Thursday, 31 March 2022

Covid Poem கொல்லும் கொரோனாவை வெல்லும் மனிதஇனம்

 

கொல்லும் கொரோனாவை வெல்லும் மனிதஇனம்

                                                                               

 எத்தனையோ நோய்உலகில் வந்த துண்டு

என்றேனும் இதனைப்போல் கண்ட துண்டா?

அத்திக்குள் நுழைகின்ற பூச்சி போலே

அதம்செய்து நுழைகிறதே இந்த வைரஸ்

பித்தரைப்போல் உலகினரும் மருட்சி கொள்ள

பிடரியிலே அமர்ந்தேதான் துரத்து தம்மா!

எத்தர்களால் உருவாகி வந்த தாமோ?

எவரிதனைக் கொண்டுவந்து பரப்பி விட்டார்?

 

அச்சத்தின் உச்சத்தில் உறைந்து நின்றோம்

அழிக்கவொண்ணா கிருமியினால் மருகி நின்றோம்!

இச்சைகளை முற்றிலுமாய்த் துறந்து நின்றோம்

இறுமாப்பு உடையோரும் அடங்கி நின்றார்!

பிச்சையெனக் கைகளையே ஏந்து கின்றோம்

பிறவியிலே புதுமையிதைக் காணு கின்றோம்!

மிச்சமுள காசுகளை எண்ணி எண்ணி

மிதக்கின்றார் கண்ணீரில் நாளை எண்ணி!

 

முகக்கவசம் போட்டேதான் இருக்க லானோம்

முகங்கொடுத்துப் பேசிடவும் அஞ்சு கின்றோம்!

நகக்கண்ணில் தொற்றுவரும் கார ணத்தால்

நாடுகிறோம்சானிடைசர்துய்மை காக்க!

சிகைவெட்டக் கடைகளுமே திறக்க வில்லை

சிறுதொழில்கள் ஒன்றேனும் தப்ப வில்லை!

பகைவந்தால் எதிர்நிற்கும் வீர ருண்டு

பரவுகின்ற கொரோனாமுன் நிற்பா ருண்டோ?

 

ஊர்விட்டு ஊர்வந்து வேலை செய்வார்

ஊரடங்கு நடைமுறையால் தவித்துப் போனார்!

ஆர்வந்து தம்துயரைத் தீர்ப்பா ரென்று

அங்கங்கே பிரிந்துநின்றார் சொந்த பந்தம்!

தேர்இழுத்துத் தெருவினிலே விட்ட தைப்போல்

தேம்புகிறார் உலகத்தில் பிரிந்தி ருப்போர்!

சேர்கின்ற நோக்கத்தில் நடந்து போனார்

செத்தாரே நடுவழியில் சோகம் அந்தோ!

 

பார்முற்றும் பலியாகும் உயிர்க ளாலே

படிப்பினையே இன்றேனும் பெறுதல் வேண்டும்!

பேர்பெற்ற வல்லரசே தவிக்கக் கண்டோம்

பின்னும்நாம் அசட்டையாய்த் திரிய லாமோ?

ஊர்சுற்றும்புள்ளிங்கோஉணர வேண்டும்

உற்றாரைத் தொடுவதையே தவிர்க்க வேண்டும்!

சீர்பெற்று மீண்டும்நம் பணிகள் செய்ய

சிந்தித்து நமைக்காக்கத் தனித்தி ருப்போம்!

Tuesday, 29 March 2022

அன்பு கனிந்த கனிவே

 

அன்பு கனிந்த கனிவே

நுண்ணுயிரிப் பெருந்தொற்றுப் பரந்த போதும்

நேர்நின்று பிணியாளர் தம்மைக் காக்கக்

கண்போன்ற தம்மகவைப் பிரிந்து வந்தார்

கணவனினும் கடமைக்கே முதன்மை தந்தார்

மண்ணுலகில் செவிலியரை அன்பின் வார்ப்பாய்

மதிக்கின்றோம் அதிலெதுவும் ஐயம் இல்லை

விண்சென்றார்; பிறருயிரைக் காத்துத் தந்தார்

வீரரன்றோ; அன்பாலே கனிந்தார் அன்றோ!

 

ஊரடங்கால் ஆயிரத்தோர் பணிகள் இன்றி

உளங்குன்றி உணவின்றி உழன்றார் அந்தோ!

பாரடங்கி நின்றிட்ட அந்த நாளில்

பதைப்புற்று உதவிசெய வந்தார் பல்லோர்

ஈரத்தை இதயத்தில் குவித்தா ரெல்லாம்

இன்பமுடன் சேமிப்பைச் செலவு செய்தார்

நேரத்தில் அவர்தந்த உணவை உண்டு

நெஞ்சத்தால் வாழ்த்தினரே அன்பைக் கண்டு!

 

குழந்தைகளும் சில்லறைகள் குவித்துத் தந்தார்

குறைவின்றி உண்டியலை உடைத்துத் தந்தார்

மழலையரின் அன்புளத்தைக் கண்டோ ரெல்லாம்

மனமற்ற தன்னிலைக்கு வெட்கி நின்றார்

வழங்குகின்ற வதுவைக்காம் காசைக் கூட

வனிதையர்கள் வழங்கினரே வறுமை தேய

இழப்பதற்கு எதுவுமிலா ஏழைக் கூட்டம்

இவர்போன்றோர் அன்பாலே வாழ்கின் றாரே!

 

தெருவெல்லாம் திரிகின்ற நாய்கள் உண்ணத்

தருகின்றார் ரொட்டிகளை வாங்கி வந்து

இருளுற்ற கண்களுக்கு வழியைக் காட்ட

இருக்கின்றார் அன்புடையோர் கருணை சிந்தி

தருவாக நின்றிங்கே நிழலைச் செய்யும்

தறுகண்மை மிக்கவர்கள் பல்லோர் உண்டு

உருள்கின்ற புவியினிலே எங்கும் எங்கும்

உருவாகும் இடரிலெலாம் அன்பே வெல்லும்!

 

அன்பினையே அளக்கின்ற கோலும் உண்டோ

ஆழத்தில் அகலத்தில் எல்லை உண்டோ?

என்பினையும் உருக்குகின்ற ஆற்றல் உண்டு

எல்லையிலா அதைக்காணும் கண்கள் உண்டு

துன்பத்தில் கைகொடுக்கும் ஒருவர் வந்தால்

துயரமிகு தற்கொலைகள் இனியும் உண்டோ?

மன்பதையில் அன்பின்றேல் வாழ்க்கை இல்லை

மணவினையின் அடிப்படையும் அதுவே யன்றோ!

 

புலிப்பறளைப் பாலூட்டி நாயும் காக்கும்

புல்வாயைச் சிங்கமது நக்கிப் போக்கும்

வலிகண்டு துடிக்கின்ற மந்தி தன்னை

வனவிலங்கும் அன்பாலே காவல் காக்கும்

பலிவாங்க எண்ணாத விலங்கும் உண்டு

பண்பாலே அவைகூட உதவும் நன்று

நலிகின்ற துன்பங்கள் விரட்டும் போதும்

நானிலத்தில் அன்பொன்றே கனிவாய் ஆளும்!

*

Wednesday, 9 September 2020

வில்லியம் கோல்டிங்

 William Golding

வில்லியம் கோல்டிங்

(19.9.1911 - 19.6.1993)

தந்தை பள்ளியாசிரியர்

தாயும் பணிக்குச் சென்ற பாவை

அதனால்தான்

கல்வி அவருக்குக்

கற்கண்டாய் இனித்தது!

 

குழந்தைப் பருவத்தில்

தாய் சொன்ன

தேவதைக் கதைகள்

கற்பனைச் சிறகைக்

கட்டிவிட்டன!

