Monday 22 August 2022

பெண்மை வாழ்கென்று போற்றுவோமடா

 

பெண்மை வாழ்கென்று போற்றுவோமடா

- கவிஞர் அவ்வை நிர்மலா

தாயெனச் சொல்லித் தலையால் வணங்கித்

தயையுடன் பாடுகிறார் - அவர்

பேயெனச் சொல்லி மனைவியைத் தூற்றிப்

பிழைகளைத் தேடுகிறார்!

 

தேய்ந்திடும் சந்தனம் என்றே புகழ்ந்து

திசைதொறும் மீட்டுகிறார் - அவர்

வாய்க்க மணக்கொடை வேண்டும் எனவே

வம்புகள் பூட்டுகிறார்!

 

பாய்தனில் என்றும் மகிழ்வை யளித்திடும்

பாங்கைப் புகழுகிறார் - அவர்

வேய்மகள் தேடி விலையும் அளித்துமே

வெப்புநோய் வாங்குகிறார்!

 

தோய்வுடன் சேயை வளர்ப்பவள் என்றே

தோரணம் நாட்டுகிறார் - அவர்

வாய்தனை மூடா வனிதையர் என்றே

வசையொடு வாட்டுகிறார்!

 

நோய்தனில் வீழ்ந்தால் செவிலியாம் என்றே

நெகிழ்ந்து பரவுகிறார் - அவள்

மாய்ந்திடின் வேறொரு மங்கையை அன்றே

மணக்க விரையுகிறார்!

 

ஆய்ந்திடில் அன்பில் நிகரிலை என்றே

அரங்கினில் போற்றுகிறார் - அவர்

ஓய்வும் தராமல் பணிகள் சுமத்தியே

ஓய்வின்றித் தூற்றுகிறார்!!

No comments:

Post a Comment