Showing posts with label திறனாய்வு. Show all posts
Showing posts with label திறனாய்வு. Show all posts

Monday, 22 August 2022

இடைக்காட்டுச் சித்தர் பாடல்களில் தன்அனுபவ உத்தி SITTAR

 

இடைக்காட்டுச் சித்தர் பாடல்களில் தன்அனுபவ உத்தி


கிழவி சொல்லின் அவளறி கிளவி

தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது

என்று தொல்காப்பியர் (தொல். பொருள். ) தோழி, தலைவி ஆகியோர் கூற்று நிகழ்த்துவதான புனைவில் புலவர்கள் கவனம் செலுத்தவேண்டிய செய்தியொன்றை நுணுக்கமாகக் குறிப்பிடுகிறார். மக்கள் பேசுகின்ற சொற்களில் அவர்கள் பயிலுகின்ற பொருட்களும் நிகழ்வுகளுமே உவமைகளாக, பழமொழிகளாக, விடுகதைகளாகக் கருக்கொள்ள முடியும். ஒருவர் பார்த்த, பழகிய, அனுபவித்த செய்திகளையும் பொருட்களையுமே அவர்தம் உரையாடலில் உள்ளார்ந்த பொருட்புலப்பாட்டோடு தெளிவாக வெளிப்படுத்த இயலும் என்பது அனுபவத்தால் அறிந்த ஒன்றாகும். எனவே, படைப்பாளர்களும் தம் கண்ணால் கண்டவற்றையும் அனுபவத்தால் கண்டவற்றையுமே தம் படைப்புகளில் வெகுஇயல்பாக எடுத்தாள்கின்றனர் எனலாம். இதனை ஓர் உத்தியாக வரையறுக்கும்போது தன்அனுபவ உத்தி என்று வகைப்படுத்துவர் (ந. கிருட்டினமூர்த்தி, தமிழ்ச் சிறுகதை இலக்கிய உத்திகள் : கு. அழகிரிசாமி சிறுகதைகள் வழிச் சிறப்பாய்வு). அவ்வகையில் இடைக்காட்டுச் சித்தர் பாடல்களில் காணலாகும் தன் அனுபவ வெளிப்பாட்டை வெளிக்கொணர்வதாக இக் கட்டுரை அமைகிறது.

இடைக்காட்டுச் சித்தர் வரலாறு

15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இடைக்காடர் சிறுவயதிலிருந்து ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார் என்றும் வழக்கம்போல் மலைச்சாரலில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் நவசித்தருள் ஒருவர் பால்கேட்க, அவருக்குப் பால் முதலியவற்றைக் கொடுத்து உபசரித்தார் என்றும் அவ் உபசரிப்பால் மகிழ்ந்த அச்சித்தர் இடைக்காடருக்கு ஞான உபதேசம் செய்தார் என்றும் அதன் விளைவாகவே சகல சித்திகளும் அடைந்து இடைக்காட்டுச்சித்தரானார் என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் ஒருமுறை கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது கால்நடைகள் தீவனமின்றித்  துன்புற்றதாகவும் இடைக்காட்டுச் சித்தர் தம் சித்துக்களினால் தம் ஆடுமாடுகளைக் காப்பாற்றியதுடன், கிரகங்களையும் மாற்றியமைத்து மழை பொழியச் செய்து உயிரினங்களைக் காப்பாற்றினார் என்றும் கதை வழங்குகிறது (சித்தர் பாடல்கள், சென்னை : மணிவாசகர் பதிப்பகம், 1998, 239).

இடைக்காட்டுச் சித்தர் ஆடுமாடு மேய்த்தவர்; காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்தவர் என்பதான அவரைப் பற்றிய கதை உண்மையென்பதை, அவர் பாடல்களில் பயன்படுத்தப்பெற்றுள்ள விளி, கருப்பொருட்கள் வாயிலாக அறுதியிட்டுரைக்க முடிகிறது. தத்துவங்களை விரித்துரைக்கும்போதும் அவற்றில் கால்நடைகளும் கால்நடை மேய்ப்பவர்களும் காடுபடு பொருட்களும் இயல்பாக இடம்பெறுகின்றன.

கால்நடை மேய்ப்போர்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்களில் மாடுமேய்ப்போர் பாடல்மாந்தராவதைக் காணலாம்.

தாண்டவராயக் கோனார் கூற்று என்றும் நாராயணக் கோனார் கூற்று என்றும் பாடல்களை அமைத்துள்ளார் இடைக்காட்டுச் சித்தர்.

தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே

தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே

ஆனந்தக் கோனாரே - அருள்

ஆனந்தக் கோனாரே

என்று இவ்வாறு முன்னிலையில் மாடுமேய்க்கும் இனமான கோனார் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை விளித்துக் கூறுவதாக அமைத்திருக்கின்றார்.

எல்லா உலகமும் எல்லா உயிர்களும்

எல்லாப் பொருள்களும் எண்ணரிய

வல்லாளன் ஆதிபரம சிவனது

சொல்லால் ஆகுமே கோனாரே (1)

என்னும் பாடல் சமயவாதிகள் அறிந்துணரக்கூடிய ஆழ்ந்த தத்துவக் கருத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அதனை மாடுமேய்ப்பவர்களாகிய கோனாரிடம் உரைப்பதாக அமைத்திருத்தல் நோக்கத்தக்கது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தனக்குச் சித்தர் ஒருவர் ஞானோபதேசம் செய்ததை மனத்தில்கொண்டு இத்தகைய பாடல்முறைமையை இடைக்காட்டுச் சித்தர் கடைப்பிடித்தார் எனலாம்.

கால்நடைகள் பற்றிய குறிப்புகள்


மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத

முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்

செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்

சிந்தையில் வைப்பீரே கோனாரே (9)

என்னும் பாடல் மேற்கொள்ளும் பணி செம்மறியாட்டை மேய்ப்பதாகவே இருந்தாலும், அதனிடையே இறையாண்மையைச் சிந்தனை செய்தல் இயலுவதே என்பதை முன்னிறுத்துகிறது.


மெய்வாய் கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை

வீறுஞ் சுவையொளி யூறோசை யாம்காட்டை

எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்

ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (27)

பற்றிரண் டும்அறப் பண்புற்றேன் நண்புற்றேன்

பாலையும் உட்கொண்டேன் மேலையாம் கண்கண்டேன்

சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்

சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன் (28)

என்னும் பாடலில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் ஐந்து ஆடுகளாகக் குறிப்பிடுகிறார் இடைக்காடர்.

ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை

ஓட்டியே ஊதுகுழல் - கோனே

ஓட்டியே ஊதுகுழல் (101)

என்னும் பாடலில் மாந்த உயிர்களை ஆட்டுக் கூட்டங்களாகவும் தீவினைகளைப் புலிகளாகவும் உருவகம் செய்து புலி ஆட்டை வேட்டையாடும் நிகழ்வை ஓர் ஆடுமேய்ப்போனாக நினைவுகூர்கிறார்.

அந்தக் கரணமெ னச்சொன்னால் ஆட்டையும்

அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்

சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்

சாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (26)

என்னும் பாடலிலும் ஆட்டைத் தவறாது குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பாடல்களில் ஆட்டினை உவமை உருவகங்களாக எடுத்தாளல் பெரும்பாலும் காணலாகா ஒன்றாகும்.

நாராயணக் கோனார் கூற்றில், ‘பசுவேஎன்று விளித்துப் பசுவிடம் சொல்வதாக அமைத்துள்ளார்:

ஆதபகவனையே               பசுவே

அன்பராய் நினைப்பாயேல்

சோதி பரகதிதான்               பசுவே

சொந்தமது ஆகாதோ? (33)

தன்மனந் தன்னாலே            பசுவே

தாணுவைச் சாராதோர்

வன்மரம் ஒப்பாகப்             பசுவே

வையத்துள் உறைவாரே (45)

உயிர்களைச் சைவ சித்தாந்தம் பசு என்று குறிப்பிடும் தத்துவ விளக்கத்தைக் கடந்து, பசுவே என விளிக்கும் தன்மை மனங்கொளத்தக்கது.

மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி

வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே (13)

ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த

அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே (15)

என்னும் பகுதிகளில் மனத்தையும் ஆசையையும் மாடாக உருவகப்படுத்தக் காணலாம். பிற புலவர்கள் மனத்தைக் குரங்காகக் காட்ட இடைக்காட்டுச் சித்தர் அதனை மாடாகக் காட்டுகிறார்.

இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்

அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே (113)

அகங்கார மாடுகள் மூன்று அகற்றிவிடு கோனே - நாளும்

அவத்தையெனும் மாடதை நீ அடக்கி விடு கோனே (115)

ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக் கட்டு கோனே - உள்

உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக் கோனே (116)

மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக் கட்டுக் கோனே - மிக

முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய் கோனே (117)

முதலான பகுதிகளில் இருவினைகளையும், அகங்காரத்தையும் மும்மலங்களையும் என எல்லாவற்றையுமே மாட்டின் உருவாகக் கண்டு அவற்றை அடக்கும் தன்மையை கிடைகட்டுதலோடு ஒப்புநோக்குகிறார் இடைக்காடர்.

மாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும் வான்பொருளும்

வீடும் மணிகளும் பெண்பொன்னுஞ் செம்பொன்னும் வெண்கலமும்

காடுங் கரைகளும் கல்லாம் பணியுங் கரிபரியும்

தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே (23)

என்று நிலையாமை குறித்துச் சொல்லும் பாடலில் வீடு, மனை, மக்கள், சுற்றம், பொன், பொருள் ஆகிய பலவற்றைச் சுட்டினாலும் முதலாவதாக மாட்டினைச் சுட்டுதல் அதன்மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது எனலாம்.

பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுப் போலும்

நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப் போற்றீரே (50)

என்னும் பகுதியில் இறைத் தன்மையைப் பாலில் சுவைபோன்றது எனப் பலரும் குறிப்பிட்டாலும் இடைக்காடர் குறிப்பிடுவதில் அவருடைய தனித்துவம் மிளிர்வதாகவே கொள்வதில் தவறில்லை.

                குன்றுகள் சார்ந்த பகுதிகளில், ஆடுமாடு மேய்ப்போர் பெரும்பாலும் குன்றுகளின் மீதிருந்து கால்நடைகள் மேய்வதைக் கண்காணித்தல் வழக்கமாகும். இறையை உணர்ந்து அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்கியான மயம், ஆனந்தமயம் என்று சொல்லப்படுகின்ற ஐந்து கோசங்களைக் கண்டு குன்றின்மீதிருந்து ஆடு என்று உரைக்கின்ற,

ஆறா தாரத்தெய் வங்களை நாடு

அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு

கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு

கோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு (32)

என்னும் இடைக்காடர் பாடல் குன்றேறி மேய்ச்சலைக் கண்காணிக்கும் செயலை எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது.

மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற - மலை

மேலேறிக் கொண்டோம் என்று தும்பீபற (77.2)

என்னும் பகுதியும் மேற்சுட்டிய கருத்தை வலியுறுத்துகிறது.

                மட்டிக்குணமுள்ள மாரீச நாய்களைக்

கட்டிவைத்து ஊதுகுழல் - கோனே

கட்டிவைத்து ஊதுகுழல் (103)

கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்

கிட்டாவென்று ஊதுகுழல் - கோனே

கிட்டாவென்று ஊதுகுழல் (103)

என்னும் பகுதிகளில் ஐம்புலன்களைக் கட்டுக்குள் வைத்திடல் வேண்டும் என்ற தத்துவத்தை முன்மொழிந்தாலும் நாய்களைக் கட்டிவைத்துப் பழக்கி அவற்றைக் கிடையின் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தும் செயலை இடைக்காடர் பயன்கொள்ளும் பாங்கு எண்ணி இன்புறத்தக்கது. ஐம்புலன்களை நாய்களாக உருவகப்படுத்துவதும் இடைக்காடனாரின் முன்முயற்சி எனலாம்.

சாவாது இருந்திடப் பால்கற - சிரம்

தன்னில் இருந்திடும் பால்கற

வேவாது இருந்திடப் பால்கற - வெறு

வெட்ட வெளிக்குள்ளே பால்கற (107)

என்ற பால்கறத்தல் என்னும் தலைப்பிலமைந்த பாடல் குண்டலினி சக்தியை நிலைநிறுத்தும் தன்மையைப் பால்கறத்தலோடு ஒப்பிட்டு நோக்குகிறது. வெட்ட வெளிக்குள்ளே பால்கற (107.1), வயிறார உண்டிடப் பால்கற (108.2), கலசத்தினுள் விழப் பால்கற (110.2) முதலான பகுதிகள் உள்ளார்ந்த தத்துவங்களை அடக்கிநிற்கும் அதேவேளையில் பால்கறத்தல் நிகழ்வின் பன்முகச் செயல்களைக் காட்சிப்படுத்துகின்றன எனலாம்.

புல்லாங்குழலூதல் (96-106), பால் கறத்தல் (107-112), கிடை கட்டுதல் (113-130) முதலான தலைப்புகள் மாடு மேய்ப்போர் செயல்களையே நினைவுபடுத்துகின்றன.

காடுசார் கருப்பொருட்கள்

                மலை, காடு முதலான இயற்கையில் வாழுகின்ற உயிரினங்களான பாம்பு முதலியவற்றை அவ்விடங்களில் பயில்வார் அடிக்கடி எதிர்ப்படல் இயல்பு. இத்தகைய உயிரினங்கள் படைப்பாளரின் படைப்புகளில் எவ்வாறேனும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு விடுகின்றன. அவ்வகையில்,

சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவுஞ்

சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே (14)

பெட்டியிற் பாம்பெனப் பேய்மனம் அடங்க

ஒட்டியே ஊதுகுழல் - கோனே

ஒட்டியே ஊதுகுழல் (104)

என்னும் பகுதிகளில் முறையே சினத்தையும் மனத்தையும் பாம்பாகக் குறிப்பிடுகிறார் இடைக்காடர்.

அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற - பர

மானந்தம் கண்டோம் என்று தும்பீபற (77.1)

என்னும் பகுதி உள்ளிட்ட தும்பீ பறஎன்றமைந்த பாடல்கள் (77-82), வெளிகளில் தும்பிகள் பறந்திடும் காட்சியை இடைக்காடர் கண்டுணர்ந்த அனுபவத்தை வெளிப்படுத்துகின்றன எனலாம்.

சிறுதவளை தான் கலக்கிற் சித்திரத்தின் நிழல் மறையும்

மறுவாயைத் தான் கலக்கின் மதிமயங்கும் மடவனமே (90)

காற்றின் மரமுறியும் காட்சியைப்போல் நல்லறிவு

தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மடவனமே (91)

குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல்

வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே (93)

எனவரும் பாடற்பகுதிகள் குளத்தில் சிறுதவளைகள் பாய்ந்து சலனமற்ற நிழலோவியத்தைக் குலைத்தல்காற்றால் மரங்கள் முறிதல், குளவி புழுவைத் தன் கூட்டில்வைத்துக் காத்துக் குளவியாக்கல் முதலான இயற்கைநிகழ் செயல்பாடுகளைப் பதிவுசெய்கின்றன. ஆடுமாடுகளை மேய்ப்போர் வனாந்தரங்களில் சுற்றித்திரியும்போது காணும் காட்சிகள் இவை என்பது சொல்லாமலேயே விளங்குவதாகும்.

கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே - கெட்ட

காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே

சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே - நிறை

சந்தோட மாகவே கூவுகுயிலே (83)

ஆடுமயிலே நடமாடு மயிலே - எங்கள்

ஆதியணி சேடனைக் கண்டு ஆடுமயிலே

கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றும்

குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே (87)

அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்

பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே (92)

என்றும் பாடல்கள் காடு முதலிய இயற்கையில் திரியும் ஒருவர் காணுகின்ற பறவை இனங்களை அடிப்படையாகக் கொண்டமைகின்றன. குயிலொடு கிளத்தல் (83-86), மயிலொடு கிளத்தல் (87-89), அன்னத்தொடு கிளத்தல் (90-95) ஆகிய தலைப்புகளில் இடைக்காடர் அமைத்த பாடல்கள் இயற்கைக்கும் அவருக்குமான நெருக்கத்தைப் பதிவுசெய்கின்றன எனலாம்.

                மேற்கூறியவற்றால் படைப்பாளரின் வாழும் சூழ்நிலைக்கும் படைப்புப் பின்னலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதையும் பாடுபொருள் எதுவாக இருந்தாலும் அதற்கேற்றாற்போல் தம் வாழியலைப் பயன்கொள்ளும் பாங்கினைப் படைப்பாளர் கைவரப்பெறுவார் என்பதனையும் அறிந்துகொள்ள முடிகிறது. எனவே தன்அனுபவம் படைப்பில் பெரும்பங்கு வகிக்கிறது என அறுதியிட்டுரைக்கலாம்.

பயன்நூல்

சித்தர் பாடல்கள், மறு பதி., சென்னை : மணிவாசகர் பதிப்பகம், 1998.

 