 

பட்டப் படிப்பின் படித்துறை

இவருக்குக் கவித்துறையானது!

பட்டம் பெறும்போதே

கவிதைத் தொகுப்பொன்று

வெளிவந்து

மாணவனைக்

கவிஞனாகக் காட்சிப்படுத்தியது!

 

ஆங்கில இலக்கியத்தை

ஆழங்கால் பட்டதால்

பள்ளி ஆசிரியராய்ப்

பரிமளித்தார்!

 

இரண்டாம் உலகப்போரில்

கப்பற்படையில்

வீரராய்க் கால்பதித்துக்

கடல் அளந்தார்!

 

கப்பற்படை அனுபவங்கள்

கடலுக்கடியில் வட்டம்

கடல்குதிரை

முதலான கதைகளுக்குக்

கரு அளித்தன!

 

பித்தளைப் பட்டாம்பூச்சி

அவருடைய இறப்பிற்குப் பின்னர்தான்

அச்சிலேறி பறக்க ஆரம்பித்தது!

இரட்டை நாவும்

அவர் இறப்பிற்குப்பின்

பேச ஆரம்பித்து

பிறரைப் பேசவைத்தது!

 

நோபல் பரிசு

இந்த

பிரித்தானிய நாவலாசிரியர்

இலக்கியத் தொண்டின்

இலக்கானது!

 

புக்கர் பரிசும்

கோல்டிங் எழுத்துக்கு

புகழ் சேர்த்தது!

 

எண்பத்தோரு அகவை வாழ்ந்த

இந்த

பிரித்தானிய நாவலாசிரியர்

பிரித்தானியாவின்

ஐம்பது தலைசிறந்த

நாவலாசிரியர்களின்

பட்டியலிட்டால்

மூன்றாம் நபராய்

முன்னணி வகிப்பவர்!

 

அறிவியல் புதினம்

வரலாற்றுப் புதினம்

சாகசப் புதினம்

மேடை நாடகம்

கவிதை

என்று

அத்துணைக் களத்திலும்

கால்பதித்தவர்!

 

ஆங்கில இலக்கியத்தில்

இவர் கணக்கில்

பன்னிரு புதினங்கள்

பங்களிப்பு செய்தன!

 

‘பெண்ணே ஆக்கும் சக்தி’

என்ற

இவரது கவிதை

பெண்குலத்திற்கு

இவரிட்ட பொன்னாரம் மட்டுமல்ல

புகழாரமும் கூட!

Tuesday, 21 January 2020

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 36


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 36
'கொழந்த அப்பாவ உரிச்சிகிட்டுப் பொறந்திருக்கு' அனைவரும் சொல்லிச் சொல்லிப் பூரித்தனர்.
'சுந்தரி செல்லம்! செல்லம்மா! குட்டிம்மா! டார்லிங்!' உருகினான் சந்திரன்.
மெல்லக் கண்களைத் திறந்துபார்த்தாள் சுந்தரி.
அவள் தலையை வருடிக் கொடுத்தான். முகத்தில் முத்தமழை. அவள் தியாகத்திற்கு அவன் கொடுத்த பரிசு.
செய்தி அறிந்தாள் தாட்சாயணி. அவளுக்கு உண்மை நிலவரம் நன்றாக விளங்கியது. அவளுடைய ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதன் புள்ளிகள் இனி உயர வாய்ப்பே இல்லை.
     சற்றே தெளிவடைந்தாள் சுந்தரி. 'இதோ பாருங்க! நீங்க ஏன் என்னக் காப்பத்தனீங்க? என்னக் காப்பாத்த முயற்சி பண்ணாதீங்கன்னு முதல்லயே நான் சொல்லலையா, அப்படி இருக்கும்போது ஏங்க என்னக் காப்பத்தனீங்க?'
அடுத்த கட்ட நடிப்பைத் தொடர்ந்தாள் சுந்தரி. குழந்தைக்குப் பால் கொடுக்கமாட்டேன் என்றாள்.
'இதோ பாருங்க! இந்தக் கொழந்த அக்காவுக்கு மட்டும்தான் சொந்தம். அதனால இந்தக் கொழந்தைக்கு என் பால கொடுக்கமாட்டேன். என் பால குடிச்சுட்டான்னா அதுக்கே பழக்கமாயிடுவான். அவனுக்கு இப்போதே புட்டிப்பால் கொடுத்துப் பழக்கிடுங்க. நான் இவன் பொறந்தப்பவே செத்திருக்கணும். ஆனா என்னக் காப்பாத்திட்டீங்க. நான் பண்ணின சத்தியம் என்னாவறது? என்னால எழுந்திருக்க முடியலையே? எழுந்திருக்க முடிஞ்சா இப்பவே எங்கயாச்சும் கண் காணாத எடத்துக்குப் போயிடுவேன். அக்கா வாழ்க்கையில தலையிடவே மாட்டேன்!' - புலம்பினாள்.
'பச்சை உடம்புக்காரி இப்படி அனத்தக் கூடாது' என்று அண்ணி கண்டித்தாள்.
தாய் உயிரோடு இருக்கும்போது தாய்ப்பால் இன்றிக் குழந்தை மறுக்கப்படுவது கொலைக்கு நிகரானது என்ற நிதர்சன உண்மை அவனுக்கு உணர்த்தப்பட்டது.
குழந்தைக்குப் பால் ஊட்டுமாறு வற்புறுத்தினான் சந்திரன். ஏதோ வேண்டா வெறுப்பாகத் தருவதுபோல் பால் கொடுத்தாள். 'பாருங்க ஒங்க கொழந்தய! எப்படிப் பால் குடிக்குது?' என்று இடையிடையே சொல்லவும் அவள் தவறவில்லை.
'இதோ பாருங்க! எல்லாம் நான் எழுந்து நடமாடற வரைதான். நான் டிஸ்சார்ஜ் ஆயிட்டேன்னா நான் ஏற்கெனவே வாக்குக் கொடுத்த மாதிரி என் தாலிய காளியாத்தா உண்டியல்ல போட்டுட்டு கிருஷ்ணா ராமான்னு கண்காணாத எடத்துக்குப் போயிடுவேன்'.
பதினைந்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.
தாட்சாயணி குழந்தை பெற்றுக்கொள்ளாத மலடியாதலால் அவளுக்குக் குழந்தையைச் சரியாகத் தூக்கத் தெரியாது, கழுத்தில் உரம் விழுந்துவிடும் என்றெல்லாம் அண்ணியும் சுந்தரியும் சந்திரனிடம் கூறி அக்குழந்தையைத் தாட்சாயணி தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர். அருகில் நெருங்கவோ, பார்க்கவோகூட தாட்சாயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவை எதுவும் சந்திரன் கண்களுக்கும் படவில்லை, அறிவுக்கும் எட்டவில்லை.
(தொடரும்)

Monday, 13 January 2020

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 35


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 35
நாளை மாலை டெலிவரி ஆகிவிடும். நீங்கள் மருத்துவமனையில் இன்றே அட்மிட் செய்துவிடுங்கள் என்று சுந்தரியைச் செக்கப் செய்த டாக்டர் கூறினார்.
சுந்தரி, சந்திரனைவிட தனக்கு எப்பொழுது விடிவுகாலம் வரும் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்த தாட்சாயணிக்கு மனத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.
ஆனால் அம் மகிழ்ச்சி உண்மையில் மனத்தில் எங்கே இருக்கிறது என்று அவளால் உணர முடியவில்லை. அழுகிய முட்டையில் மஞ்சட்கரு வெள்ளைக்கருவில் கலங்கிக் காணப்படுவதைப்போல் சந்தேகத்தில் சிக்கிக்கொண்டது மகிழ்ச்சி. இது சாத்தியமா? இது சாத்தியமா? என்று நிமிடத்திற்கு நூறு தடவை மனம் கேட்டது.
பதில் இரண்டு நாளில் தெரிந்துவிடும்.
சந்திரன் சொன்னதுபோல் நடந்தால் இன்னும் இரண்டு நாளில் இப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
மருத்துவமனையில் தானும் சுந்தரியுடன் இருக்கப் போவதாகக் கூறினாள் தாட்சாயணி. இனி அக் குழந்தையை ஏற்றுத் தன் குழந்தையாக வளர்க்க வேண்டும்? என்ன இருந்தாலும் அது தன் கணவனின் இரத்தமல்லவா?
இவ் விஷயத்தைக் கேட்டதும் சுந்தரிக்குத் திக்கென்றது. தான் டெலிவரியாகி மயக்க நிலையில் இருக்கும்போது தான்சொன்ன தியாக சத்தியத்தை நினைவுபடுத்திச் சந்திரனின் மனத்தைத் தாட்சாயணி கலைத்துவிட்டால் என்னசெய்வது?
'நீதானே குழந்தை பெற்றுக்கொடுத்ததும் விலகிக்கொள்கிறேன் என்றாய்?' என்று சந்திரன் தன்னைநோக்கி வினா தொடுத்தால்? அவனுக்கு என்ன பதில் சொல்லமுடியும்?
குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை அவன் கை கழுவிவிட்டால் என்ன செய்வது?
இன்னும் முடிச்சுகளை இறுக்கிப் போடவேண்டும். அவ்வாறு போடப்படும் முடிச்சுகள் அவனால் எளிதில் அவிழ்க்கப்பட்டு விடக்கூடாது. முடிச்சுகளும் வெளியில் தெரியக் கூடாது.
'என்னங்க. . . , அக்கா என்கூட இருக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இது அவங்க கொழந்த, அவங்க தன் குழந்ததைய மொதல்ல பாக்க வேணாமா? அவங்களும் என்மேல இருக்கற கோவத்த எல்லாம் வுட்டுட்டு இப்ப வரேன்னு சொல்லும்போது மனசு அப்படியே சந்தோஷத்துல மிதக்குது.
அதுமட்டும் இல்லிங்க. கொழந்தயக் கொடுத்துட்டு, இதோ பாருக்கா. . . !நான் ஒனக்குச் செஞ்ச சத்தியத்தக் காப்பாத்திட்டேன்! இத உன் கொழந்தையா வளத்துப் பெரிய ஆளா ஆக்கு, நான் இப்போ கடவுள்கிட்ட போறேன்னு சொல்லிட்டு அக்கா மடியில அப்படியே தலைய வெச்சு உசுர விட்டுடணும்னு ஆசையாயிருக்கு!'
'என்ன இப்படியெல்லாம் பேசற? ஒனக்கு ஒன்னும் ஆகாம நாங்க பாத்துக்குவோம்டா . . .  நீ பேசாம இரு குட்டிம்மா!'
'இல்லிங்க, நான் அதுக்குச் சொல்லல, ஆனா நான் இத தியாகமாதான் செஞ்சாலும் அக்கா என்ன இத்தன நாளாப் புரிஞ்சுக்கல, என்னப் புரிஞ்சுக்காம சரியா சாப்புடாம, தூங்காம ரொம்ப எளைச்சுட்டாங்க. அதனால அக்காவுக்கு நான் என்ன அறியாம கஷ்டம் கொடுத்துட்டேன்ற குற்றஉணர்ச்சி என்னை வாட்டிக்கிட்டே இருக்கு. இப்படி இருக்கும்போது பிரசவ நேரத்துல அவங்க என்கூட இருந்தா அவங்க ஒடம்பப் பாத்துப்பாத்து நான் ரொம்ப வேதனப்படுவேன். அதனால உங்கக் கொழந்தைக்கு ஏதேனும் ஆயிடுமோன்னு பயமா இருக்குங்க. கொழந்த பொறந்த அடுத்தநொடியே அவங்க வந்து பாக்கட்டும். நான் ஒன்னும் தடை சொல்லல, ஆனா. . . இப்ப என்கூட வரவேணாங்க!' – தழுதழுத்தாள் சுந்தரி.
சுந்தரி தாட்சாயணி மீதுகொண்ட பாசம் சந்திரனை நெக்குருகச் செய்தது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தைப் படித்துப் பக்தர்கள் எப்படி நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் சொரிவார்களோ அப்படி சுந்தரியின் பேச்சைக் கேட்கக்கேட்கச் சந்திரன் நெஞ்சு உருகினான்.
'நீ ஒன்னும் சங்கடப்படாத சுந்தரி, உன் தியாக குணத்தப் பத்தி எனக்குத் தெரியாதா? நான் தாட்சாயணி கிட்ட பக்குவமாச் சொல்லிடறேன். நீ இப்ப அந்தத் திருப்பதி பாலாஜிய மட்டும் நெனக்சுக்கோ!'
'ஆமாங்க, நான் சொன்ன மாதிரி பாலாஜியே வந்து பொறக்கப் போறான். அதுவும் அவனுக்கு உகந்த சனிக்கிழமைல, அவனுக்குப் பாலாஜின்னு பேர் வெச்சிடுங்க, நான் அவனப் பாப்பேனோ? மாட்டேனோ?'
'அய்யோ! அப்படிப் பேசாத என் சுந்தரி செல்லம்!' – செல்லமாகக் கண்டித்தான் சந்திரன்.
தாட்சாயணி மருத்துவமனையில் உடனிருப்பது தடை செய்யப்பெற்றது. என்றாலும் அவ்வப்போதைய சுந்தரியின் உடல் நிலவரத்தைக் கேட்டு அவள் அறிந்துகொண்டாள்.
'நார்மல் டெலிவரி ஆகிவிடும்' என்று டாக்டர் கூறினார். சிசேரியன் செய்தால் தனக்கு லாபம் கிடைக்கும் என்று சில டாக்டர்கள் நார்மல் டெலிவரியைச் சிசேரியன் ஆக்குவதுண்டு. அவ்வப்போது இப்படிப்பட்ட மகப்பேறு மருத்துவர்களை இனம்காணும் தருணங்களில் மக்கள் கூக்குரலிடுவதும், அவர்களைத் திட்டிப் போஸ்டர் ஒட்டுவதும் நடைமுறையில் காண்பதுண்டு. ஆனால் சுந்தரியின் டாக்டர் திருமதி டிஸோஸா உண்மையிலேயே கருணை உள்ளம் கொண்டவர்; காசுக்கு ஆசைப்படாதவர்; திறமையானவர். அவர் சொன்னால் சொன்ன நேரத்திற்குக் குழந்தை பிறக்கும் என்பார்கள்.
சுந்தரிக்கு நார்மல் டெலிவரிதான் என்று திட்டவட்டமாகச் சொன்னார் அவர்.
ஆனால் சுந்தரி மாலைநேரத்தில் நல்லநேரம் இல்லை என்றாள். அவன் காலை ஏழுமணிக்குப் பிறந்துவிட வேண்டும் என்றாள். தனக்குச் சிசேரியன் செய்து அக்குழந்தையை எடுத்துவிடவேண்டும் என்று அடம்பிடித்தாள். அப்படித்தான் அசரீரி சொன்னதாகச் சொன்னாள். டிஸோஸா வற்புறுத்தல்களை எல்லாம் அசட்டை செய்தாள்.
'நார்மல் டெலிவரியே ஆயிடும்னு டாக்டர் சொல்றப்போ ஏன் தேவையில்லாம வயித்த அறுக்கணும்னு அடம்பிடிக்கிறே!' – உருகினான் சந்திரன்.
'நான் வாழணும்னு ஆசைப்பட்டாத்தானே நார்மல் டெலிவரி ஆகட்டும்னு காத்திருப்பேன். ஆனா நான் உங்களுக்காக, அக்காவுக்காகத்தான் இந்தக் குழந்தையையே பெத்துக்குடுக்கப் போறேன். அப்புறம் என் உசுரப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? நான் பெத்துக் கொடுக்கப்போற புள்ளய இந்த உலகமே தெய்வமா நினைக்கும், அவன் ஒரு யுக புருஷனா இருப்பான், ராமன்மாதிரி, கிருஷ்ணன் மாதிரி, விவேகானந்தர் மாதிரி, நான் சொல்றது நடக்குதா இல்லையான்னு பாருங்க!'
கேட்ட சந்திரனுக்குப் புல்லரித்தது. சுந்தரி நிஜமாகவே தியாகசீலிதான். அவளை ஒரு சதவீதம்கூட சந்தேகிக்க முடியாது. இவளைப்போய் தாட்சாயணி நம்ப மறுக்கிறாளே! இப்படிப்பட்ட அபூர்வப் பெண்ணை நாம் புராணங்களில்தான் பார்க்கமுடியும்!'
நூற்றுக்குத் தொண்னூறு குழந்தைகள் சிசேரியன் மூலம்தான் நலமாகப் பிறக்கின்றன என்பது சுந்தரிக்குத் தெரியும். சிசேரியன் செய்துகொண்டவர்கள் நார்மல் டெலிவரி ஆனவர்களைக் காட்டிலும் இறப்புப் பயம் இல்லாமல் இருக்கலாம் என்பதும் அவளுக்குத் தெரியும். மேலும் நார்மல் டெலிவரியானால் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். சிசேரியன் செய்தால்தான் பத்துப் பதினைந்து நாட்கள் மருத்துவமனையிலே காலந்தள்ள முடியும். சந்திரனையும் பச்சாதாபப்பட வைக்கமுடியும். சந்திரன் சரியான மரமண்டை என்பதைச் சுந்தரி எப்போதோ கண்டுபிடித்துவிட்டாள்.
நார்மல் டெலிவரிக்கு ஒத்துக்கொள்ளாமல் சிசேரியன் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்திய அவளது தியாகத் தன்மையை தாட்சாயணிக்கு எடுத்துரைத்துச் சிலாகித்தான் சந்திரன். தாட்சாயணியின் மனத்தில் உவாமுள் நெருடியது. ஏதோ ஒரு பயங்கரத்திட்டத்தை வகுத்துவிட்டாள் சுந்தரி. ஆனால் எதைச் சொன்னாலும் சந்திரன் மயக்கத்திலிருந்து மீளப் போவதில்லை. அவன் சுந்தரியின் நன்கு வடிவமைக்கப்பட்ட நடிப்பு என்ற பிரௌன் சுகர் அருந்தி மயங்கிக் கிடக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
திரைப்படத்தில் பாத்திரங்களின் நடிப்பில் மயங்கி அதனை உண்மையானது என்று எண்ணி நாம் கண்ணீர் வடிப்பதில்லையா, அப்போது நாம் கற்பனைக் கதையொன்றைப் பார்க்கிறோம் என்னும் உண்மையையே மறந்துவிடுகிறோமே, அதுதான் நடிகர்களின் வெற்றி.
சுந்தரியும் கைதேர்ந்த நடிகையானாள். அவள் நடிப்பில் சந்திரன் ஒரு மாய உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் காணும் உலகம் பொய்யானது என்று சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
சுந்தரியின் விருப்பப்படியே சிசேரியன் மூலம் குழந்தை நல்லபடியாகப் பிறந்தது. முன்பே ஸ்கேன் பார்த்து ஆண் குழந்தை என்று தெரிந்துதான்வைத்திருந்தார்கள். இருந்தாலும் பிரசவம் முடிந்ததும் வெளியே வந்த நர்ஸ் ஆண்குழந்தை என்றதும் புதிதான செய்தியொன்றைக் கேட்டதுபோல் அங்கேயிருந்தவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
'பாலாஜி! பாலாஜி!' ஆனந்தத்தில் கூவினான் சந்திரன்.
சுந்தரியின் நினைவு வந்தது.
'சுந்தரி! சுந்தரி!' துடித்தான்.
'அவங்களும் சௌக்கியமா இருக்காங்க சார்! கொஞ்சம் மயக்கமா இருப்பாங்க, நீங்கபோய் டிஸ்டர்ப் பண்ணாமப் பாருங்க'.

