மனைத்தக்க மாண்புடையாள்
நில்லென்றால் கோட்டினிலே நிற்றல் வேண்டும்
நிறுத்தென்றால் பேசுவதை நிறுத்தல் வேண்டும்!
மெல்லெனவே அழைத்தாலும் விரைந்து ஓடி
வேண்டுவதைக் குறிப்புணர்ந்து செய்தல் வேண்டும்!
முல்லைப்பூ வாங்கிவரின் தேவை தன்னை
முறையாகச் சேவகியாய் ஆற்றல் வேண்டும்!
மல்லுக்கு நிற்காமல் கணவன் வார்த்தை
மனமார ஏற்பவளே மனைவி என்பீர்!
வல்லவனோ? அல்லவனோ? எவ்வா றேனும்
வனிதையவள் இல்லறத்தை நடத்தல் வேண்டும்!
தொல்லைதரு மதுப்பழக்கம் உண்டென் றாலும்
தோகையவள் நாற்றத்தை மகிழ்தல் வேண்டும்!
துல்லியமாய்ச் சுவையுணவு ஆக்கல் வேண்டும்
தூக்கியவன் எறிந்தாலும் பொறுத்தல் வேண்டும்!
பல்லோர்முன் அடியுதையை ஏற்றல் வேண்டும்
பாங்கான மனைவியவள் பண்பென் பீரே!
செல்லாத காசைப்போல் மனையாள் தன்னை
எள்ளிடுவார் தம்சுற்றம் உற்றார் முன்னே!
புல்லுதற்குப் பலபெண்டிர் தேடிப் போவார்
புண்பட்ட தன்மனையாள் கண்ணீர் காவார்!
பொன்றுகின்ற காலத்தில் போற்றும் சொற்கள்
நல்லாளை மகிழ்வுறுத்த வல்ல தாமோ?
நாணிலையோ ஆடவரே! திருந்தப் பாரீர்!
No comments:
Post a Comment