Wednesday, 25 September 2019

மு.வ. படைப்பில் பெண்


மு.. படைப்பில் பெண்

            பேராசிரியர் மு.வரதராசனார் தமது காலகட்டத்தில் நிலவிய மேலைநாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளைப் போக்குகளை நன்கு அறிந்தவர். அச் சிந்தனைகள் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஊடுருவத்தொடங்கிய நிலையில் மரபுக்கும் புதுமைக்குமான போராட்டத்தில் பெண்கள் அடைகின்ற சில சிக்கல்களை நுணுகிநோக்கி அதனைத் தம் படைப்புகளின் வாயிலாகச் சமுதாயத்திற்குப் புலப்படுத்த முனைந்துள்ளார். அவருடைய நெஞ்சில் ஒரு முள் புதினம் வடிவு என்னும் ஒரு பெண்பாத்திரத்தின் மூலமாகப் பெண்ணியச் சிந்தனைகளையும் பெண்களுக்கு நேரும் இன்னல்களையும் முன்வைக்கிறது. இப்புதினத்தின் மூலம் மு.. புலப்படுத்த நினைத்த சிந்தனைகளைக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.
கதைச்சுருக்கம்
                நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவள் வடிவு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்லப் பரவி வந்த பெண்கல்வியினால் பெற்றோர் அவளைப் பி.. வரை படிக்கவைக்கிறார்கள். அவளுடைய திருமணத்திற்கு அவளது படிப்பே தடையாக அமைகிறது. அவளது கல்விநிலைக்கு ஒத்த மணமகன் கிடைக்காமையால் விஜயா என்னும் பெண் மூலமாக தன்னைவிட இருமடங்கு வயதான ஒரு பணக்காரனுக்கு இரண்டாம்தாரமாக வாழ்க்கைப்படு கிறாள். அவனோடு மனம் பொருந்தாத நிலையில் தான் கல்லூரியில் படித்தபோது பழகிய காதலனைச் சந்திக்கநேர்ந்து நெறிபிறழ்கிறாள். அதனால் கருத்தரிக்க அதன் பின்னர் தன் கணவனோடு வாழ்ந்து குழந்தையைப் பெற்றுவளர்த்துப் படிக்கவைக்கிறாள். மகனுக்குத் திருமணம் செய்யவேண்டிய வேளையில் கணவன் இறந்து விடுகிறான். தன் மகன் தன் காதலனின் மகளையே காதலிப்பதை அறியும் வடிவு அவர்கள் திருமணத்தைத் தடுக்கப் போராடுகிறாள். உடன்பிறந்தவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தடுக்கப்பெற்றதைக் குறிப்பாகப் புலப்படுத்துவதுடன் புதினம் நிறைவடைகிறது. நெஞ்சில் ஒரு முள்ளாகத் தான் செய்த தவறு உறுத்துவதை வடிவு என்னும் கதாபாத்திரம் உரைப்பதாக இப்புதினம் அமைகிறது.
துன்புறும் பெண்மாந்தர்
            இக்கதையில் இடம்பெறும் பெண்மாந்தர் பலரும் பல்வேறுபட்ட சிக்கல்களால் அலைக்கழிக்கப்படுபவர்களாகப் படைக்கப்பெற்றுள்ளனர். கதைத்தலைவி வடிவு காதல் தோல்வி, பொருந்தாத் திருமணம், நெறி பிறழ்தல் ஆகியவற்றால் துன்புறுகிறாள். வடிவிற்கு வேலை கொடுத்துத் திருமணமும் செய்துவைக்கும் விஜயா என்பவளும் இளம் வயதில் காதலித்து நெறிபிறழ்ந்து தன் காதலனால் கைவிடப்பெற்று அவன்மூலம் பெற்ற குழந்தையுடன், தன்னைவிட இருமடங்கு வயதுடைய சொரூபநாதர் என்பரை இரண்டாம் தாரமாக மணந்து வாழ்கிறாள். விஜயாவின் மகள் கிந்திராவும் பல்வேறு குடும்பச் சிக்கல்களால் பைத்தியமாகி இறக்கிறாள். கிந்திராவின் மகள் கீதா திருமணமாகாமல் குழந்தை பெறு கிறாள். பேராசிரியர் மங்கையர்க்கரசியார், கிந்திராவின் தோழி பார்வதி ஆகியோர் திருமணமாகாத முதிர்கன்னி களாக இருக்கின்றனர். இவ்வாறு சிக்கலுடைய பெண் மாந்தரைப் படைப்பதன் வாயிலாகப் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சிக்கல்களை வெளிப்படுத்து வதற்குரிய களத்தை மு.. வடிவமைத்துள்ளார் எனலாம்.
பாலியல் சுதந்திரம்
