Thursday 31 March 2022

Covid Poem கொல்லும் கொரோனாவை வெல்லும் மனிதஇனம்

 

கொல்லும் கொரோனாவை வெல்லும் மனிதஇனம்

                                                                               

 எத்தனையோ நோய்உலகில் வந்த துண்டு

என்றேனும் இதனைப்போல் கண்ட துண்டா?

அத்திக்குள் நுழைகின்ற பூச்சி போலே

அதம்செய்து நுழைகிறதே இந்த வைரஸ்

பித்தரைப்போல் உலகினரும் மருட்சி கொள்ள

பிடரியிலே அமர்ந்தேதான் துரத்து தம்மா!

எத்தர்களால் உருவாகி வந்த தாமோ?

எவரிதனைக் கொண்டுவந்து பரப்பி விட்டார்?

 

அச்சத்தின் உச்சத்தில் உறைந்து நின்றோம்

அழிக்கவொண்ணா கிருமியினால் மருகி நின்றோம்!

இச்சைகளை முற்றிலுமாய்த் துறந்து நின்றோம்

இறுமாப்பு உடையோரும் அடங்கி நின்றார்!

பிச்சையெனக் கைகளையே ஏந்து கின்றோம்

பிறவியிலே புதுமையிதைக் காணு கின்றோம்!

மிச்சமுள காசுகளை எண்ணி எண்ணி

மிதக்கின்றார் கண்ணீரில் நாளை எண்ணி!

 

முகக்கவசம் போட்டேதான் இருக்க லானோம்

முகங்கொடுத்துப் பேசிடவும் அஞ்சு கின்றோம்!

நகக்கண்ணில் தொற்றுவரும் கார ணத்தால்

நாடுகிறோம்சானிடைசர்துய்மை காக்க!

சிகைவெட்டக் கடைகளுமே திறக்க வில்லை

சிறுதொழில்கள் ஒன்றேனும் தப்ப வில்லை!

பகைவந்தால் எதிர்நிற்கும் வீர ருண்டு

பரவுகின்ற கொரோனாமுன் நிற்பா ருண்டோ?

 

ஊர்விட்டு ஊர்வந்து வேலை செய்வார்

ஊரடங்கு நடைமுறையால் தவித்துப் போனார்!

ஆர்வந்து தம்துயரைத் தீர்ப்பா ரென்று

அங்கங்கே பிரிந்துநின்றார் சொந்த பந்தம்!

தேர்இழுத்துத் தெருவினிலே விட்ட தைப்போல்

தேம்புகிறார் உலகத்தில் பிரிந்தி ருப்போர்!

சேர்கின்ற நோக்கத்தில் நடந்து போனார்

செத்தாரே நடுவழியில் சோகம் அந்தோ!

 

பார்முற்றும் பலியாகும் உயிர்க ளாலே

படிப்பினையே இன்றேனும் பெறுதல் வேண்டும்!

பேர்பெற்ற வல்லரசே தவிக்கக் கண்டோம்

பின்னும்நாம் அசட்டையாய்த் திரிய லாமோ?

ஊர்சுற்றும்புள்ளிங்கோஉணர வேண்டும்

உற்றாரைத் தொடுவதையே தவிர்க்க வேண்டும்!

சீர்பெற்று மீண்டும்நம் பணிகள் செய்ய

சிந்தித்து நமைக்காக்கத் தனித்தி ருப்போம்!

No comments:

Post a Comment