Monday 16 February 2015

எழுத்தாளர் ஔவை நிர்மலாவின் ஆசைமுகம் மறந்து போச்சே - பெண்ணியப் பார்வை


எழுத்தாளர் ஔவை நிர்மலாவின்

ஆசைமுகம் மறந்து போச்சே 

பெண்ணியப் பார்வை


திருமதி ச. கீதா
இணைப்பேராசிரியர்,
ஆங்கிலத்துறை
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
காரைக்கால் - 609 602.

           பெண்ணியச் சிந்தனைகள் சமகால இலக்கிய மரபுகளாகவும் திறனாய்வுக் கோட்பாடுகளாகவும் சமூக இயக்கங்களாகவும் விரிந்து பல பரிணாமங்களைக் கொண்டுள்ளன. அவை சிதறலான கருத்தாக்கங்களாக இல்லாமல் நெறிமுறைப்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பாக (academically canonized) நிறுவப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் சமூகவியல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் போன்ற எந்தக் கட்டமைப்பிற்குள்ளும் பெண்ணியம் பற்றிய கருத்துத் தொகுப்புகளைப் பதிவு செய்யவேண்டியது மிகவும் அவசியமான ஆய்வறிதல் முறைமையாகும். அதனால் எல்லா நிலைப்பாடுகளிலும் உலகளாவிய சிந்தனைத் தளங்களிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் உள்ளுர்க் குழுமம் வரையிலும் பரவிவரும் பெண்ணியம் பற்றிய சொல்லாடல் தவிர்க்கமுடியாத தர்க்கவிவாதமாக மாறிவருவது கண்கூடு.

          இத்தகைய சூழலில் எந்தவொரு இலக்கியப் படைப்பையோ அல்லது சமூகக் கோட்பாட்டையோ திறனாய்வு செய்யும்பொழுது பெண்ணியம் சார்ந்த ஆய்வுக் கோணங்கள் அவசியமாகின்றன.குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமெனில், இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள எழுத்தாளர் ஒளவை நிர்மலாவின் ஆசைமுகம் மறந்துபோச்சே (காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2009) என்ற சிறுகதைத் தொகுப்பு, பெண்ணியக் களமாக ஏற்புடையதாகிறது. மேலும் 'பெண் எழுத்துகள்' (Women’s Writings) என்ற நவீன ஆய்வுக்களத்தின் பகுப்புகளில் ஒன்றாக அமைக்கத்தக்கவகையில் நடையாலும் மற்றும் அதன் பொருட்பதிவாலும் பெண்ணியக் கோட்பாடுகளின் இலக்கியப் பதிவாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.

          பெண்ணியம் பற்றிய பொதுவான விவாதங்களில் 'பெண் எழுத்துகள்' என்ற காலவரிசைத் தரவுகள் பெண்ணியச் சிந்தனைகளின் துவக்கமாகும் என்பர். இவ்வகையில் வெர்ஜினியா வுல்ஃ;ப் என்ற பெண் இலக்கியவாதியின் A Room of One’s Own என்ற திறனாய்வு நூல் மிக அதிக அளவில் மேற்கோள் காட்டப்பெறுகிறது. பெண்ணியச் சிந்தனையி;ன் இலக்கிய முன்னோடியாக அமைந்துள்ள இம் மதிப்பீட்டு மாதிரியின்படி பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பெண் பற்றிய புதுமொழிகளையும் பெண்களின் சுயபுரிதல்களுக்கான எண்ணவோட்டங்களையும் பெண் விடுதலைக்கான சமுதாயப் போராட்டங்களையும் பெண் அல்லது பெண்மை பற்றிய புதிய அடையாளங்களாக முன்வைக்கின்றன. இக் கருத்தின் அடியொற்றியே 'பெண் எழுத்துகள்' என்னும் பகுப்பின்கீழ் உலகின் பல இலக்கியங்களில் மற்றும் மொழி சார்ந்த கலாச்சாரப் படைப்புகளில் சிறுகதைகளாக, புதினங்களாக, நாடகங்களாக உருமாறும் உத்திகளை பெண்ணியச் சிந்தனைகளின் காலவரிசைப் பட்டியலாகக் காணமுடிகிறது.

          அதன்படியே தமிழ் இலக்கியத்திலும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பெண்ணியத் தரவுகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோதைநாயகி, ராஜம்கிருஷ்ணன், லஷ்மி போன்ற பிரபல பெண் எழுத்தாளர்கள் தொடங்கி அம்பை, பாமா போன்றவர்களின் நவீனத்துவப் படைப்புகள் மூலம் தொடர்ந்துவரும் பெண் பற்றிய இலக்கியப் பதிவுகளில் ஆணாதிக்க மரபுகளைச் சார்ந்தும் உடைத்தும் பின்னர் புதுமரபுகளைத் துவக்கியும் ஒரு பன்முகப் பெண்ணியம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

   சுருங்கச் சொல்லவேண்டுமெனில் தமிழில் பெண்ணியம் என்ற நவீனத்துவச் சிந்தனை யதார்த்த இலக்கிய வடிவில் உருவாக்கப்பட்டு நடைமுறைச் சமூகத்தளங்களிலும் அன்றாட வாழ் நடப்புகளிலும் காணப்பெறும் பெண்களின் நிலையெனக் கையாளப்பெறுகிறது.

        இந்த யதார்த்த பின்புலத்தின் பெண்ணியம்தான் காலக்கணிப்பு முறையில் தொகுக்கப்பட்ட 'பெண் எழுத்துகள்' - Women’s Writings (chronological) என்ற பகுப்பில் ஆசைமுகம் மறந்துபோச்சே என்ற இந்நூலையும் இணைக்கிறது.

      இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள எல்லாச் சிறுகதைகளும் பெண்களைப் பற்றிய யதார்த்தப் பதிவுகளாக வடிவம் கொள்வது இத் தொகுப்பின் நிறுவுகையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

          பாத்திரப் படைப்புகளிலும் அதன் எண்ணவோட்டங்களிலும் மிகையும் குறைவுமில்லாத இயல்பான நடைமுறை வாழ்வியலோடு ஒட்டிய கதைச்சூழல்கள் அமைக்கப்பட்டு ஒரு யதார்த்த பிம்ப வார்ப்பு உருவாகிறது.

         இக்கதைகளில் உள்ள பெண்பாத்திரங்கள் பலரும் குறிப்பாக, ஆசை முகம் மறந்து போச்சேயின் சாந்தி, மறதியின் வேதா, பாவமன்னிப்பின் கவிதா, கானல்வரியின் ஜென்னி போன்றவர்கள் கதை மாந்தர்களின் மாதிரிகளாக இல்லாமல் அக்கம்பக்கத்துக் குடும்பங்களைச் சேர்ந்த அணிமைத் தன்மையைக் கொண்டவர்களாகப் படைக்கப்பட்டுள்ள யதார்த்தச் செறிவினை இக்கதைகளுக்குக் கொடுக்கிறது. அவர்களின் சிறுசிறு அசைவுகளும் நடையுடை பாவனைகளும்கூட நடைமுறை யதார்த்தத்தின் பிரதிபலிப்புகளாகக் காணப்படுவது இக்கதைகளுக்கே உரித்தான நடைமுறைச் சித்திரிப்புப் பரிமாணங்களைக் கொடுக்கின்றன. மேலும் இக்கதைகளில் உள்ள பெண்களின் சுய சிந்தனைகள், அனுபவங்கள் பற்றிச் சொல்லப்படும்பொழுது உள்உணர்வுச் சிதைவுகள், குறியீடுகள், படிமங்கள் போன்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு நேரிடையான இயல்பான நடையியலில் கையாளப்படுவது இக்கதைகளின் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. சாந்தி, ஜென்னி போன்ற படித்த பெண்கள் மட்டுமல்லாமல் 'பணம் என்னடா பணம் பணம'; என்ற கதையின் பாக்கியம் என்ற பெண்ணும்கூட சுயசிந்தனையின் விடுதலையுணர்வை அறிந்த பெண்ணாகக் காட்டப்படுவது பெண்ணியத்தின் தாக்கத்தை யதார்த்தக் களனாக ஆசிரியர் கொண்டுள்ளமையைத் தெளிவுறச் சுட்டுகிறது.

     இதுமாதிரியான யதார்த்தச் சித்திரிப்புகள் பொதுவாகவே 'பெண் எழுத்துகள்' மரபில்  அதிய அளவில் கையாளப்படுதல் ஓர் பெண்ணியக் கோட்பாடாகவே கருதப்பட்டுவருகிறது.