            விஜயா பாலியல் சுதந்திரத்தைப் போற்றுபவளாகப் படைக்கப்பெற்றுள்ளாள்.
நீங்கள் ஆங்கிலப் பள்ளிக் கூடங்களில் கல்லூரிகளில் படித்தவர்கள். ஆங்கிலக் கதைகளையும் நாடகங் களையும் படித்தவர்கள். படித்தும் இப்படிப் பழங்காலம்போல் இருந்தால், உங்கள் கதி என்ன? பழங்காலம் போல் எந்த அத்தைபிள்ளை, அம்மான் பிள்ளை உங்களை மணம் செய்துகொள்ள வருகிறான்? (54-55)
என்று கூறும் விஜயா தன் இரண்டு மகள்களையும் ஆடவருடன் கலந்து பழகுமாறு தூண்டுகிறாள்.
சேகர் என்று ஒரு பிள்ளை வரவில்லையா? அவனுடன் நண்பன் ஒருவனும் காலையில் வந்தான். கிந்திரா அவர்களோடு புறப்பட்டாள். சந்திராவையும் உடன்போய் வருமாறு நானே வற்புறுத்தி அனுப்பினேன். மாமல்லபுரத்திற்கு யார் யாரோ போகிறார்களாம். இவர்களும் போய் வரட்டும் (56)
என்னும் பகுதியில் விஜயாவின் செய்கை மேல்தட்டுப் பெண்களிடையே காணப்படுகின்ற சுதந்திரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
            விஜயாவின் மூத்த மகள் கிந்திரா மேனாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளின் பாதிப்பால் சேகர், கோபாலன் இருவரிடமும் நெருங்கிப் பழகுகிறாள். சேகரிடம் எல்லைமீறிப் பழகி, திருமணத்திற்கு முன்பே நான்கு முறை கருக்கலைப்பும் செய்கிறாள். அதை அவளும் அவளது தாயும் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் சேகரை விட்டுவிட்டு வசதியுள்ள கோபாலனைத் திருமணம் செய்துகொள்கிறாள். திருமண வாழ்க்கைக்குப் பிறகும் கிந்திரா பெண்மைக்குரிய மரபில் குடும்பத்தைச் செலுத்தவில்லை.  குதிரைப்பந்தயம் முதலியவற்றில் தன் கணவனோடு ஈடுபட்டு அத்தனைச் சொத்துகளையும் இழக்கிறாள். அவளுடைய கணவனும் அவளைவிட்டு நீங்குகிறான். இறுதியில் அவள் பைத்தியம் பிடித்து மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பெற்று அங்கேயே இறந்துபோகிறாள். அவளது மூத்த மகள் கீதாவும் ஒருவனைக் காதலித்து ஏமாந்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள்.
            கிந்தராவின் மூலமாக எல்லைதாண்டும் பாலியல் சுதந்திரம் பெண்களைப் பொறுத்தவரையில் துன்பத்தையே தேடித்தரும் என்பதை மு.. நுட்பமாகப் புலப்படுத்துகிறார்.
பெண்ணுரிமை பற்றிய எண்ணம், ஒழுக்கக்கேட்டின் உரிமை தேடும் அளவிற்கு வளர வேண்டுமா என்றும், மேற்கு நாட்டுப் படிப்பும் பழக்கமும் இவ்வாறு நம் நாட்டுப் பெண்களின் மனங்களை மாற்றியுள்ளனவே என்றும் எண்ணினேன். (63-64)
என்ற வடிவின் சிந்தனை ஓட்டத்தின்மூலம் பாலியல் சுதந்திரம் தேவையற்ற ஒழுக்கக்கேட்டையே ஏற்படுத்தும் என்ற மு..வின் கருத்தை அறியமுடிகிறது.
                மாதர் கழகத்தில் பெண்ணுரிமை பற்றிய பிரான்சு நாட்டுப் பெண்மணியின் பேச்சும் அதைத்தொடர்ந்து விவாதமும் நடைபெறுவதாக வரும் புதினப் பகுதியில்,
உரிமை என்றால் ஓர் ஆண் இரண்டு மூன்று பெண்களை மணந்துகொள்ள உரிமை இருப்பதுபோல் ஒரு பெண்ணும் இரண்டு மூன்று ஆண்களோடு வாழ்வதற்கு உரிமை இருக்கவேண்டும் அல்லவா? (66)
என்று ஒருத்தி கிண்டலாகக் கேள்வி கேட்கிறாள். அப்பொழுது மற்றொரு பெண், "இதற்கு உரிமை கேட்க வேண்டாமே. இப்போதே சில பெண்கள் அப்படி வாழ்கிறார்களே". (66) என்று விவாதத்தைத் தொடர்கிறாள். அதைக்கேட்டு வேறொருத்தி, அதைச் சமூகம் குற்றமாகக் கருதுகிறதே (67) என்கிறாள். இத்தகைய உரையாடலின் மூலம் பெண்கள் சிலர் பாலியல் சுதந்திரம் வேண்டுமென்று கருதுவதை மு.. முன்வைக்கிறார். அச் சுதந்திரம் தேவையற்றது என்பதை பிரான்சுப் பெண்ணின் விடையில்,
ஆனால், அது காட்டுமிராண்டித்தனம். ஒருவன் ஒருத்தி என்று வாழ்வதுதான் நாகரிகம். பொருத்தமில்லை யானால் விட்டு விலகுவதற்கு இருசாரார்க்கும் உரிமை வேண்டும் (67)
என்று கூறி முடிக்கிறார். மணவிலக்கு உரிமை தேவையானது என்பதையும் பாலியல் சுதந்திரம் என்பது தேவையற்ற விலங்குத்தன்மை என்பதையும் மு.. இங்கு வெளிப்படுத்தக் காணலாம்.
பெண்கல்வி
                பெண்களுக்குக் கல்வி தேவை என்பதைப் பல அறிஞர்களும் வற்புறுத்துகிறார்கள். ஆனால் சமுதாயம் கல்வி என்பது அறிவை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையைச் செம்மையாக்க உதவும் ஒரு கருவி என்பதை மறந்து அதனைத் திருமணத்தோடு தொடர்புபடுத்தித் துன்புறுவதை மு.. எடுத்துரைக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்கல்வி பெண்ணின் திருமணத்திற்குப் பெருந்தடையாய் இருந்ததை மறுக்கமுடியாது.
அந்த ஏழைப் பெண்ணைப் போன்ற வாழ்க்கை எனக்கு வாய்ப்பதற்குத் தடையாக இருந்தது செல்வம் அல்ல, பி.. என்ற இரண்டு எழுத்துத்தான் எனக்குத் தடை என்று சொல்லலாம். நான் படித்த படிப்பு, நல்ல பதவியிலும் வருவாயிலும் உள்ள குடும்பத்து இளைஞர்களை மட்டுமே தேடும் நிலைமையை உண்டாக்கிவிட்டது.  அப்படிப்பட்ட குடும்பங்கள் நூற்றுக்கு ஒன்று இரண்டுதானே? அந்தக் குடும்பங்களையே நாடினார் என் தகப்பனார். அந்தக் குடும்பத்தார்களோ, ஒரு படித்த பெண் மட்டும் வீட்டுக்கு வந்தால் போதும் என்று எண்ணவில்லை. அவளுடன் ஐம்பதினாயிரம் பெறும் நகையும் இருபதினாயிரம் முப்பதினாயிரம் பணமும் வரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள், அவ்வளவு தொகைக்கு என் தந்தை என்ன செய்வார்? (23)
என்று கூறும் வடிவு ஊரூராக அலைகின்ற ஈயம்பூசும் ஓர் ஏழைப் பெண்ணுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய குடும்ப வாழ்க்கை தனக்கு அமையாமையை எடுத்துரைக்கிறாள்.
                பி.. வரை படித்த வடிவு தனக்கு நிகராகவோ அல்லது தன்னைவிடப் படித்தவனாகவோ தன் கணவன் அமையவேண்டும்; அவன் நன்றாகச் சம்பாதிப்பவனாகவும் அமையவேண்டும் என்ற எண்ணத்தில் பல வரன்களைத் தட்டிக்கழிக்கிறாள். படித்தவனாக இருந்தால் அவன் சொற்ப வருமானமுடையவனாக இருக்கிறான். படித்தவனாகவும் வசதியானவனாகவும் வரும்போது அவனுக்கு ஈடாகச் சீர்செய்யும் வசதி வடிவின் பெற்றோருக்கில்லை. வசதியுடையவனாக இருக்கும் பட்சத்தில் தன்னைவிடக் குறைந்த படிப்புடையவனை ஏற்றுக்கொள்ளவும் மனம் வரவில்லை. இப்படியே அவளுடைய வயது இருபத்தெட்டாகிறது. கடைசியில் எப்படியாவது திருமணம் முடிந்தால் போதுமென்ற ஏக்கம் ஏற்பட அவளைவிட இரண்டுமடங்கு வயதுடைய ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள்.
படிப்பு இல்லாமலே ஒழுங்காக வாழ்வைநடத்தி அமைதியோடு மகிழும் ஏழை எல்லம்மாவின் வாழ்க்கையைப் போற்றுகிறேன். அவளுக்குப் புத்தகம் பல அறிமுகம் ஆகவில்லை. உலகமும் அவளுக்குத் தெரியாது. வீடு தெரியும்; தெரு ஒருவாறு தெரியும்; குடும்பக் கடமைகள் நன்றாகத் தெரியும். குழந்தைகள் அவளுடைய நெருங்கிய உறவு; கணவனே அவளுடைய பற்றுக்கோடு. இப்படி இருந்தால், அப்படிச் செய்திருந்தால் - இதுவரை மணக்காமலிருந்திருந்தால், அவரை மணந்து கொண்டிருந்தால் - இப்படிப்பட்ட எண்ணங்களே இல்லாமல் அவள் அமைதியாக வாழ்க்கை நடத்துகிறாள். (14)
