Tuesday 21 January 2020

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 36


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 36
'கொழந்த அப்பாவ உரிச்சிகிட்டுப் பொறந்திருக்கு' அனைவரும் சொல்லிச் சொல்லிப் பூரித்தனர்.
'சுந்தரி செல்லம்! செல்லம்மா! குட்டிம்மா! டார்லிங்!' உருகினான் சந்திரன்.
மெல்லக் கண்களைத் திறந்துபார்த்தாள் சுந்தரி.
அவள் தலையை வருடிக் கொடுத்தான். முகத்தில் முத்தமழை. அவள் தியாகத்திற்கு அவன் கொடுத்த பரிசு.
செய்தி அறிந்தாள் தாட்சாயணி. அவளுக்கு உண்மை நிலவரம் நன்றாக விளங்கியது. அவளுடைய ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதன் புள்ளிகள் இனி உயர வாய்ப்பே இல்லை.
     சற்றே தெளிவடைந்தாள் சுந்தரி. 'இதோ பாருங்க! நீங்க ஏன் என்னக் காப்பத்தனீங்க? என்னக் காப்பாத்த முயற்சி பண்ணாதீங்கன்னு முதல்லயே நான் சொல்லலையா, அப்படி இருக்கும்போது ஏங்க என்னக் காப்பத்தனீங்க?'
அடுத்த கட்ட நடிப்பைத் தொடர்ந்தாள் சுந்தரி. குழந்தைக்குப் பால் கொடுக்கமாட்டேன் என்றாள்.
'இதோ பாருங்க! இந்தக் கொழந்த அக்காவுக்கு மட்டும்தான் சொந்தம். அதனால இந்தக் கொழந்தைக்கு என் பால கொடுக்கமாட்டேன். என் பால குடிச்சுட்டான்னா அதுக்கே பழக்கமாயிடுவான். அவனுக்கு இப்போதே புட்டிப்பால் கொடுத்துப் பழக்கிடுங்க. நான் இவன் பொறந்தப்பவே செத்திருக்கணும். ஆனா என்னக் காப்பாத்திட்டீங்க. நான் பண்ணின சத்தியம் என்னாவறது? என்னால எழுந்திருக்க முடியலையே? எழுந்திருக்க முடிஞ்சா இப்பவே எங்கயாச்சும் கண் காணாத எடத்துக்குப் போயிடுவேன். அக்கா வாழ்க்கையில தலையிடவே மாட்டேன்!' - புலம்பினாள்.
'பச்சை உடம்புக்காரி இப்படி அனத்தக் கூடாது' என்று அண்ணி கண்டித்தாள்.
தாய் உயிரோடு இருக்கும்போது தாய்ப்பால் இன்றிக் குழந்தை மறுக்கப்படுவது கொலைக்கு நிகரானது என்ற நிதர்சன உண்மை அவனுக்கு உணர்த்தப்பட்டது.
குழந்தைக்குப் பால் ஊட்டுமாறு வற்புறுத்தினான் சந்திரன். ஏதோ வேண்டா வெறுப்பாகத் தருவதுபோல் பால் கொடுத்தாள். 'பாருங்க ஒங்க கொழந்தய! எப்படிப் பால் குடிக்குது?' என்று இடையிடையே சொல்லவும் அவள் தவறவில்லை.
'இதோ பாருங்க! எல்லாம் நான் எழுந்து நடமாடற வரைதான். நான் டிஸ்சார்ஜ் ஆயிட்டேன்னா நான் ஏற்கெனவே வாக்குக் கொடுத்த மாதிரி என் தாலிய காளியாத்தா உண்டியல்ல போட்டுட்டு கிருஷ்ணா ராமான்னு கண்காணாத எடத்துக்குப் போயிடுவேன்'.
பதினைந்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.
தாட்சாயணி குழந்தை பெற்றுக்கொள்ளாத மலடியாதலால் அவளுக்குக் குழந்தையைச் சரியாகத் தூக்கத் தெரியாது, கழுத்தில் உரம் விழுந்துவிடும் என்றெல்லாம் அண்ணியும் சுந்தரியும் சந்திரனிடம் கூறி அக்குழந்தையைத் தாட்சாயணி தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர். அருகில் நெருங்கவோ, பார்க்கவோகூட தாட்சாயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவை எதுவும் சந்திரன் கண்களுக்கும் படவில்லை, அறிவுக்கும் எட்டவில்லை.
(தொடரும்)

1 comment:

  1. தங்கள் தளத்துக்கு முதல் வருகை. தொடர் அருமை. ஆனால் பெரும்பாலும் புரியவில்லை. இடையில் இருந்துவாசிப்பதால் தான். ஆனால் சில விஷயங்களை ஊகிக்க முடிகிறது. தொடருங்கள்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது முரண்கோடுகள் (புதினம்) – அத்தியாயம் 36 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete