Monday 22 August 2022

யுத்தச் சாம்பல்

 

யுத்தச் சாம்பல்

- கவிஞர் அவ்வை நிர்மலா

நம்வீட்டுக் குப்பைதனைப் பெருக்கிக் கூட்டி

நகர்த்திடுவோம் அடுத்தவரின் வீட்டு வாசல்!

வம்புக்கே கோழிகளை விரட்டி விட்டு

வலிந்தேநாம் செய்கின்றோம் தெருவில் ஏசல்!

பம்புகின்ற அறியாமை தன்னால் வந்த

பக்குவமில் செயலென்போம் இந்தப் பூசல்!

அம்புவியில் நாடுகளும் அறிவே இன்றி

அடுகின்றார் இல்லையந்தோ சற்றும் கூசல்!!

 

கும்பிட்டுக் குழியினிலே பதுங்கித் தங்கிக்

குழந்தையுடன் பதைபதைப்பார் பசியால் நொந்து!

கொம்பில்லாக் கொடிபோலே அலைந்து எல்லைக்

கோட்டினிலே சுடப்பட்டு வீழ்வார் வெந்து!

செம்மையிலா உளத்தாலே அணுவின் குண்டு

சேர்ந்தெடுத்தால் அழியாதோ உலகப் பந்து!

தம்மினமும் தம்நாடும் அழிதல் கண்டு

தக்கதொரு பேச்செடுக்க ருசியா. . . முந்து!!

 

சும்மாவே பார்த்திருக்கும் நாட்டார் எல்லாம்

சுமப்பாரே மாபாவம் சுகமோ மௌனம்!

இம்மென்னும் முன்னாலே ஈசல் போன்று

இல்லாமல் செய்வதுவோ அறிவின் வண்ணம்?

வெம்புகின்ற அகதிகளின் அலறல் கேட்டும்

வெட்காரோ? வீடாரோ? அவரின் எண்ணம்

தெம்புளது எனவெண்ணி யுத்தம் செய்யின்

தேம்பிடுவார் சாம்பலிலே, அழிவும் திண்ணம்!!

No comments:

Post a Comment