என்று தன் வயதொத்த உறவுக்காரப்பெண் எல்லம்மாவின் வாழ்க்கையைப் பார்த்து ஏங்கும் வடிவு, தன் திருமண வாழ்க்கைக்குத் தன் பட்டப்படிப்பே தடையாகிவிட்டதாக எண்ணுகிறாள்.
உரிமையும் நன்மையும் இயைந்து வராமல் அவற்றினிடையே ஒருவகைப் போராட்டம் இருந்து வருகிறது. . . . பெண்ணுரிமை என்பதும் இப்படிப் பட்டதுதானே? தீமைக்கு வழிவகுத்து வைத்து, மனம் போனபோக்கில் அலையவிட்டுவிட்டு, நன்மையை ஒதுக்கிவிடுகிறதோ? இதுதான் உரிமையின் விளைவோ? (16)
என்று பெண்ணுரிமையால் சில நன்மைகளைக் கண்ணுக்குத் தெரியாமல் இழந்துவிடுவதாக எண்ணுகிறாள்.
                அவளைப்போன்றே பி.. படித்து ஆசிரியர் பயிற்சியும் முடித்து ஆசிரியப்பணி செய்யும் பார்வதி திருமணம் ஆகாமலேயே வாழ்க்கை நடத்துகிறாள்.
                வடிவின் கல்லூரிப் பேராசிரியர் மங்கையர்க் கரசியாரும் படிப்பின் காரணமாகத் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமரமாகநின்று குடும்பவாழ்க்கைக்கு ஏங்கும் தன்மையைக் காணமுடிகிறது.
எப்படியோ திருமணத்தை மட்டும் நிறுத்தாதீர்கள். நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்கு இப்படி அறிவுரை சொன்னவர்கள் இல்லை. படிப்பு இருக்கிறது. சம்பளம் இருக்கிறது என்ற செருக்கோடு திருமணம் வேண்டிய தில்லை என்று சொல்லிவிட்டோம். இவள் அப்படிச் செய்யக் கூடாது. திருமணம் வேண்டாம் என்று தள்ளுவதில் பயன் இல்லை என்று இப்போது நான் சொல்கிறேன். அனுபவப் பட்டவர்கள் எல்லாரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்றார். (33-34)
என்று கூறும் மங்கையர்க்கரசியார் இரண்டாம் தாரமாக இருந்தாலும் பரவாயில்லையென்று மணம்செய்து கொடுக்குமாறு வடிவின் பெற்றோருக்கு அறிவுறுத்துகிறார்.
நடுத்தர வகுப்புக் குடும்பங்களில் கல்லூரிகளில் கற்றுப் பட்டம்பெற்ற இளைஞர்கள் பலர்க்கு உற்ற வயதில் திருமணம் ஆவதில்லை. அவர்களுள் முப்பது முப்பத்தைந்து வயது ஆனபிறகும் திருமணம் ஆகாத ஆண்கள் உண்டு; பெண்களும் உண்டு. திருமணம் ஆகாதவர்களில் ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. பட்டம் பெற்ற பெண்கள் பலர் திருமணம் ஆகாமலே காலம் கழிக்கும் நிலையில் உள்ளனர். (32)
என்று நடப்பியல் உண்மையைப் பெண்மை வாழ்க என்னும் நூலில் மு.. குறிப்பிடுகிறார்.
                கல்விக் குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் தன்னைவிடப் படிப்பில் குறைந்த ஆடவனை ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளும்போது வேறுவகையான சிக்கல் தோன்றுகிறது. அப்பெண் இயல்பாக ஏதாவது ஒன்றைச் சொன்னாலும் அவளுக்குப் படித்த திமிர் என்று கணவனும் பிறரும் கூறுவதையும் நடப்பியலில் காணமுடிகிறது. கதைத்தலைவி வடிவும் சிலநேரங்களில் தன் கருத்தை எடுத்துக்கூறியபோது அவளுடைய கணவனின் முகத் தோற்றத்தைப் பார்த்து, ‘படித்த பெண் ஆகையால் திமிரோடு பேசியதாக எண்ணுகிறாரே என்று வருந்திக் கொண்டிருந்தேன்’. (170) என்று கூறுவது பெண்களின் இருதலைக் கொள்ளி எறும்பாகும் நிலையை எடுத்துரைக் கிறது.
                மேற்கூறியவற்றால் பாலியல் சுதந்திரம் எல்லை மீறலாகாது என்பதையும் பெண்கல்வி பற்றிய சரியான கண்ணோட்டம் சமுதாயத்தில் இன்னும் ஏற்படவில்லை என்பதையும் மு..வின் நெஞ்சில் ஒரு முள் புதினம் உணர்த்துவதை அறிந்துகொள்ள முடிகிறது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 118-127.