(தொடரும்)

Thursday, 5 December 2019

வைக்கம் முகம்மது பஷீர் - தோப்பில் முகம்மது மீரான் சிறுகதைகளில் தன்வரலாற்றுப் பதிவுகள்


வைக்கம் முகம்மது பஷீர் - தோப்பில் முகம்மது மீரான் சிறுகதைகளில் தன்வரலாற்றுப் பதிவுகள்













        மலையாளச் சிறுகதை உலகில் வைக்கம் முகம்மது பஷீருக்கென்று முதன்மை இடமுண்டு. அவருடைய படைப்புகளைப் படித்தும் மொழிபெயர்த்தும் பஷீரின் சாயலில் தம் படைப்புகளைத் தமிழில் படைத்தவர் தோப்பில் முகம்மது மீரான். இருவரும் அடிப்படையில் இசுலாம் சமயத்தினர். இருவருமே இசுலாத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தாலும் இசுலாமியரால் பின்பற்றப்பெறும் காலத்திற்கொவ்வாத பழ மரபுகளை எதிர்த்தவர்கள். அதனால் தம் கால உறவுகளால் பல துன்பங்களுக்கு உள்ளானவர்கள். இவ்வாறு இருவருக்கிடையேயும் இழையோடும் ஒற்றுமைகள் அவர்தம் படைப்புகளிலும் இழையோடுவதைக் காணமுடிகிறது. எனவே, அவர்கள் இருவரின் படைப்புகளையும் ஒப்புநோக்குதல் பொருத்தமானது; தேவையானதும் கூட.
பஷீர் ஏறக்குறைய நூறு சிறுகதைகளைப் எழுதியுள்ளார். 1945இல் ஜென்ம தினம் எழுதினார். ஓர்மக் குறிப்பு, அனர்க நிமிஷம், விட்டிகளோடே சொர்க்கம், பாவப்பட்டவரோடே வேசியா, விசுவ விக்கியாதமாய மூக்கு, விசப்பு, ஒரு பகவத் கீதையும் குறெ முலைகளும், ஆனப்பூட, சிரிக்குன்ன மரப்பாவ, பூமியுடெ அவகாசிகள், சிங்கடி முங்கன், யா இலாஹி முதலானவை பஷீரின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.
மீரான் எழுதிய முதல் சிறுகதை பூவும் பூக்கூடையும் என்பதாகும். எனினும் 1968இல் பிறை இதழில் நரகபூமி என்ற சிறுகதையே முதன்முதல் வெளியானது. அதற்குப் பிறகு சுமார் 35 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பின்னர் அவரது 48ஆம் வயதில் அடுத்த கதை வெளிவந்தது.
கதைக்கரு
கதைக்கருவைப் பொறுத்தவரை இருவரும் தம் அனுபவங்களைப் படைப்புகளில் பயன் கொண்டனர். தன் சொந்த வாழ்வின் சாரத்திலிருந்தே பஷீர் தன் படைப்புகளை உருவாக்கினார். (பவா செல்லதுரை, 169) என்று பஷீரின் கதைக்கரு பற்றி பவா செல்லதுரை கருத்துரைக்கிறார்.
இசுலாமியரின் கல்வியறிவு, குடும்ப உறவுகள், பெண் முன்னேற்றம், விழிப்புணர்வு ஆகியவற்றை பஷீர், மீரான் இருவரும் தம்படைப்புகளில் மையப்படுத்தினர்.
கதைமாந்தர்
இருவரின் படைப்புகளிலும் அவர்களும் அவர்தம் சுற்றமும் நட்பும் சமகாலச் சமூக மாந்தரும் இடம்பெறுகின்றனர்.
உலக இலக்கியம் இன்றளவும் நாயகர்கள் எனக் கொண்டாடும் வேசிகள், குற்றவாளிகள், திருடர்கள், கூட்டிக் கொடுப்பவர்கள் இவர்களே பஷீரின் கதாநாயகர்கள். அவர்களுள் சுரக்கும் ஈரக்கசிவைப் பஷீர் தம் கதைகளால் ஸ்பரிசித்தார். (பவா செல்லதுரை, 170) என்று பஷீரின் கதைமாந்தர் குறித்துப் பவா செல்லதுரை எடுத்துரைக்கிறார்.
தன் வரலாற்றுப் பதிவுகள்
சமயம் வாய்க்கும்போதெல்லாம் மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் முன் நிகழ்ந்தனவற்றைப் பிறரிடம் சொல்லி மகிழ்வதும் வருந்துவதும் அங்கலாய்ப்பதும் பெருமிதப் பட்டுக்கொள்வதுமாகக் காலங்கழிக்கின்றனர். அவற்றில் பலவிதமான சுவாரஸ்யமான தகவல்களும் இடம்பெறலாம். சமுதாயத்திற்குத் தேவையான அனுபவங்களும் வெளிப்படலாம். காலங்காலமாகப் போற்றப்படவேண்டிய செய்திகளும் இருக்கலாம். வரலாற்று நிகழ்வுகளும் தடம்பதிக்கலாம். அக்காலத்திய பண்பாடு போன்றவையும் வாழ்க்கைக் கட்டமைப்புகளும் சொல்லப்படலாம். நிலவியல் அமைப்புகள் போன்றவையும் ஆராயப்படலாம். ஆனால் அவை அனைத்தும் பேச்சளவில் நின்றுபோய் காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடுகின்றன. எனினும் சிறந்த படைப்பாளர்கள் இத்தகைய தம் வாழ்வில் நிகழ்ந்த சிறுசிறு செய்திகளையும் தம் படைப்புகளின் மூலமாகப் பதிவுசெய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர் எனலாம். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளைக் கதையோட்டத்தில் நயமாக வெளிப்படுத்திவிடுகின்றனர். தங்கள் வாழ்க்கை வரலாற்றையும் வாய்க்குந்தோறும் ஆவணப்படுத்திவிடுகின்றனர்.
அவ்வகையில் வைக்கம் முகமது பஷீர், தோப்பில் முகமது மீரான் இருவருமே தம் வாழ்க்கைப் பதிவுகளைச் சிறுகதைகளில் அடையாளம் காட்டிவிடுகின்றனர். அப்படைப்புகளின் வழியாக இருவர்தம் வாழ்க்கையினைக் கட்டமைக்க இயலும் எனலாம்.
பிறப்பும் இளமையும்
பஷீர், மீரான் இருவரது இளமைக் காலத்திலும் ஒற்றுமை இழையோடுகிறது. இருவரும் வணிகப் பின்புலம் உடையவர்கள்.
பஷீர் ஜனவரி 21, 1908இல் திருவிதாங்கூரில் பிறந்தார். தந்தை காயி அப்துல் ரஹ்மான்; தாயார் குஞ்ஞாச்சும்மா. இவருடன் பிறந்தோர் மூன்று ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண்பிள்ளைகளுமாவர். பஷீரின் தந்தை மரவியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினார். எனினும் இடையே வணிகம் நொடித்துப்போக வறுமை ஆட்கொண்டது.
தேங்காய்ப் பட்டணத்தில் 1944, செப்டம்பர் 26இல் மீரான் பிறந்தார். பெற்றோர் தமது பிறந்தநாளைக் குறித்து வைக்காததால் தமது உண்மையான பிறந்த நாள் தெரியாது என்று மீரான் தம் கதை மூலமாகப் பதிவு செய்கிறார். அம்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்காக தாம் படித்த அரசு ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கும்போதுதான் பதிவேட்டில் அவருடைய பிறந்தநாள் பதியப்படாதது தெரியவந்தது. பெற்றோருக்கும் அந்த தேதி ஞாபகத்தில் இல்லை. குத்துமதிப்பாக இந்தத் தேதியை வாசுபிள்ளை சார் குறித்ததாகப் பதிவுசெய்கிறார் மீரான். தன் பிறந்தநாள் குறிக்கப்பட்ட சூழலை,
ஒண்ணு செய்வோம். அஞ்சு வயசில் பள்ளிக்கூடத்தில் சேர்த்ததுபோல ஒரு ஆண்டு, மாசம், தேதியைக் கணக்குப் பண்ணிப் போட்டு டி.சி.யைக் கொடுப்போம். மத்தது பிறகு பார்ப்போம். அரை கிளாஸ் வாசு பிள்ளை சார் சொன்ன யோசனை ஹெட்மாஸ்டருக்கும் பிடித்திருந்தது. கையிருன்னிஸாவைக் குட்டிம்மா பிரசவித்த ரஜப் பத்துலுமல்ல; வாப்பாவின் கணக்குப்படி சித்திரை மாதம் நெத்தோலி பட்ட நாளிலுமல்ல; அரைகிளாஸ் வாசுபிள்ளை சார் கணித்துப் போட்ட ஆண்டு மாதம் தேதியில் என் உம்மா என்னைப் பிரசவித்தாள்! 26.9.1944இல்! பிறந்த ஆண்டு, மாதம், தேதி தெரிந்துகொண்ட மனக்களிப்புடன் டி.சி.யைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தேன். அம்சி உயர்நிலைப் பள்ளியில் ஒண்ணே கால் ரூபாய் முதலில் சேரும்போது கட்ட வேண்டும். (மீரான், பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு, 427-28)
என்று பதிவுசெய்கிறார் மீரான்.
மீரானுடன் சேர்த்து இவர் பெற்றோர்க்குப் பதினான்கு பேர் மகவுகளாவர். இவர் தந்தை கருவாட்டு வியாபாரம் செய்தார். கன்னியாகுமரியில் கருவாடு வாங்கி, அதனை இலங்கை முதலான இடங்களில் விற்றுப் பெரும்பொருள் ஈட்டினார். பின்னர் நண்பர்களின் ஏமாற்றுதலால் பொருளிழந்து வறுமையில் வீழ்ந்தார்.
பிறந்த இடத்தின் பதிவு
ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த மண் எத்தகைய தரத்தோடு இருந்தாலும், அதுவே அவருக்குப் பிடித்தமான இடமாக மனத்தில் பதிந்துவிடுகிறது.
நாங்கள் நடக்கும் வழி - ராஜபாதைதான். ஆனால் தார்ரோடல்ல. பாதையின் இருபுறமும் மரங்கள். இடையிடையே வீடுகளுமிருந்தன. வழிப்பாதையில் வாகனங்கள் எதுவுமில்லை. ஆட்களின் சஞ்சாரமெல்லாம் அப்போது நடந்துதான். (பர்ர்ர்...! , மூக்கு 297-98)
என்று தமது இருப்பிடத்தையும் அன்றைய வாழ்நிலையையும் பதிவுசெய்கிறார் பஷீர்.
மீரான் தமது கிராமத்தைப் பற்றியும் அங்கிருந்து தெரியும் சூரியன் தோன்றும் பாறை மற்றும் ஊசிக் கிணறு பற்றிய நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறார். ஊசிக்கிணற்றைப் பாதுகாக்கும் பாம்பு எதிரே தோன்றி பெயரைக் கேட்கஎனக்கப் பேரு மீரான். வீடு தோப்பில்” (161) என்று பதிலிறுக்கிறார்.
நாலு மூட்டுத் தென்னையும் கொஞ்சம் பனைமரங்களும் முந்திரி மரமும் ஒரு பின்னை மரமும்தான் எங்கள் தோப்பிலுள்ள மரங்கள். முன்னொரு காலத்தில் புலி பதுங்கியிருந்த குகையும் அங்குண்டு. மனித வாடையை அறிந்தால் விரட்டிக் கொத்தும் கொடூரமான பாம்புகள் நிறைந்த கைதைக் காடும் பாறைக் கூட்டங்களும் அங்குண்டு. (மீரான், மொட்டைக் கடிதம், வேர்களின் பேச்சு, 137)
என்று தம் தோப்பினைச் சித்திரிக்கிறார்.
தம் ஊருக்கு அருகேயிருந்த சேண்ட பள்ளி என்னும் ஊர் குறித்த செய்திகளை மையமிட்டு கேள்வியின் விளிம்பில் (303-311), ஆதத்தின் மகன் மைதீன் பிள்ளை (112 - 16) முதலான சிறுகதைகளைப் புனைந்துள்ளார் மீரான்.
பிள்ளைப் பருவம்
ஆனைமுடி என்னும் சிறுகதை பஷீரின் பிள்ளைப் பருவத்தை மையமிட்டதாகும். தொடர்ந்து படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தினை மாற்றுவதற்காகக் கொம்பானையின் கீழ் தான் நடந்துசெல்லக் கட்டாயப் படுத்தப்பட்டதையும் தன் சிநேகிதி ராதாமணி கேட்டதற்காக ஆனைமுடியொன்றைப் பெறப் பஷீர் எடுத்த முயற்சிகளும் இக்கதையின் கருவாக அமைகின்றன. இவற்றை மையமிட்டுத் தமது பிள்ளைப் பருவக் குறும்புகள், குழந்தைமையில் மாதவிக்குட்டியின் பால் அருந்தியது, தம்பி அப்துல்காதருடனான பாசமிக்க மற்றும் முரண்பட்ட பொழுதுகள், அவர்களுடைய நண்பர்களான நத்துதாமு, ராதாமணி, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், ஆசிரியர் புதுசேரி நாராயணபிள்ளை, அக்காலத்தில் நாட்டை ஆண்டவர்கள், நாட்டுப் பிரிவினை எனப் பெயர்களுடனும் விவரங்களுடனும் இக்கதையில் பதிவுசெய்கிறார் பஷீர்.
தந்தையின் மரவியாபாரம் குறித்துப் பஷீர் தம் கதைகளில் பதிவுசெய்கிறார் (பர்ர்ர்...!, மூக்கு, 297).
அப்போதெல்லாம் நாங்கள் கண் விழிப்பதே ஆனையின் முகத்தில்தான். வாப்பா, தடி வியாபாரம் செய்யும் வியாபாரி. குடயத்தூர் மலையிலிருந்து தடிகளை வெட்டி, கட்டுகளாகக் கட்டி நதி வழியாகக் கொண்டுவருவார். வீட்டின் பக்கத்தில், நதிக்கரையில் தடிகளை இழுத்துப் போட்டு அடுக்கி வைப்பதற்குத்தான் இந்த ஆனைகள். வீட்டின் பக்கத்திலுள்ள தோட்டங்களில்தான் ஆனைகளைக் கட்டிப்போடுவது. அவற்றிற்குத் தென்னையோலைகள், பனையோலைகள் போன்றவற்றைக் கொடுக்கும் வேலையை நான் மேற்பார்வை செய்வேன். அதாவது பார்த்துக்கொண்டு நிற்பேன். (ஆனைமுடி, மூக்கு, 270)
என்று ஆனைமுடி கதையில் தந்தையின் மரவணிகம் குறித்து விரிவாகவே எடுத்தியம்புகிறார்.
உம்மாவின் ரூஹ் (255-263) என்னும் சிறுகதையில் தம் தாயைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் தம் தாய் பதின்மூன்று பிள்ளைகளைப் பெற்றதையும் (258) தாம் ஐந்தாவது மகனாகப் பிறந்த தகவலையும் (263) பதிவுசெய்கிறார் மீரான்.
அன்று இரவும் எப்போதும் போல் உம்மாவோடு சேர்ந்து படுத்துக் கொண்டேன். உம்மாவின் வாசம் அடித்தாதான் உறக்கம் வரும். வாயிலிருந்து வேப்பான புகையிலையின் வாசம். தலையிலிருந்து யானைக்குழி ஆசான் கொடுத்த நீரிறக்கத்திற்குள்ள தைலத்தின் வாசம். கல்யாண வீட்டுக்குப் போகும்போது உம்மா லாச்சுப் பெட்டியிலிருந்து எடுத்து அணியும் உடையிலுள்ள பாச்சா மருந்தின் வாசம்! இவைதான் உம்மாவின் வாசம். (மீரான், பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு,  424)
என்று தம் தாயோடு படுத்துறங்கியதையும் தன் மனத்தில் என்றும் நீங்காருதிக்கின்ற தாயின் வாசத்தையும் ஆவணப்படுத்துகிறார் மீரான்.
சூரியனைப் பிரசவிக்கும் பாறையில் மீரானின் இளமைக் காலத்து நிகழ்வு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மீரான், அவருடைய பெற்றோர், ஆசிரியர் - இவர்களே இக்கதையின் மாந்தராக இடம்பெறுகின்றனர். தம் பெயரையும் மீரான் இக்கதையில் பதிவுசெய்கிறார்.
நான் மூக்குச் சளியைப் புறங்கையால் துடைத்தேன். அந்தக் கையை நிக்கரில் தேய்த்துக்கொண்டு எழுந்தேன். பட்டன் இல்லாத நிக்கர் கழன்று விழாமல் இருக்கக் கையில் பிடித்துக்கொண்டேன். (சூரியனைப் பிரசவிக்கும் பாறை, 158)
என்று தம் பிள்ளைக் காலத்தைப் பதிவுசெய்கிறார் மீரான்.
            மீரான் அம்சி பள்ளிக்கூடத்தில் கல்வி கற்றார். அச் செய்தியையும் அப் பள்ளியில் படித்த காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வினையும் உம்மாவின் ரூஹ் என்னும் சிறுகதையில் பதிவிடுகிறார்.
அம்சி பள்ளிக் கூடத்தில் வள்ளியின் மகன் ராகவன் பயல் என்னோடுதான் படித்தான். என் மொட்டைத் தலையைப் பார்த்துக் கேலி செய்தான். ராகவன் பயலுக்கு ஓங்கி ஓர் உதை வைத்தேன் நெஞ்சாம் பலவை நோக்கி. மூச்சுவிடத் திணறி அப்படியே உட்கார்ந்துவிட்டான். பயந்துபோய்த் தலைதெறிக்க ஓடித் தப்பிவிட்டேன். மறுநாள் பள்ளிக்கூடம் செல்லும்போது வழிமறித்து நிற்கிறார்கள் - வள்ளி, ராகவன் பையன், அவன் அண்ணன் நீலாண்டனும் மாதவனும். வீட்டுக்கு ஓட முயன்ற என்னை எட்டிப் பிடித்தது மாதவன். நீலாண்டன் கையில் தென்னை ஓலை கீறுவதற்குள்ள பளபளக்கும் நீண்ட வலியாத்தி (பெரிய கத்தி). என் நெஞ்சாங்குலை நடுநடுங்கியது. அற்று விழுந்தது. ஊராளி, வெட்டினாலும் வெட்டுவான்! (மீரான், உம்மாவின் ரூஹ், வேர்களின் பேச்சு, 260)
என்று தமக்கும் தன் நண்பனுக்கும் நிகழ்ந்த சண்டையை விவரிக்கிறார். ஆனால் ராகவனின் தாய் வள்ளி மீரான் குழந்தையாக இருக்கும்போது தன் முலைப்பாலைக் கொடுத்து வளர்த்ததைச் சுட்டிக்காட்டி ஊறு நேராமல் விடுக்கிறாள்.
நீங்கொ பச்சப் பாலகனாட்டு இருக்கும்போ, நீங்கொ உம்மா நீங்களெ போட்டுட்டுப் போயிட்டாங்கொ. அப்போ நானாக்கும் தெவசவும் வந்து நீங்களுக்கு முலப்பாலு தந்தது. எக்கெ ராகவன் பயலுக்குள்ள பாலெயாக்கும் நீங்கொ குடிச்சியோ, அவனை நீங்கொ அடிக்கலாமா?” வள்ளி கண்களைத் துடைத்துத் தந்தாள். (மீரான், உம்மாவின் ரூஹ், வேர்களின் பேச்சு, 261)
என்று தமக்குப் பாலூட்டிய வள்ளியைப் பற்றிய குறிப்பையும் வெளிப்படையாகப் பதிவிடுகிறார். பஷீரும் தமக்கு மாதவிக்குட்டி பாலூட்டிய தகவலைப் பதிவிடுகிறார்.
நீ மாமிட்டே இருந்து பால் குடிச்சிருக்கே, இந்த மாதவிக் குட்டிட்டே இருந்தும் பால் குடிச்சிருக்கே.” (ஆனைமுடி, மூக்கு 283)
என்று தம் தாய் உரைத்ததாகப் பஷீர் குறிப்பிடுகிறார்.
கல்வி
பஷீர், மீரான் இருவருக்குமே பள்ளிக்கல்வி எளிதாய் அமையவில்லை.
பஷீரின் காலத்தில் இசுலாமியரிடையே மதக் கல்வியைத் தவிர பள்ளிக் கல்வி தடைசெய்யப்பெற்றிருந்தது. ஆங்கிலக் கல்வி இபுலீசின் மொழி என்றும் நரகத்து மொழி என்றும் பழிக்கப்பெற்றது. எனினும் இக் கொள்கைகளைப் பஷீரின் தந்தை ஏற்கவில்லை. தம் சமூகத்தினரின் எதிர்ப்புகளுக்கிடையே பஷீரை ஆங்கிலக் கல்வியில் சேர்ப்பித்தார். குர்ஆன் படித்ததுடன் வைக்கம் ஆங்கிலப் பள்ளியில் ஆங்கிலமும் இந்தியும் கற்றார் பஷீர். பஷீரின் சகோதரிகளும் மேல் சட்டையோடு முக்காடு அணிவிக்கப் பெற்று ஆங்கிலப் பள்ளியில் சேர்க்கப் பெற்றனர். விளைவாக இசுலாம் சமூகத்தினர் பஷீரின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தனர்.
சுதந்திரப் போராட்டத்தின் தீவிரத்தால் பஷீர் தம் கல்வியை நிறுத்தினார். 1925 மார்ச் 8இல் வைக்கம் போராட்டத்திற்காக காந்திஜி வைக்கம் சென்றபோது அவரது மேனியைத் தம் கைகளால் தொட்டுப் புத்தெழுச்சி பெற்றார் பஷீர். தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1930இல் உப்புச் சத்யாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.
தம் ஆரம்பக்கல்விக் காலத்தைப் பிறப்பின் விசித்திரம் (421-428) கதையிலும் உயர்நிலைப் பள்ளிக் கல்விக் காலத்தைக் குட்டன்பிள்ளை சார் (414-420) கதையிலும் பதிவுசெய்கிறார் மீரான்.
பள்ளி மாணவர்கள் எச்சில் கொண்டு சிலேட்டில் எழுதியதை அழிப்பதுபோல் தானும் துப்பல் தொட்டு அழித்த செய்தியையும் நுண்மையாகப் பதிவிடுகிறார் மீரான் (பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு,  422).
முத்தாரம்மன் கோவில் கொடை கொட்டுமேளமும் பெண் வேடம் கட்டிய ஆணின் கம்பாட்டமும் கியாஸ் லைட் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்ததில் வீட்டுப் பாடம் எழுதவில்லை. எழுதாமல் போனால் தொலைத்தோல் ¬ரைகிளாஸ் வாத்தியாரின் பூச்செடிக் கம்பில் ஒட்டி விடும். அந்த நெஞ்சுக் கலக்கத்தில் மறுநாள் பள்ளிக்கூடம் செல்லாமல் சாய்ஞ்ச மாமரத்தின் உச்சாணிக் கொம்பில் இலை மறைவில் உட்கார்ந்து கொண்டிருந்து பெய்த மூத்திரம், அங்குத் தேடி வந்த வாத்தியாரின் வழுக்கைத் தலையில் சாரலாக விழுந்து என்னைக் காட்டிக் கொடுத்தது. (மீரான், பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு,  423)
என்று தாம் செய்த குறும்புச் செயலையும் வெளிப்படையாகச் சொல்கிறார் மீரான்.
புத்தகத்தில் மயிலிறகு வைத்தால் அது குட்டி போடும் என்ற நம்பிக்கை எவ்வாறோ பள்ளி செல்லும் அனைத்துக் குழந்தைகளிடமும் காலங்காலமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகைய நம்பிக்கையை மீரானும் தம் சிறுவயதில் கொண்டிருந்தார் என்பதை,
முன்பின் பல பக்கங்கள கிழிந்து விட்ட கேரளப் பத்திய பாடாவலிக்குள் குட்டி போட வைத்த மயில் இறக்கை குட்டி போடவில்லை. என் புத்தகத்திற்குள் வைக்கப்பட்ட மயில் இறக்கையை மலடு என்றார்கள். (மீரான், பிறப்பின் விசித்திரம், வேர்களின் பேச்சு,  422)
என்று குட்டிபோடாத தமது மயிலிறகின் உண்மையை எடுத்துரைக்கிறார்.
இளமைப் பருவம்
பர்ர்ர்...! (மூக்கு 297-305) என்னும் சிறுகதை பஷீரின் பதிமூன்று பதினான்கு வயதில் இருபது வயது நங்கைமேல் நேர்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்துகிறது. அக்கதையில் தாமும் தம் தந்தையும் அணிந்த ஆடையைப் பற்றியும் தோற்றத்தையும் கீழ்வருமாறு பதிவுசெய்கிறார் :
கால்களில் செருப்பில்லை. ஒரு வௌ;ளை வேட்டி உடுத்தியிருக்கிறேன். சிவப்புக்கோடு போட்ட காலர் வைத்த வௌ;ளைச் சட்டை. தலைமுடியை ஒட்ட வெட்டியிருக்கிறேன். என் முன்புறம் வாப்பா நடந்து போய்க்கொண்டிருக்கிறார். நான் உடுத்தியதுபோன்ற உடைகள்தான் வாப்பாவும் உடுத்தியிருந்தார். தலையில் ஒரு தொப்பியும் ஒரு குடையும் அதிகமாக வைத்திருந்தார். (297)
அக்கதையில் அவர்கள் சென்ற இடப்பகுதிகளையும் கோடிட்டுக் காட்டுகிறார்.
இரவுக்காலத்தில் தோப்பில் தென்னங் குலைகள் களவாடப்படுதல் அடிக்கடி நிகழும் ஒன்றாகும். லருவாய்க்காக வளர்க்கப்படும் இத் தேங்காய்களின் இழப்பு குடும்பப் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறச் செய்யும். அதனால் தோப்புக்குரியவர்கள் களவாடுபவர்கள் மீது சினமும் ஆத்திரமும் கொள்ளுதல் இயல்பு. மீரானுடைய தோப்பிலும் இத்தகைய களவுகள் அடிக்கடி நிகழ்ந்திருக்கக் கூடும். அதனைச் சில கதைகளில் பதிவுசெய்யத் தவறவில்லை.
அந்தக் கள்ளப் பயலுவொளாக்கும் தேங்காக் குலையைக் களவாங்குது. பாத்தால் பாவம். திருட்டுப் பயலுவோ என்று சொல்லவே முடியாது. அவ்வளவு லட்சணமான தோற்றம். ஆனால் இந்தப் பகுதியிலுள்ள தேங்காய்க் குலைகளையெல்லாம் திருடிச் செல்வது இந்தக் கள்ளப் படுவாக்கள்தான். கையில் பிடி கிடைத்தால் ஒரே வெட்டு. கையையோ கழுத்தையோ வெட்டித் தென்னை மரத்தின் மூட்டிற்கு உரமாக வைக்கணும். மைதீன் பீவி பல்லை நெரித்தாள். (மீரான், கொலுசு அணிந்த பாதங்கள், வேர்களின் பேச்சு, 180)
என்று தம் கோபத்தை மைதீன் பீவி மூலமாகப் பதிவுசெய்கிறார் மீரான்.
இளமைக்கால நினைவின் ஏக்கப் பதிவு
காலங்கள் மாற மாறச் சூழலும் பண்பாடும் மனிதப் பண்புகளும் மாறவே செய்கின்றன. அதனால் பழைய காலத்தையும் தாம் பிறந்து வளர்ந்த இடத்தின் நினைவுகளையும் அசைபோடுதல் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழக்கூடிய ஒன்று. படைப்பாளர்கள் இத்தகைய நினைவுகளைத் தம் கதைகளில் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்திவிடுகின்றனர் எனலாம். சங்கப் புலவர் தொடித்தலை விழுத்தண்டினாரின்இனிநினைந்து இரக்கமாகின்றுஎனத் தொடங்கும் பாடல் (புறநானூறு 198) இத்தகைய ஏக்கத்தின் முதல் பதிவாகும். அவ்வகையில் பஷீரும் மீரானும் தம் இளமைக்கால நினைவுகளை நினைத்து ஏங்குவதைப் பதிவுசெய்துள்ளனர்.
எவ்வளவு நல்ல ஒரு பொற்காலம் அது. அந்தக் காலம் எங்கே... இந்தக் காலம் எங்கே... அப்போதெல்லாம் சூரியன் எவ்வளவு பிரகாசமாக இருந்தது. நிலவென்றால் அந்தக் காலத்திலுள்ளதுதான் நிலவு. பூக்களெல்லாம் எவ்வளவு அழகும் நிறமும். குயில்களின் கூவல்தான் அப்போதெல்லாம் எவ்வளவு இனிமையாக இருக்கும். ஆற்று நீர் எப்படித் தெளிந்தோடியது. எவ்வளவு மீன்பாடு. பறவைகளும் மலர்களும் பறப்பதும் அசைந்தாடுவதும் ஹோ, எவ்வளவு அற்புதமான காலம். எட்டு ஒன்பது வயதான நாங்கள்தான் உலகின் உயிர் மூச்சு. எங்களை வட்டமிட்டேதான் காலமும் சுழன்றுகொண்டிருந்தது. (ஆனைமுடி, மூக்கு, 272)
என்று இளமைக் காலத்தைக் குறிப்பிட்டு ஏங்குகிறார் பஷீர். சூரியனும் நிலவும் கூட சிறுவயதில் கண்டதுபோல் இல்லை என்று கூறி நயத்தை மிகுவிக்கிறார் ஆசிரியர்.
முகம்மது மீரான் தாம் பிறந்து வளர்ந்து இளமைக்காலத்தைக் கழித்த தேங்காய்ப் பட்டணத்தின் பழைய நிலவியல் தன்மையை நேற்று வந்த வழி என்னும் சிறுகதையில் மிக விரிவாகப் பதிவுசெய்கிறார்.
பன்னிரண்டு வயதில் ஊரைவிட்டு ஓடிச்சென்று அறுபத்தெட்டு ஆண்டுகள் கழித்துத் தம் எண்பது வயதில் உறவுகளைத் தேடிச் சொந்த ஊருக்குத் திரும்பும் முஸ்தபா என்பவரின் கதையாக நேற்று வந்த வழி என்னும் சிறுகதை பின்னப்பட்டுள்ளது.
புன்னமூட்டுக் கடையில் நின்னால் கொல்லக்குடி தெரியும். அவ்வளவு திறந்தவெளி.  இப்போ எல்லாம் புதுசு. பழசு ஒன்றையும் காணோம். ஒரு ரேகை கண்டுபிடிப்பதற்கு. (மீரான், நேற்று வந்த வழி, வேர்களின் பேச்சு,  88)
என்று இளமையில் தாம் வாழ்ந்த தேங்காய்ப் பட்டணத்தை முஸ்தபாவின் மூலமாக வெளிப்படுத்துகிறார். மேலும் பிறந்த மண் என்னும்போது ஏற்படுகின்ற சிலிர்ப்பையும் புலப்படுத்துகிறார்.
அப்போது ஒரு ஆப்பம் ஒரு காசு. பதினாறு காசு ஒரு சக்கரம். இரண்டு சக்கரம் ஒரு அணா. ஒரு அணா இன்றைய ஆறு பைசா. (மீரான், நேற்று வந்த வழி, வேர்களின் பேச்சு,  85)
என்று அன்றைய நடைமுறை வாழ்க்கையையும் ஆவணப்படுத்துகிறார்.
தம் பிறப்பு, பெற்றோர், உடன் பிறந்தார், மனைவி மக்கள், சுற்றத்தார் அவர்தம் பெயர்கள், பண்பு நலன்கள், வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகள், குறும்புகள், பொழுதுபோக்கு, ஈடுபாடு போன்றவற்றை வாய்க்குந்தோறும் இருவரும் பதிவுசெய்கின்றனர். படைப்பாளர்கள் இவ்வாறு தம் வாழ்க்கையைப் பதிவிடுதல் உண்டென்றாலும் இவ்விருவரின் கதைகளிலும் இத்தன்மை தூக்கலாகக் காணப்படுகிறது. தன் வரலாற்றைப் பதிவுசெய்யும் பஷீரின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்த தாக்கத்தால் மீரானும் இத்தகைய போக்கைக் கைக்கொண்டார் எனலாம். இருவரின் படைப்புகளிலும் ஒரே தன்மையதான நிகழ்வுகளின் பதிவுகளைக் காணமுடிகிறது. இசை, பயணம், சிறை வாழ்க்கை ஆகியவை பஷீரின் படைப்புகளில் மட்டுமே காணப்படுகின்றன. இப் பதிவுகள் இருவருக்குமான வாழ்க்கைப் பின்புலத்தின் வேறுபாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றன எனலாம்.
பயன் நூல்கள்
வைக்கம் முகம்மது பஷீர், உலகப் புகழ்பெற்ற மூக்கு, குளச்சல் மு. யூசுப் (மொ..), நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், 2008.
வைக்கம் முகம்மது பஷீர், அனல் ஹக், குளச்சல் மு. யூசுப் (மொ..), நாகர்கோவில் : காலச்சுவடு பதிப்பகம், 2015.
தோப்பில் முஹம்மது மீரான், வேர்களின் பேச்சு, புத்தாநத்தம் : அடையாளம் வெளியீடு, 2009.
எம்.என். காரச்சேரி, வைக்கம் முகம்மது பஷீர்,  தோப்பில் முகம்மது மீரான் (மொ.), புதுதில்லி : சாகித்திய அகாதெமி, 2010.
பவா செல்லதுரை, பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல, திருவண்ணாமலை, வம்சி புக்ஸ், 2016.