஆண் நண்பர்கள் யாரும் இல்லையென்று அக்கம்பக்கத்தினர் சிலாகித்துப் பேசுவார்கள்.
அடக்கம் . . . ? என்னை அம்மா அடக்கி அடக்கி வளர்த்தார்கள். என் சந்தோஷங்களைக்கூட நான் அடக்கமாகத்தான் அனுபவிப்பது வழக்கம். அதிர்ந்துகூட பேச மாட்டேன்.
என் கணவன் வீட்டுச் சொந்தங்கள் அனைவருக்கும் என்னைப் பிடித்துப்போய்விட்டது. அவனுக்குத் தவிர . . .
எனக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்தான்.
நான் அடங்காதவள் என்றான்.
படித்த திமிர் என்றான்.
நான் யார் யாருடனோ தொடர்பு வைத்திருக்கிறேன் என்றான்.
எதற்குமே எனக்குப் பொருள் விளங்கவில்லை.
என் அரசாங்க உத்யோகமும் கைநிறைய வாங்கும் சம்பளமும்கூட அவன் என்னை விவாகரத்து செய்வதைத் தடுக்கவில்லை.
என்னை விவாகரத்து செய்யவில்லை என்றால் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைவியாகத் தன்னை அவன் திருமணம் செய்துகொள்ள இயலாது என்பதை அவள் வற்புறுத்தி இருப்பாள் போலும்.
எத்தனையோ பேர் எனக்காக, எனக்குத் தெரியாமலேயே அவனிடம் வாதிட்டார்கள்.
விவாகரத்து தராமல் அவனோடு என்னை வாழவைக்க வேண்டும் என்று வக்கீலும் நீதிபதியும்கூட ஆசைப்பட்டார்கள். முயற்சியில் தோற்றுப்போனார்கள்.
கடைசியில் அவனிடமிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமானால் விவாகரத்து தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்து அவர்களே விவாகரத்து வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.
ஒன்றரை வருடத்தில் என் திருமண வாழ்க்கை பூத்துப் பிஞ்சாகி வெம்பி வீழ்ந்துவிட்டது.
அண்ணன் திருமணம் செய்துகொண்டு தனியே போய்விட்டான்.
சிறகடித்து வெளியுலகம் காணப் பறந்த குஞ்சு அம்மாவின் கூட்டிற்கே திரும்பிவிட்டது.
எங்கே தவறு? என்ன தவறு? யாரிடம் தவறு? என்று யோசித்து யோசித்தே விடைகாண முடியாமல் தவித்தேன்.
மனநோய் முற்றுவதற்குள் என்னை நானே தேற்றிக் கொண்டு வாழப் பழகிவிட்டேன்.
என்னை நிர்க்கதியாக்கிவிட்ட அவனைச் சபிக்கக் கூட எனக்குத் தெரியவில்லை.
இவனுங்கல்லாம் இங்கவந்து நம்ம தாலிய அறுக்கறானுவ . . .’ - இன்னும் குமுறிக்கொண்டிருந்தார் பரந்தாமன் சார்.
என் கழுத்துச் செயினைத் தொட்டுப் பார்த்தேன். எல்லோரும் அது தாலிச்சரடு என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் அதில் இப்போது தாலி என்று எதுவும் இல்லை. அவன் கட்டிய தாலியை நானும் பல ஆண்டுகள் சுமந்துகொண்டிருந்தேன். ஏதோ ஒரு தருணத்தில் ஒரு ஞானோதயம் தோன்றியது. அவனையே என் மனத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டபிறகு அவன் கட்டிய தாலி மட்டும் ஏன் சுமையாக?
அவனோடு ஒட்ட முயற்சித்தும் ஒட்டாமல்போன ஒன்றரை வருட வாழ்க்கையில் அவன் முகம்கூட என் மனத்தில் ஆழப் பதியவில்லை. சிற்சில நிகழ்ச்சிகள் தவிர வேறெதுவும் என் மனத்தில் பிம்பங்களாக்கப்படவில்லை.
இப்போது அவன் பெயர்கூட எனக்கு மறந்து விட்டது.
அவன் உருவம்கூட மறந்துவிட்டது.
இன்று வந்தவனை நான் நன்றாகத்தான் பார்த்தேன். இருந்தாலும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. உள்ளூரிலேயே இருந்தால்கூட எத்தனையோ பேரை நாம் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அப்படித்தான் அவனும் ஆகிப்போனான். உள்ளூரில் அவன் இருந்தும்கூட அவனை உண்மையிலேயே என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
அவன் நாளை என்னிடமே வந்தால்கூட அவனை என்னால் அடையாளம் காண இயலுமா என்பது சந்தேகமே!


நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி,  ஆசைமுகம் மறந்துபோச்சே,  காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2009,  1-10.


No comments:

Post a Comment