          பெண்ணியச் சிந்தனை பற்றிய வரலாற்றுப் பதிவுகளில் அதன் துவக்க காலத்தை வரையறுக்கும்பொழுது பெண்ணியமும் நடைமுறை வாழ்வியல் சித்திரிப்புமுறையும் ஒன்றோடு ஒன்று இயைந்த சமூகவியலாகவே பார்க்கப்பட்டது. இத்தகைய யதார்த்த சித்திரிப்பின் வேறு வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு அந்தந்த சமூக கலாச்சாரத்தின் விடை வீச்சுகளின் நெளிவுசுளிவுகளுக்கேற்ப பெண்களின் கதை வடிவங்கள் பெண்ணிய வரைவுகளாகப் பல்கிப் பெருகின.

         இதனில் பெண்ணின் விடுதலைக்கான சமூகப் போராட்டங்கள் பற்றியது என்றாலும் பெண் தன்னைப் பற்றி உணர்வதற்கான சுய தேடல்களின் இலக்கிய வெளிப்பாடாக இருந்தாலும் பெண்ணியம் என்ற புதிய சிந்தனை மரபு பெண்ணைச் சுற்றியுள்ள யதார்த்த சூழல்களில்தான் உருவானது என்றால் அது மிகையாகாது. அதன் பின்விளைவாக பெண்ணின் விடுதலை என்ற போராட்டக்களமாக பெண்ணியம் பேசப்பட்டாலும் ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் சமனில்லாத நிலைப்பாடு என்ற பெண்ணியக் கருத்தாக்கமாகக் கொள்ளப்பட்டாலும் அப்பெண்ணினுடைய சுய தேடல்கள் என்ற இலக்கிய வகையிலான பெண்ணியம் என்றாலும் யதார்த்தப் பின்னணிகளைவிட்டு அப்பெண்ணியக் கோட்பாடுகள் விரைந்து பயணிக்க முடிந்ததில்லை.

   இதுமாதிரியான பரஸ்பர நிலைமாற்றம் பெற்ற பெண்ணியச் சிந்தனைகளும் யதார்த்தச் சித்திரிப்புகளும் இக்கதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் ஊடாடிப் பெண்ணிய அணுகுமுறையைத் தவிர்க்கமுடியாத தர்க்கப்படிவங்களாக மாற்றித் தருகின்றன.

      இத்தகைய நடைமுறையியல் சார்ந்த யதார்த்தப் பெண்ணியம் இத் தொகுப்பின் கதைகளில் விஞ்சியுள்ளது. குறிப்பாக, முதல் எட்டுச் சிறுகதைகளும் பெண் பற்றிய புதினப் பார்வையில் அமைந்துள்ளன. கதைகளின் வடிவமைப்பிலும் உள்ளுறைக் கட்டமைப்பிலும் உள்ள பெண் பற்றிய நவீனக் கருத்தாக்கம் பெண்ணிய மொழியை உருவாக்கிப் பெண் ஆளுமையைப் பற்றிய செய்தியை நுண்ணயமாக அமைத்துள்ளது. இதற்கேற்ற வகையில் ஒவ்வொரு கதையின் நடையிலும் மிகைச் சொல்லாடல் இல்லாத ஆனால் குறிப்பால் சுட்டுவதாக அமைந்த உரையாடல் உத்தி பெண்ணின் பேசப்படாத மொழியாக பெண்ணியத்தை அடையாளம் காட்டுகிறது.

     சிறுகதையின் அடிப்படை இலக்கணத்திற்கேற்றவாறு ஒவ்வொரு கதையும் சொல்லியதைவிட சொல்லாமல்விட்ட நயமே பொருளும் ஒரு விரிவான வெளியைத் தோற்றுவிக்கிறது. இந்தக் கதைவெளியில் கதைகளில் உலவும் பெண்பாத்திரங்கள் தத்தம் அநுபவங்களைப் பெண்பற்றிய புதிதான புரிதல்களுடன் தோற்றுவிக்கும் பெண் வெளியாக மாற்றிக் கொள்வது இக்கதைகளின் சிறப்பம்சம். ஒரு பெண் யதார்த்தமான வாழ்நிகழ்வுகளில் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்வதற்கும் உணர்த்துவதற்கும் பிரத்யேகமாக இந்த வெளியை உருவாக்கிக் கொள்வதாக அமைகிறது. இச் சிறுகதைகளின் கதைக்களன் பெண் தனக்கென்று உருவாக்கிக் கொள்ளும் இந்த வெளி பற்றித்தான் பெண்ணியத் தரவுகள் பலதரப்பிலிருந்தம் பல தளங்களிலிருந்தும் முன்வைக்கின்றன. அந்த முறையில் இச் சிறுகதைகளைப் படிக்கும்போது பெண்ணியப் பார்வை என்ற திறனாய்வுக்கோட்பாடு மூலம் இக்கதைகளில் பெண்ணியச் சிந்தனை வலுவான காரணியாகவும் கருவியாகவும் செயல்பட்டிருப்பதைத் தெளிவுற தெரிந்துகொள்ள முடிகிறது.

          அதே சமயம் பெண்ணியக் கருத்தாக்கத்தை மையப்புள்ளியாக வைத்து இந்தச் சிறுகதைகள் பின்னப்பட்டிருந்தாலும் அவை எந்த இடத்திலும் உணர்வு மிகையாகவோ வெளிப்படையான சொல்லாடலாகவோ பயன்படுத்தப் பெறவில்லை.

           பெண்ணியம் பற்றிப் பேசுபவர்களின் அல்லது எழுதுபவர்களின் உணர்வு ரீதியான தன்மை இக்கதைகளில் காணமுடியாத பெண் பற்றிய புதிய பார்வையை இயல்பாக முன்மொழிகிறது எனலாம். இச் சிறுகதைகளில் பெண்ணுக்கெதிரான எதிர்மறைச்சூழல்களில் தங்களை இழந்துவிடாமல் இயல்பான எதிர்ப்போடும் மதர்ப்போடும் முடிவுகளை எடுக்கும் பெண்களாகக் காட்டப்படும் இப்பெண் கதாபாத்திரங்கள் இந்நூலுக்குப் புதிய பெண்ணிய உருவளவைக் கொடுக்கின்றனர்.

      பெண்ணியம் பேசப்படும் பொதுவான விவாதங்களில் பெண்ணியம் இலக்கியச் சொற்றொடராக, சமூகச் சொல்லாடலாக, சட்டத்தின் பிரிவுகளாக, உலக நாடுகளின் தீர்மானங்களாக ஒருபுறம் பேசப்பட்டாலும் மறுபுறம் பெண்ணைப் பற்றிப் பேசுவதெல்லாம் பெண்ணியம்தான் என்ற பாமரத்தனமான தர்க்கமும் நிலவுகிறது. இந்த இரண்டு உச்ச அளவிற்கும் செல்லவிரும்பாத ஒரு பெண்ணியப் பார்வையை இந்நூலில் உள்ள கதைகள் நமக்குச் சுட்டுகி;ன்றன. மேடையில் ஆரவாரமாகக் காரசாரமாக விவாதிக்கப்டும் பெண்கள் பற்றிய செய்திகளாக இந்தக் கதைகள் பெண்ணியம் பேசவில்லை. பெண்ணைத் தெய்வமாக அல்லது பேயாகப் பாhர்த்து வேண்டப்படாதவளாக, தீண்டப்படாதவளாகக் காட்டும் பெண்ணின் பெருமைகளைப் பற்றிப் பேசி நம்மை இந்தக் கதைகள் ஏமாற்றவில்லை. பெண்ணின் மனக்குமுறல், உளைச்சல் என்ற மனநிலைச் சிக்கல்களும் இக்கதைகளில் தவிர்க்கப்பட்டுள்ளன.

           மாறாக, ஒரு பெண்ணை தனித்தன்மையான அறிவார்த்தமாகச் சிந்திக்கத் தெரிந்த - தன்னைப் பற்றித் தன் பெண்தன்மையின் தனித்துவத்தைப் பற்றிய யதார்த்த நுணுக்கங்களுடன் புரிந்துகொண்ட பெண்களைச் சித்திரித்துக் காட்டுவது இக்கதைத் தொகுப்பின் சிறப்பம்சம்.

    அன்றாட வாழ்வில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? எப்படித் தேடுகிறார்கள்;? முகமற்ற பிம்பங்கள் சுழலும் வாழ்க்கைச் சூழலில் தன்னுடைய முகத்தைத் தேடும் அடையாளத் தேடலில் எப்படிக் களைத்துப் போகிறார்கள்? என்பதை ஒவ்வொரு கதையும் யதார்த்த வடிவில் காட்டுகின்றன.

   குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் முதற்கதையான ஆசைமுகம் மறந்துபோச்சே, எட்டாவது கதையான கானல்வரி என்ற இவ்விரண்டு கதைகளிலும் உள்ள பெண் பாத்திரங்கள் தம் பெண் வெளிகளை அடையாளங்கொண்டு தக்கவைத்துக் கொள்கிறார்கள். திருமண பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்போதும் ஆனாதிக்கமிக்க கணவனால் திருமண முறிவு ஏற்படும்போதும் எந்தக் கழிவிரக்கமோ அல்லது ஏமாற்றவுணர்வோ இன்றி அறிவின் முதிர்ச்சியால் சூழலைக் கையாளும் திறன் படைத்தவர்களாகச் சாந்தியும் ஜென்னியும் காட்டப்படுவது நவீனப் பெண்ணியச் சிந்தனையின் முழு வெளிப்பாடு என்று கொள்ளலாம்.

    பெண் என்பவள் தன்னை இல்லத்தரசியாக, தாயாக, தாதியாக மாற்றிக்கொண்டு தியாகச் சுடராகும்போதுதான் பெண்மைக்கு முழுப்பலனும் கிடைக்கும் என்ற போலிப் பாசாங்குகளை இனங்கண்டு உதறிவிடக்கூடிய மனமாற்றப் பெண்ணியச் சிந்தனையாக இக்கதைகளில் வெளிப்படக் காணலாம்.

          இத்தொகுப்பில் வேறு சில கதைகளில் நடுத்தர வர்க்கத்தின் கலாச்சார வேடங்களில் சிக்கி வாழ்வின் சுமைகளுடன் குடும்ப உறவுகளின் கெடுபிடியில் மாட்டித் தவிக்கும் பெண்கள் தங்களுடைய படிப்பையோ வேலையையோ தங்களுடைய தனித்திறமைகளாகக் காட்ட முடியாமல் பேதைமையின் நிழலில் மறைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்பட்டாலும் புதிய தேடல்களில் தங்களின் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளும் இயல்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முற்றும் படித்த பெண்களாக இருந்த போதிலும் மென் உணர்வுகள்கொண்டு குடும்பம் குடும்பம் சார்ந்த உறவுகள், அவற்றால் ஏற்படும் பிணக்குகள் பிணைப்புகள் போன்ற கட்டாயங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலையையும் மறதி போன்ற கதைகள் பெண்ணியத்திற்கு எதிரான சவாலாக முன்வைக்கின்றன. ஆணின் ஆதிக்கத்தி;ற்கும் மூட நம்பிக்கைகளுக்கும் இடம்தரும் வகையில் பெண்களே பெண்களை அதிகாரம் செய்யும் மடமையையும் பெண்ணுக்கெதிரான சவாலாக 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற கதை எள்ளல் தொனியில் காட்டுகிறது.

      இது மாதிரியான பல தளங்களில் கோணங்களில் பெண்ணியக் கோட்பாட்டின்படி ஆய்வு செய்யத்தக்க வகையில் இருந்தாலும் பெண்ணியத் தீர்ப்பாக இல்லாமல் பெண்ணியத்தின் இலக்கியப் பதிப்பாக நயமிக்கதொரு கதைத் தொகுப்பாக இந்நூல் அமையப் பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரிய முயற்சியாகும்.

            இறுதியாக, அறுதியிட்டுச் சொல்வதென்றால் இச் சிறுகதைத் தொகுப்பு தன் வடிவத்தாலும் உட்பொருளினாலும் பெண்ணியச் சிந்தனையின் இலக்கியத் தரவுகளாக உருமாற்றம் கொள்ளும் வகையில், 'பெண் எழுத்துகள்' என்ற பெண்ணியப் படைப்புகளின் மரபோடு இணக்கம் பெறுகின்றது. இதன்பொருட்டு பெண்ணிய இலக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கின்ற பிரபல பெண் எழுத்தாளர்களின் படைப்புகளிலும் உள்ள பெண்ணியம் பற்றிய இலக்கியப் படிவங்களுக்கு நிகராக ஒளவை நிர்மலாவின் ஆசை முகம் மறந்து போச்சே என்ற இக்கதைத் தொகுப்பும் தன்னுடைய பிரத்யேக நடையில் பெண்ணியப் பார்வைக்கேற்ற இலக்கிய வரைவுகளை முன் வைக்கிறது என்று சொன்னால் அது மிகையன்று.
***

No comments:

Post a Comment